Sunday 1 December 2013

முகிலாய் நினைவும்..

சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்

மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது

இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

இன்றிருளும் வரைதான்
இது கூட,
அண்ணாந்த விழிகளும்
அசையும் முகில்களும்
அப்படியே நாளை
அவை வேறு

வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள்
வாழும் வரைதான் நினைவு

ஆயின்
வரலாற்றினூடுணர்தலென்றால்..
பிணத்தைப் புணர்தல்
அல்லது
கோமா உடலுடன் முன்விளையாட்டு

இதனாற் தான்
நாலுபேரின்று நையாண்டி செய்யினும்
அவர்களோடொன்றாய்
களத்தில் கேட்ட கானங்களை
வெறிச்சோடிப் போயிருக்கும்
இற்றை வேளையில்
கேட்க நேருகின்ற போது

எச்சில் விழுங்க முடியாமல்
தொண்டை இறுகியும்
கண்ணை இமைக்க முடியாமல்
குளமாய் பெருகியும்
நெஞ்சுக்குள் ஓடும் நரம்புகளெல்லாம்
அறுந்த பல்லிவாலாய்
ஆகி விடுகிறது..

No comments:

Post a Comment