சனி, 16 மே, 2026

மறம் துயிலும் நிலம்..

உப்பங்காற்றில் தேய்ந்து கரைகிறது 

பெருங்காலம் 

நந்திக்கடலின் உவர்ச்சேற்றில் 

புதைந்த எம் வேர்களின் என்புகள் 

ஊழியின் சுழற்சியில் 

சிதைந்து சுண்ணமாகிவிட்டன.


வையத்தின் நடுவண் மன்றங்களில் 

நடுவுநிலையை நிறுக்கும் 

தராசுத் தட்டுகள்

துருப்பிடித்து அறுந்து வீழ்ந்து 

பல பருவங்கள் ஆகிவிட்டன

வல்லாதிக்கத்தின் செவிகளில் 

உறைந்து கிடப்பது 

பாறையினும் இறுகிய 

பெருஞ்செவிடு, 


கருகிப்போன பனைமரங்களின் 

பட்டையான நெஞ்சில் 

தன் தலையையடித்து 

முட்டி அழுகிறது நாதியற்ற காற்று 

அது கடந்து செல்லும் 

பாழடைந்த முற்றங்களில் 

எம் பிதாக்களின் பெருமூச்சு மட்டுமே 

புழுதியாய்ப் படிந்திருக்கிறது.


எல்லாவற்றையும் இழந்து

எரியுண்ட சுள்ளிகளாய் 

உலகப் பெருவெளியில் வீசப்பட்டுவிட்டோம்


நாக்கு அறுபட்டவர்களின் 

மௌனப் பெருவலியோடு

வெறுமையின் சாம்பலைத் தின்றுகொண்டிருக்கிறது 

எஞ்சிய தலைமுறை,


எம் குருதியின் 

ஈரம் காய்ந்த நிலத்தில் 

அறம் கேட்டு முளைத்த 

பசும்புற்களும் பட்டுப்போயின.

கேட்பாரற்றுக் கிடக்கும் 

எம் ஏதிலி நிலையைப் பார்த்து 

இந்த அண்டவெளியின் கண்கள் 

குருடாகியிருக்கக்கூடும் 

இல்லையேல்

எம் துயரத்தின் எடையைத் தாங்க 

இந்த ஒற்றைக் கடலின் ஆழம் 

எங்ஙனம் காணும்… ? 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக