புதன், 18 மார்ச், 2026

உடைந்த பிராத்தனை

காலை

உடைந்த ஒரு கடிகாரத்தின் உள்ளே

இன்னொரு நாளாக விழித்துக்கொள்கிறது


நகரம்

ஆன்மா அகற்றப்பட்ட உடல், 

அங்கங்கள் இயங்குகின்றன

இதயம் நினைவாக மட்டுமே துடிக்கிறது.


சாலைகளின் ஓரங்களில்

கேள்விகள் காத்திருக்கின்றன

பதில் என்பது

இன்னொரு அடைபட்ட கதவின் பெயர்.


கோயில்களின் மாடங்களில்

மழை பெய்கிறது,

ஆனால்

பிரார்த்தனைகளின் தொண்டை 

உலர்ந்தே கிடக்கிறது.


நாம் கடவுளை நோக்கிக் கூவுகிறோம்

எதிரொலி மட்டும் திரும்புகிறது 

அதுவும்

நம் குரலின் சிதைந்த வடிவமாக.


வரலாறு

நொருங்கிய எலும்புகளைப் போல

காலத்தின் மூலையில் கொட்டப்பட்டுள்ளது

அவற்றிலிருந்து

எதிர்காலம் கட்ட முயல்கிறோம்.


மனிதர்கள்

ஒருவரையொருவர் கடந்து செல்கிறார்கள்

முகங்கள் நிறைய முகமூடிகள்

கண்கள் தப்பிக்க வழிகள்.


நாம் கேட்கிறோம்

ஏன் இருக்கிறோம்? 

உலகம் பதிலளிக்கிறது 

‘இருப்பதற்கான காரணம்

இருப்பதே’ 


இந்த வெறுமையில்தான்

என் உயிர்

ஒரு சிறிய தீப்பொறியைப் போல

அர்த்தத்தைத் தேடித் தேடித்

தன்னை எரித்து விட முயல்கிறது.


உலகம் கவனிக்காமல்

அபத்தத்தின்

மிகவும் ஒழுங்கான இயந்திரமாக

தன் சுழற்சியைத் தொடர்கிறது


நான் மட்டும்

அந்த இயந்திரத்தின் நடுவில்

ஒரு உடைந்த பிரார்த்தனையாக

நின்றுகொண்டிருக்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக