Friday 18 January 2013

அடிப்பிடிச்ச வாழ்வும் அன்பும்..

அடிப்பிடிச்சு மணக்கிறது நிகழ்வாழ்வு
அன்போடும்
துடிப்புள்ள நாடி துவண்டு
துயரடைப்பால்
வெடிப்புண்டு கசிகிறது
வெங்குருதி, நாசிக்குள்
உடைப்பெடுத்த குருதி மணம்
ஊறி மணக்கிறது

அன்பென்ற மருந்து தனை
ஆறுதற் கரண்டியினால்
என்புருக ஊட்டி விடும்
இங்கிதத்தை எதிர்பார்த்து
என்புருகும் வாழ்க்கையிது
ஏதேனும் ஓர் சொட்டு
அன்பு மணக்காத்து
அடித்தால் பட்ட மனம்
இன்புற்றுத் தவிக்கும்
இதக் கணத்தின் வரத்துக்காய்
புண்ணாகிக் கொதிக்கும்
பொறுக்கேலாக் காயத்தை
இன்னும் ஆற விட
எண்ணாமல் இழுக்கிறது 

என்னாளிலெனை நம்பும்
ஏதேனுமோர் வார்த்தை,
என்னாளிலென் மனசின்
ஈரத்தை உணருகின்ற
உன்னால் முடிகின்ற
ஓர் சமிக்ஞை, உடல்மொழியில்
என்னைப் புரிந்து விட்ட
எதுவேனுமோர் அசைவு
என்றைக்கு உனிலெழுந்து
எனை வந்து அடைகிறதோ
அன்றைக்கே மனக்காயம்
ஆற எண்ணி அசடு வைக்கும்

பழங்காயம் ஆக விட்டால்
பதிந்து விடும் நோ, பின்னர்
உளம் திருந்தி ஒரு காலம்
ஓடி நீ வந்தாலும்
பழகி நோ பழகி
பட்டு விட்ட மனம் மீண்டும்
இளகுதற்கு முடியாமல்
இரும்பாயே இருந்து விடும்

வருந்தி நீ அன்று
வாய் விட்டு அழக்கூடும்!
புரிந்தேனுனை என்று
புலம்பலாம் நீ!, அன்றைக்கு
திரும்பி வர முடிந்த
திக்கினிலே நான் இருந்தால்
திரும்பி வரப்பார்ப்பேன்
இல்லையெனில் இப்பொழுதே
தேற்றிக்கொள் உன்னை, என்
தீச்சட்டி வாய்க்காரி..!








No comments:

Post a Comment