எங்கிருந்தோ எழும் பேரோலம்
உன் செவிப்பறையைக் கிழிக்கையில்
உன் உண்ணாக்கு அதிர்ந்து
முள்ளந்தண்டு சில்லிடுகிறதா
ஆயின்
அயல் நிலத்தில் பெயரற்று வீழ்ந்தவன்
உன் குருதி வழி உறவு
எங்கோ ஓர் எளியவனின்
பசிநரம்பு தெறிக்கையில்
உன் வயிற்றுச் சுவர்கள்
உள்நோக்கிச் சுருங்கிப் புலம்புகிறதா
வா..
என் கைகளைப் பிடித்துக்கொள்
நீயும் என் உடன் பிறப்பு
விழிப்பு என்பது
தூக்கம் கலைந்த விழிகளின் வரவு அல்ல
அது
அநீதி எரியும் திசையெல்லாம்
தன் சதையைப் பிய்த்து
நெருப்பாய் வீசும்
ஒரு ‘திணைத் துளக்கம்’
பனந்தோப்புக் காற்றினூடே
பாயும் தோட்டாக்களின் ஈனச் சிரிப்பு
முள்வேலிக் காடுகளில்
தொங்கி நிற்கும்
எம் மக்களின் கிழிந்த கனவுகள்
இவை உன்னைத் தூங்க விடாமல்
உள்நின்று உலுக்குமெனில்
உன் அரசியல் என்பது
வெறும் சொல்லல்ல
அது சூல் கொண்ட நிலத்தின்
பேரெழுச்சி
நூறு நதிகள்
வெவ்வேறு திசைகளில் ஓடினாலும்
அநீதியின் உவர் நிலத்தில்
அவை சங்கமிக்கும் பெருங்கடலே
நம் தோழமை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக