செவ்வாய், 23 ஜூன், 2026

மறமெனும் அறம்..

நீதியென்பது

வெறும் மன்றங்களின் மரமேசைகளில்

முத்திரை விழுந்த பத்திரமன்று, 

மண்ணை இழந்த மக்களின்

மூச்சுக்குள் இன்னும் அணையாத

சூடான சாம்பல்.


ஓரினத்தின்  தேசம்

வரைபடக்காரனின் கருநிறக் கோட்டால் மட்டும்

பிறப்பதில்லை,

அதன் முதுகெலும்பில்

நூற்றாண்டுகள் நடந்த காயங்கள்,

அதன் மொழியின் பற்களுக்குள்

கடித்துப் பிடிக்கப்பட்ட நினைவுகள்,

அதன் இறந்தவர்களின் பெயர்களை

மறக்க மறுக்கும் குழந்தைகளின் நாக்கு 

இவற்றால்தான் அது கருவுறுகிறது.


“இனிச் சாத்தியமில்லை” என்றார்கள், 

உலகம் தன் 

இரும்புக் கணக்குப் புத்தகத்தைத் திறந்து

தேசிய இனங்களின் கனவுகளை

எண்ணிக்கைக்கு வெளியே தள்ளியது, 

விடுதலை என்பது 

பெரிய அரசுகளின் அனுமதிச் சீட்டு, 

தேசம் என்பது

வல்லரசுகளின் மேசையில் 

மீதமிருக்கும் உப்பு.


ஆனால் வரலாறு

அதிகாரத்தின் வாயால் மட்டும் பேசுவதில்லை, 

சில வேளைகளில் அது 

அடக்கப்பட்ட ஒரு தாயின்

அடுப்புச் சாம்பலில் கையெழுத்திடுகிறது, 

சில வேளைகளில்

சிறைக்கதவின் இரும்பில்

ஒரு நகத்தின் கீறலாய்த் தொடங்குகிறது, 

சில வேளைகளில்

மரணத்தைக் கடந்துபோன இளைஞர்களது

என்பின் அமைதியிலிருந்து

மின்னலாக எழுகிறது.


நியாயம் மட்டுமே வெற்றியாய் ஆகாது 

காலத்தையும் கணக்கையும்

புவியின் குளிர்ந்த அரசியலையும் கடக்க வேண்டும்.

மண்ணின் உண்மைக்குக் குரல் வேண்டும்,

குரலுக்குத் தொடர்ச்சி,

தொடர்ச்சிக்கு உடைக்க முடியாத உள்ளெரி.

அந்த உள்ளெரியே

மாவீரர்களின் ஆன்மா.

அவர்கள் இறந்தவர்கள் அல்ல, 

மண்ணுக்குள் வைத்துவிடப்பட்ட

தீக்கற்கள்.

ஒரு தலைமுறை தடுமாறும் பொழுது

அவர்கள் அடியிலிருந்து வெப்பம் தருவார்கள்.

ஒரு மொழி பயத்தில் நடுங்கும் பொழுது

அவர்கள் எழுத்துகளுக்குள் இரும்பு சேர்ப்பார்கள்.

ஒரு கொடி காற்றில்லாமல் தொங்கும் பொழுது

அவர்கள் காணாத மூச்சால்

அதை மீண்டும் அசைப்பார்கள்.

அரசியல் பலம் படைகளை எண்ணும்,

ஆன்ம பலமோ

எந்தத் தராசிலும் நிறுக்க முடியாதது 

மண்ணில் புதைந்த பெயர்களின் உறங்காத ஒளி.


தமிழீழம் 

தோல்வியின் பெயரல்ல, 

அது இன்னும் நிறைவேறாத

அறத்தின் நிலப்பெயர்.

கடல் அதைச் சூழ்ந்திருக்கலாம்

முள்வேலிகள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

ஒப்பந்தங்களின் காகிதம்

அதன் குருதியை உலர்த்த முயன்றிருக்கலாம்.

ஆனால் ஒரு தேசம்

முதலில் நிலத்தில் அல்ல 

நினைவில் உயிர்வாழ்கிறது.

நினைவில் உயிர்வாழும் தேசத்தை

எந்த ஆட்சியும் முழுதாய் வெல்ல முடியாது.


மறமென்பது வெறும் சினமன்று 

அநீதியின் கழுத்தில் வைக்கப்படும்

அறத்தின் சூடான கை.

மண் மறுக்கப்பட்ட மக்களுக்கு

மறமும் ஓர் அறம்தான், 

மீண்டும் மனிதராய் நிமிரும்

முதற் பிரார்த்தனை.


ஆகவே,

நாம் காத்திருப்பதில்லை

குருதியை கொள்கையாக்கி,

இழப்பை மொழியாக்கி,

மரணத்தை மண்ணின் உரிமைச் சான்றாக மாற்றி

தொடர்கிறோம்


ஒரு நாள்

அரசியல் தன் குளிர்ந்த கைகளைப் பின்வாங்கும், 

ஒரு நாள்

வரைபடம் தன் பொய்யைத் திருத்தும், 

ஒரு நாள்

மண்ணின் கீழெழும் 

பல்லாயிரம் அமைதிக் குரல்கள்

ஒரே ஓசையாகி

உலகின் செவிப்பறையைத் திறக்கும்.

அந்நாள்

விடுதலை வெறும் கொடியாய் ஏறாது , 

தேசிய இனங்களின் திறவு கோலாய்

பட்டொளி வீசிப் பறக்கும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக