வியாழன், 12 பிப்ரவரி, 2026

நத்தின் கூடு..

புத்தன் ஏகினான் 

அவனகன்ற திசை இப்போது

பாரமான ஒளியால் நிறைந்திருக்கிறது.


காலம் தன் 

பருப்பொருட் போர்வையைக் களைந்துவிட்டு 

சிறு நத்தையின் சுரிவளைக்குள்

நிர்வாணமாய் நுழைந்து கொண்டது.


இந்தச் சிறு சுண்ணச் சுருள்

வெறும் ஓடல்ல,

அண்டத்தின் பேரிரைச்சல் வடிகட்டப்பட்டு

மௌனமாக உறைந்துபோனதோர் 

உள்வெளி, 


புற உலகைத் தின்று தீர்த்த 

மகா தாகம் இப்போது 

இச்சிறு ஈரப்பதத்துள் 

தன்னைத் தானே கண்டடைந்து 

அடங்கியிருக்கிறது.


இப்போதில் 

நத்தையின் கூட்டுக்குள் இருப்பது 

அமைதியல்ல,

அஃதோர் உருவம் இழந்த பிரபஞ்சத்தின்

மீள முடியாத் தியானம்.


யாரும் அற்ற அந்தப் பீடத்தில்

இன்மை முடிசூடிக் கொள்கிறது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக