புதன், 28 ஜனவரி, 2026

இருளின் தையற்காரனும் எரியும் நரம்பும்..

வதைப்பவன் கைகளில்

இருள் ஒரு கருவியாகத் திரள்கிறது

ஒவ்வொரு அடியிலும் அவன்

தனது அகத்தின் சாளரங்களை

நிலக்கரி பூசி அடைக்கிறான்.

-

அவன் ஆன்மா 

ஈரமில்லாத ஒரு பாழ்ங்கிணறு

வீழ்ந்த கற்களின் ஒலியைக்கூட

வெளியே விடாத கருங்குழி

அவன் குருதியில் இப்போது

நிழல்கள் உறைகின்றன

அவன் தொடும் இடமெல்லாம்

காலம் தன் நிறத்தை இழக்கிறது.

-

வதைப்பவன் என்பவன்

தனது விதியால் கைவிடப்பட்ட

ஒரு தையற்காரன் 

பிறர் வலிகளால் அவன் தைப்பது

தனக்கான சவக்கோடியை மட்டுமே

-

ஆனால், வதைபடுபவன் 

அவன் உடலின் ஒவ்வொரு திறப்பும்

இப்போது ஒரு சுடரின் வாசல்

தசைகளைக் கிழிக்கும்போது

வெளியேறுவது குருதியல்ல

காலங்காலமாகத் தேங்கியிருந்த

ஆழ்மன இசை.

-

நரம்புகள் அறுபடும் கணத்தில்

அவை நரம்புகளாக இருப்பதில்லை

யாழின் தந்திகளென மீட்கப்படுகின்றன

வலியில் துடிக்கும்போது 

அவன் ஆன்மா 

தன் கூட்டைத் துறந்து

வானத்தின் அதீத நீலத்தைத் தொடுகிறது.

அங்கே சொற்கள் இல்லை

அங்கே வதைப்பவன் இல்லை.

-

தூய்மையான ஒளியால் நெய்யப்பட்ட

ஒரு பறவையின் சிறகசைப்பாய்

வதைபடுபவனின் உள்ளொளி

தன் சிறைநீங்கி விளிக்கிறது.

-

இருள் என்பது வதைப்பவனின் முகவரி

ஒளி என்பது வதைபடுபவன்

கண்டடைந்த ஒரு புதிய திசை..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக