புதன், 25 மார்ச், 2026

சிறகுகள் சுமக்கும் நிலம்..

உதிர்ந்த சிறகுகளின் குருதியில்

நனைந்து கிடக்கிறது நிலம்

வண்ணங்களின் சித்திரங்களுக்குப் பின்னால்

யாரும் வாசிக்காத ஒரு பழைய கதை

மண்ணின் மடிப்புகளில் 

நெளிந்து கொண்டிருக்கிறது.


​ஆகாயத்தின் நீலத்தை 

நீ இப்போது  குடிக்கிறாய்

ஆனால் உன் கால்களில் 

இன்னமும் ஒட்டியிருக்கிறது

புழுதியோடு மல்லுக்கட்டிய அந்தக்

கடின உழைப்பின் ஈரம்.


தசைகள் கிழிபட்டு

முதுகெலும்புகள் நொருங்கி

உன் மெல்லிய சிறகுகள் 

ஒரு கூண்டுக்குள் ஒடுங்கியது

திசைகளை அளப்பதற்காக அல்லவா?, 


‘​மறதி ஒரு துரோகம்’ என

உன் சிறகின் ஓரத்திலிருக்கும் 

கரும்புள்ளி சொல்லாமல் சொல்கிறது.


நீ பூக்களில் தேன் தேடித் திரிகிறாய்

அந்தப் பூக்களோ

உனக்காகத் தன்னுயிர் ஈந்த 

ஒரு கம்பளிப்பூச்சியின்

கல்லறையிலிருந்து முளைத்தவை


​சிறகடிப்பின் ஒவ்வொரு அதிர்விலும்

மண்ணுக்குள் புதையுண்டவர்களின் 

மூச்சுக்காற்று இருக்கிறது

வானம் உனக்குச் சொந்தமாகலாம்

ஆனால் உன் அடியில் ஓடும் 

நிலத்தின் நரம்புகளில்

உன் பழைய வடிவத்தின் 

தழும்புகள் இன்னும் ஆறவில்லை.


​விடுதலை என்பது 

வெறும் பறத்தல் மட்டுமல்ல 

பறக்கும் திசையெங்கும் 

தான் ஊர்ந்து திரிந்த பாதையையும்

உதிர்ந்து போன வாழ்வையும் 

நெஞ்சில் ஏந்திச் சுமப்பதே


​நினைவிருத்தல் என்பது சுமையல்ல

அதுவே சிறகுகளுக்கு 

வலிமையைத் தரும் காற்று,


பட்டாம்பூச்சி ஒருபோதும் 

கம்பளிப்பூச்சியை மறப்பதில்லை

ஏனெனில்,

அந்த மரணத்தின் சாம்பலிலிருந்துதான்

இந்த வாழ்வின் 

வண்ணங்கள் உயிர்த்தெழுந்தன..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக