நந்திக்கடலின்
குருதியுறைந்த அலைகளிலிருந்து
நின் சாக்ரோசு மலைகளின்
தகிக்கும் பாறைகளைத் தழுவுகிறேன்
ஈரானே..
அயலாரின் உதடுகளில் விரியும்
புன்னகையை நம்பாய் என நம்புகிறேன்
அது, மரப்பட்டையெனப் பாசாங்கு செய்யும்
உளுத்தலின் மென்மை.
அமைதி என்னும் வெள்ளைத் தாளை
அவர்கள் மரமேசைகளில் விரிக்கையில்
உன் பின்னறைகளில்
அவர்கள் இரும்பைத் தீட்டும்
அரத்தின் ஓசை
நின் செவிகளுக்கும் கேட்டிருக்கும்
இந்த உரையாடல் நினக்கானதில்லை
தம் எஃகு நுரையீரல்களில்
பெருமூச்சை நிரப்பிக் கொள்ள
அரக்கப் பொறிகள் இட்டுக்கொண்ட
கால நீட்சியென்பதை
நீயும் அறியாமல் இராய்
உன் நிலவியலின்
அடுக்குகளுக்குக் கீழே
தொடர்பற்றுப் புதைந்துகிடந்த
அவர்களின் ஒற்றர்களான
பாலைவனத் தேள்களுக்கு
மீண்டும் விடம் பாய்ச்சத் திறக்கப்பட்ட
இருட்டுப் பாதையே
இந்த இணக்கப் பேச்சென்பதை
நீயும் அறிவாய்
நெஞ்சின் உரத்தை
உள்ளிருந்து அரிக்கும்
வெம்மையற்ற தீயே இந்த உறவாடல்.
அவர்கள் நினக்கு நீட்டும்
அப்பத்தில் கலந்திருப்பது
நம்பிக்கையைச் சிதைக்கும்
இரும்புத் துகள்கள்,
எம் ஈழக் காடுகளில் நாங்கள் முத்தமிட்ட
அதே வஞ்சம்..,
ஒன்றிணைந்த நின் பெருங்காட்டை
தனித்தனி விறகுகளாய்ப் பிளக்கவே
அவர்கள் கோடரிகளோடு சிரிக்கிறார்கள்.
அவர்கள் போரை நிறுத்தவில்லை
தொன் நிலமே..!
தம் படைக்கலன்களின்
குழல்களைக் குளிரவைக்கவும்
நாளை வீசவிருக்கும் பெருநெருப்பிற்காய்
நின் மக்களின் எலும்புகளின்
திண்மையை அளக்கவுமே
இந்த அமைதியைப் போர்த்திருக்கிறார்கள்.
இது பெருங்காற்றின் ஓய்வன்று
சுழலின் மையத்தில் இறுகிப்போன
மூச்சுத்திணறடிக்கும் வெற்றிடம்.
வானிறங்கும்
எஃகுப் பறவையின் சிறகை
அமைதிப் புறாவென எண்ணி
ஏமாறாய் என்பதை அறிவேன்
இருப்பினும்
எம் கழுத்தை அறுத்த
அதே பட்டுநூலோடு அவர்கள்
வரும்போது வாயடக்க முடியவில்லை
இணக்கப் பேச்செனும்
அந்த இனிக்கும் நஞ்சை
உமிழ்ந்துவிடு
எம் பனைவேர்களில்
உறைந்திருக்கும் மெய்மையைப்போல்
நின் அடிமண்ணின் ஆழத்தில்
முளைத்த நெருப்பையும்,
அவர்களின் வழவழப்பான பொய்களால்
எக்காலத்தும் அழித்துவிட முடியாது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக