Saturday 6 July 2013

உனக்கு நான் அல்லது எனக்கு நீ

எதுவுமே புரிந்திருக்கவில்லை
எல்லோரும் கூடி அழ
அவனும் சேர்ந்தழுதான்

கண்களை இறுக்கமாக மூடி
ஆடாமல் அசையாமல்
பெட்டிக்குள் அடங்கிப் போய்,
எப்படி அவனிதனை எடுத்துக்கொள்வான்?

முன்னைய நாட்களைப் போலவே
தன்னை
கண்ணாமூச்சியின் பின்
கட்டி அணைப்பாயென்றெண்ணுவானா?
அடிக்கடி ஓடி வந்து
உற்றுப் பார்க்கிறான் உன் முகத்தை
சிரிக்கிறான், அழுகிறான், ஓடித்திரிகிறான்

ஊர் அவனைப் பார்த்தே
ஒப்பாரி வைக்கிறது
ஒன்றும் புரியவில்லை அவனுக்கு
உடைந்தழும் தாயின் சூட்டில் ஒதுங்கி
பிதுங்க முழிக்கிறான்

சுவரில்
நீ தொங்கும் காரணத்தை
அவனறிகின்ற காலத்தில்
இளைத்துப் போனதொரு
மங்கிய கனவாய்
அவனுக்கு நீ, அவ்வளவே!

விடுதலைக்காக நானும்
வேலைக்காக நீயுமாய்
நீட்டிய துப்பாக்கி
உமிழ்ந்த குண்டுகள்
எம்மைத் துளையிட்டு
வீழ்த்திவிட்ட பின்னர்
இப்படியாகத்தான்
என் வீட்டில் என் மகனும்
உன் வீட்டில் உன் மகனும்..
-
விம்மி அழுவது
வீரனுக்கழகல்ல எனினும்
அம்மி அல்லடா
ஆழ் மனசு..










2 comments:

  1. "விம்மி அழுவது// வீரனுக்கழகல்ல எனினும் // அம்மி அல்லடா //
    ஆழ் மனசு...." என்ற வரிகள் நெஞ்சைப் பிளக்கின்றன. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) , சென்னை

    ReplyDelete
  2. இது தான் ஈழத்தின் உண்மை நிலை. கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete