Saturday 26 October 2013

எதுவுமற்ற காலை..

எதற்கும் வணங்காத காலமொன்று
எமக்கும் இருந்தது

கடல் நோக்கிப் பறந்து செல்லும்
வெள்ளைப் பறவையொன்று
கலங்கி மறைவதைப் போல
மூன்று தசாப்தத்தின் கனவு
ஒருநாள் காலையில் பார்த்த போது
கந்தகப்புகையைக் காவிக்கொண்டு
முகிலாகிக் கலைந்து போனது

உடைந்தழுத படி
ஒருக்களித்துப் படுத்துவிட்டு
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
மறுபக்கம் திரும்பிய போது
ஆண்டுகள் ஓடிப்போயிருந்தன

கொடுத்து வைத்தவர்கள்
அமரர்,மாவீரரென ஆக
ஊழ்வினை முடியாதோர்
உழல உயிர்  பிழைத்தது
அப்போது தான் தெரியவந்தது

குண்டுகளை வானமன்று
குடையாகப் பிடித்திருந்தும்
தன்மான வாழ்வின்
தன்னிறைவில் இருந்ததனை
எப்படித்தான் நாம் மறந்து போனோம்?

இப்போதில்
கழுத்தை நெரித்த கவட்டுக்குள்
கன்னம் தேய்த்தல் தான்
இராஜதந்திரமெனும்
பொரிமாவை மெச்சும்
பொக்கை வாய்ச்சியின் காலம்
பாத்தீனியமாய் எம்முன்னே
படர்கிறது

மறதியும் காலமும்
மனுச வழிக்காவி தான்
அதற்காக
அறணையாய் எப்படி ஆனோம் நாம்?

வீங்கிச் சிவந்த கண்ணும்
வீறிட்டழுத வாயும்
ஏங்கிய மனமுமாய் நாளை
எழுந்து நாம் பார்க்கும் போது
தேங்கியிருக்குமோ எம்
தீராத கனவு கொஞ்சம்?, இல்லை
ஓங்கி அரசதையும் மேவி
உயர வளர்ந்திருக்கு மோடா?


No comments:

Post a Comment