வேர்கள் இருளில் துடிக்க
வீழ்ந்த பெருமரம்
பெருங்காற்றால் சாய்ந்ததல்ல,
மண்ணுக்குள் பதுங்கிய
கரையான்களின் சூழ்ச்சியால்
உட்குடைந்து சரிந்த மூச்சு
நிழலருந்திப் பசியாறிய சிறகுகள்
வீழ்ந்த மரத்தின் வேர்களை
பழுதென்று பழித்துச் செல்லும்,
முளைத்தால் மட்டுமே
விதையெனக் கொண்டாடும்,
பனியில் கருகிய முளையைப்
பிழையெனத் தூற்றும்.
சந்தை மனிதர்களின்
துருப்பிடித்த தராசுகளில்
உன் காயங்களில் வழியும்
செங்குருதியை நிறுக்க முயலாதே,
வெற்றிக்கு மலர்தூவும்
குருட்டு விழிகள்
தோல்வியின் கையறு விம்மலை
மரணமென்று சுட்டும்
இது பொதுமனத்தின் பெருவியாதி
வரண்ட நிலம் பிளந்து பூத்த
செங்குருதிப் பூவே
அவர்கள் உன் வியர்வையை
பிழையென அளக்கட்டும்,
நீ அதை அடுத்த பெருங்காட்டின்
மழைநீர் என நம்பு,
இழப்பின் சாம்பலை
நெற்றியில் பூசாதே,
அது உன் வேர்களைக் காக்கும்
கவசப் படலம்.
காட்டுமகன் எறிந்த கூர்வேல்
இலக்கைத் தவறவிட்டால்
வேலின் கூரே பிழையாகாது
திசையை வளைத்த
பெருங்காற்றின் சூழ்ச்சி அது
முறிந்த வாளின் எஃகினை
உன் மார்புக்குள்
நீயே குத்திச் சிதைக்காதே,
கூட்டுமனத்தின் கூச்சல்களைப் புறந்தள்ளு,
நெருப்பு அணைவதில்லை
அது கனன்று உறங்குகிறது
மீண்டும் பெருநெருப்பாய்
வெடித்தெழக் காத்திருக்கிறது,
நீ இழந்தது விடுதலையையல்ல,
வெறும் காலத்தின் ஒரு துளியை மட்டுமே
உன் பாதங்களில் படிந்த
செம்மண்ணின் மீது ஆணையாய்
உன் குருதியின் திசை பிழையற்றது
மலையென எழுக..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக