உன் கடிதம்
இன்றிரவுதான் வந்து சேர்ந்தது
நீ அணைந்து
எத்தனை ஊழிகளோ…
இருந்தும் வாசிக்கிறேன்
ஒளியின் கையெழுத்தில்
ஒரு பிழையும் இல்லை
நான் ஒன்றும் பெரியவன் இல்லை
கடற்கரையில் நின்று
அலைகளை எண்ணத் தொடங்கி
இடையிலே மறந்தவன்
உலகம் என்னும் ஏட்டை
ஒருமுறை புரட்டி,
மொழி தெரியவில்லை என்று
மூடி வைத்தவன்.
என்றாலும் சொல்கிறேன்
புரியாததால்தான்
இத்தனை அழகு,
விடை தெரிந்த புதிரை
யார் மறுமுறை கேட்பார்?
தெருவில் நடக்கிறேன்:
ஒவ்வொரு முகமும்
எழுதி முடிக்காத கடிதம்,
எவரும் இங்கே
முழுமையாய் வாசிக்கப்படவில்லை,
உனக்குத் தெரியுமா விண்மீனே
இங்கும் உன்னைப் போல்
எத்தனையோ பேர்..
வலை பின்னிய கைகளில்
சிலை தூங்கியது
சோறு வடித்த விரல்களில்
யாழ் மறந்து கிடந்தது
எவரும் அறிந்திலர்
தாமுமே அறிந்திலர்.
ஆதலால்,
உன் காலங்கடந்த ஒளியை
முகம் நிமிர்த்தி ஏற்கிறேன்.
நான் மறையும்போது
எங்கோ ஓர் இருண்ட கண்ணை நோக்கி
என்னிடமிருந்தும் ஏதோ ஒன்று
புறப்படும்
புரிதல் எனக்கு வாய்க்கவில்லை
அன்பு செய்யத்தான் தெரியும்.
இதோ
உன் ஒளி விழுந்த இடத்தில்
என் கண்களின் ஓரத்தில்
ஒரு துளி உப்பு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக