விண் வறள கண் சுருள
வெம்மையிலொடுங்க
மண் நெகிழ மெய்தழுவ
மென்மழைய தாகி
மென்நரம்பில் செம்புனலும்
மெல்லலையாய் மீள
பெண்ணுருவாய் விண்மழையாய்
பேருயிராய் வந்தாள்..
மண்ணடியில் மரவேரும்
மென்வலையைப் பின்னி
மென்னதிர்வில் நெடுநிலமும்
இன்னுயிரைப் பகிர
புண்ணுளத்தில் மின்நரம்பு
புல்முனையாய் முளைக்க
கண்ணுருவாய் வான்மழையாய்
பேருயிராய் வந்தாள்..
உள்ளெலும்பில் உறைபனியும்
மென்தழலில் உருக
மண்சுவரில் மென்விரிசல்
வேர்முனையும் நுழைய
விண்பளுவாய் கண்ணிறுகும்
வன்சுமையும் விழவே
பெண்ணுருவாய் பெருஞ்சுடராய்
பேருயிராய் வந்தாள்..
மண்பளுவில் நின்றவுடல்
மென்மிதப்பாய் எழும்ப
உள்நரம்பில் நின்றசுழல்
இன்னொலியாய் இயங்க
கண்முனையில் தேங்குநிறம்
மென்னொளியாய் முயங்க
பெண்ணுருவாய் பெருவிசையாய்
பேருயிராய் வந்தாள்..
உள்ளறையில் ஓய்ந்தவொலி
உள்ளதிர்வாய் முழங்க
மென்செவியில் ஊமைவலை
மென்னொலியாய் புழங்க
விண்ணதிரும் வன்மழையும்
மென்பனியாய் இறங்க
பெண்ணுருவாய் பெருமிதமாய்
பேருயிராய் வந்தாள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக