வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

கரைதலின் வரைபடம்..

பார்வை மட்டத்தில் மட்டும் 
காதலைப் பயில்பவர்கள்
பொருட்களின் விளிம்புகளை மட்டுமே 
தொட்டுச் செல்கிறார்கள்.

அவர்களுக்கு முகமென்பது 
ஒளியின் திசைமாற்றத்தால் 
திரையில் விழும் தற்காலிக நிழல்.
விளக்கு அணைந்ததும்
நிழல் சுருங்கி 
சுவரோடு மறைவதைப் போல
பிரிவென்பது அவர்களுக்கு 
இருண்ட முடிவு.

ஆனால் 
வேதிவினையில் பிணைந்த 
இரண்டு தனிமங்களைப் போல
உள்ளுற உறைந்து போனவர்களுக்கு 
தொலைவு என்பது தர்க்கமற்றது.

கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டாலும்
அதன் உப்புத்தன்மை 
அலைகளின் மடியிலேயே தங்கிவிடுகிறது.
வெப்பம் நீரைப் பிரித்தாலும்
உப்பை அதனிடமிருந்து 
எப்படிக் கழுவ முடியும் ? 

வெளியேறும் ஒருவனைப் பின்தொடர 
கண்களுக்குத் தூரம் தேவை
ஆனால் குருதிக்குள் கலந்துவிட்ட துளிக்கு
உடலில் எங்கோ ஓடிக்கொண்டிருக்க 
திசைகள் தேவையில்லை.

நீயும் நானும் இப்போது 
ஒரே மரக்கட்டையில் கசிந்து படிந்த 
இரண்டு நிறங்கள்.
ஒன்றன் மீது ஒன்று படிந்துவிட்ட பிறகு
யார் எவரை வழிஅனுப்பி வைப்பது ? 

இங்கே பிரிவென்பது 
தன் நிழலைத் தானே கழற்றி எறிய முயலும் 
வீண் முயற்சி,
பொருட்கள் வேண்டுமானால் 
தூரம் நகரலாம் 
ஆனால் செறிந்துவிட்ட பிணைப்புக்கு
வெளியெங்கும் இடமில்லை 
அது முழுவதுமாய் 
அகத்திலேயே நிரம்பிவிட்டது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக