Monday 14 January 2013

அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து)


உந்தன் நினைவு வந்தால்
ஒரு கவியும் எழுகுதில்லை
எந்தன் இமை கவிந்து
இருள, துளியிரெண்டு
சிந்தி உன் சிரிப்பாய்
சிதறித் தெறிக்கிறது

எத்தனை யுகமாய் நான்
ஏந்தி வந்த புண்ணியமோ
இத்தினத்தில் இவ்வாண்டில்
எழுவன் என்று காத்திருந்து
அப்பனாய் எனைப்படைத்த
அழகேசா! எமக்கிடையில்
இப்படியே பேசாமல்
இரும்பாய் கடல் மலைகள்
தாச்சி விளையாடித்
தவிச்ச முயல் அடிச்சாலும்
நினைவுக்குள் நீயெழுந்து
நின்றால், உயிர் தவித்து
கூட்டைப் பிரித்துக்
குதித்துக் கடல் கடந்து
உன் காலைச் சுற்றித் தான்
ஓடித் திரியுதடா

உயிரங்கே போனபின்னால்
உதவாத ஐம்புலன்கள்
பதறுகின்ற புலம்பலினைப்
பற்றி, சொல்லாக்கி
ஏதோ பழக்கத்தில்
எழுதுதடா, மற்றபடி
உன்னைப் போல் மனசாகும்
உயிர் ததும்பும் கவிதையொன்றை
இன்றுவரை என்னாலே
எழுதிவிட முடியவில்லை

உன்னுடைய சிரிப்பில்
உறங்குகின்ற பேரழகில்
என்னை இழந்து விடும்
ஏதோவோர் உயிர்ப் பந்தம்
எத்தனை ஜென்மம் நான்
எழுதிக் குவித்தாலும்
பத்தியப் பட்டெனக்குள்
பாவாகா தென்பதனால்
ஆறாக உன் வாசம்
அடர்ந்து பெருகுகையில் வெறுங்
கீறு கூடப் பேனாவால்
கிழிக்க முடிவதில்லை

ஏனென்றே தெரியாமல்
இழுபடுமோர் இவ்வாழ்வில்
நான் படைத்த நல்ல உயிர்ப் பாட்டே
நீ இருக்க
வீண் தான் வெறும் பாட்டு
விடு..

2 comments: