Tuesday 15 May 2012

இயக்கிய வார்த்தைகள்..

எப்படியோ எவ்விதியோ எதிர்பார்க்கா இடமொன்றில்
ஏற்பட்ட ஒரு சின்னச் சந்திப்பு வளர்ந்தோடி
இப்பிறப்பில் என்றைக்கும் எதுவந்தும் மறக்கேலா
இறப்புவரை வரப்போகும் இத நினைவாய் ஆனதடி

சேர நாட்டினது செழுங்குளுமைத் தளதளப்பு
சிந்தாமற் சிந்தியெனைச் சிலிர்க்க வைக்கும் விந்தையுந்தன்
ஓர விழிப்பார்வையிலே ஒழுக புன்சிரித்தாய்
உயிருருகி ஓடி அப்போ உன் காலை நனைத்ததடி

என்னிலமை தானுனக்கும் இருந்திருக்கும் ஏனென்றால்
எப்படியோ ஓர் பேச்சை எடுத்தாய் எமைச் சுமந்து
தன்னுடைய பாதை வழி போகின்ற புகையிரத
தாளில்லாச் சாளரத்தைத் தாண்டுகின்ற ஊர்களைப் போல்
எமைக் கடந்து சென்றுவிட்ட எமதெமது வாழ் கதையை
எமையறியாதெமக்குள் நாம் ஏன் தானோ பகிர்ந்து கொண்டோம்

ஊரொன்றில் நீயிறங்கிப் போனாலும் அதன் பின்னர்
உன்னை நான் ஒரு போதும் காணவில்லை என்றாலும்
தீராத எம்பேச்சுத் தீரவில்லை ஊடகத்தால்
தேசங்கள் கடந்தலையாய் தினம் பேசித் திரிந்ததடி

எத்தனை மலைகடல் கடந்திருந்தாலும்
எத்துணை அருகில் நாம் இருந்துகொண்டிருந்தோம்
இத்தனை காலம் நாம் இயக்கிய வார்த்தைகள்
இனி வரும் காலமும் இயங்கிடும் கேளடி!

பேச்சறுந்த இந்தப் பெரும் மெளனக் காலத்துள்
நீச்சலடிப்போமெம் நினைவுகளில் என்றைக்கோ
மூச்சறுந்து போகுமுன்னர் முன்னரைப் போல் பயணமொன்றில்
முதுமை வந்திருந்தாலும் முயன்றேனும் கண் விரித்து
ஆளாளை எப்படியும் அடையாளம் கண்டிடுவோம்
அதுவரையில் சுகமாக நீ வாழவேண்டுமடி நிம்மதியாய்..

No comments:

Post a Comment