புதன், 28 நவம்பர், 2012

நினைவில் வைத்திருங்கள்..


கானகத்தின் மூச்சாய்
கடலலையின் அசைவுகளாய்
மானம் எனும் உயிரின்
மார்பாய், எம்தேச
வானத்தின் கீழ் நிற்கும்
வளியாய், வரலாறாய்
ஊனுடம்பின் ஆசைதனை
உதறி எம் மண்ணில்
மானுடம் வாழ்ந்ததென
மார்தட்டிச் சொல்ல வைத்த
எமதிருப்பின் சுவடுகளே!
எமக்காக உம் வாழ்வை
அமரத்துவமடைய வைத்த
ஆற்றல்மிகு நல்லுயிர்காள்!

தீபமாய் ஒளிருமும்
தியாகத்தின் வெளிச்சத்தில்
தாபமாய் எமக்குள்ளே
தகிக்கின்ற மண்காதல்
கலங்கரை விளக்கம் போல்
கட்பார்வைத் தூரத்தில்
துலங்குகின்ற விடுதலைக்கு
துயர் தாங்கி நடக்கிறது

இந்தக் கடல், காடு
எம்முடைய வயல்வெளிகள்
முந்தையொரு நாளிலெம்
முதுசமெனச் சொல்லும் நிலை
வந்ததெண்ண நெஞ்சின்
வயிறு பற்றி எரிந்தாலும்
சந்ததிகள் நிமிர்ந்தென்றோ
சரித்திரத்தைப் படிக்கையிலே
வந்த வழி அறிந்துங்கள்
வழியூடு நடந்து செல்ல
விந்தை நிகழ்ந்தொருநாள்
விடியும், சீக்கிரமாய்
எந்தை நிலம் எமதாகும்
என்கின்ற வாக்கினை நாம்
இந்தத் திரு நாளில்
ஏற்றுகிறோம் உம் முன்னே

கட்டிளம்வயதை காதலை உங்களின்
இட்டம் மிகுந்த வாழ்க்கையை - விட்டு நீர்
எமைக்காத்தீர் இங்கெப்படியும் நாமெழுந்து
அமைப்போமும் தேசத்தை ஆம்

சிரிக்கப் பழகுதல்..


வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்
காய்த்திருக்கும் விடுதலைப் பூ
கனியாகும் நாட்களிடை
எழுகின்ற அழுத்தங்கள்
எமைக் கொல்லும்,அக்கணத்தில்
அழுதிருப்போம் ஆனாலும்
அடுத்த நொடி சுதாகரித்து
நாமே எமைத்தாங்கி நடந்து செல்வோம்
இடைவெளியில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய் விட்டுச் சிரிக்கின்றோம்

அயர்லாந்தைத் தழுவுகின்ற
அட்லாண்டிக் கடற்கரையின்
உயரத்தில்  குருசுருவாய்
உடல் மின்னிக் கொண்டிருக்கும்
விண்மீன்களென் கண்ணில்
விழுந்தால், ஊர் வளவில்
நண்பர்கள் சேர்ந்திருந்து
நாமறிந்த கோளறிவை
அண்ணாந்து பார்த்தெமக்குள்
அடையாளம் காட்டியது
ஆண்டுகளைக் கண்டத்தை
அறித்தெறிந்து நிழலாட
கண்கலங்கும்,மறுநிமிடம்
கடைவாயில் சிரிப்பூரும்
என்னினத்தின் விதியிது தான்
என்கின்ற பெரு மூச்சில்
அக்கணமும் அறுந்து விழ
அடுத்த கணம் உருவாகும்
இக்கணம் மட்டுமே
இங்குண்மை என்கின்ற
நிமிடம்வரை நீளும்
நிலையாத தெளிவொன்றில்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்

உயிரின் செவிக்கரையை
உதட்டாலே கவ்வுகின்ற
மயிர் குத்திட்டெழுந்து நிற்கும்
மண் பாட்டில்,

கடலுதட்டை
தொடுவான் கடிக்கின்ற
தொலைவில் படகொன்று
கடைசி ரெத்தச் சூரியனைக்
கடக்கின்ற பேரழகில்,

பலலெட்சம் மைல் கடந்து
பறந்து திரும்பித்தன்
நிலத்துக்கே வந்துவிட்ட
நிம்மதியில் பறவையதன்
கூட்டத்தோ டிசைக்கின்ற
குதூகலப் பாட்டுகளில்,

பாசாங்கறியாத
பால்வாயின் சிரிப்பதனில்

எம்மையறியாமலேயே
எமை மறந்து நாம் சிரிப்போம்
சிரிக்கும் போதூரின்
சில காட்சி வந்து விட்டால்
அரைச் சிரிப்போடெம் வாய்
அணையும், ஆனாலும்
வாய்ப்பிருந்தால் முடிந்தவரை
வாய்விட்டுச் சிரிக்கின்றோம்..

திங்கள், 12 நவம்பர், 2012

நிலவாய் தொடர்கிறதென் நிலம்..


அடிக்கின்ற புயல் நடுவே
ஆடுகின்ற மரத்தினது
உடைகின்ற கொப்பாக
ஓர் வாழ்வு, கள்ளடியில்
அடைகின்ற மண்டியைப் போல்
அதிற் தனிமை, ஆனாலும்
விடிவெய்தும் என் தேச
விடுதலையின் எழுகதிரை
கையிரெண்டும் அகட்டி
கால் மடக்கித் தாளிட்டு
மெய் சிலிர்க்க நாடியினை
மேற் தூக்கி அண்ணாந்து
அப்படியே கண்ணால்
அதை நுகர்ந்து பருகியெந்தன்
இப்பிறப்பைத் துறக்கோணும்
என்பதொன்றே தீராத
ஆசையடி எந்தனுக்கு
அதற்குள்ளே என் வாழ்வு
ஓசையின்றி எங்கேனும்
ஓர் கண்டத் தகட்டிடுக்கில்
ஒடிந்து வீழ்ந்துடைந்து
உரு மறைந்து போயிடலாம்

எங்கெங்கோ நானோடி
இழுபட்டுத் திரிந்தாலும்
அங்கங்கெல்லாம் என்
அழகு மண்ணின் விடுதலையை
எங்ஙனம் நானெட்டுவேன் என்பதே
என் கனா மூச்சு எல்லாமும், அடிக்கடி
வாழுகின்ற இடம் வேறாய்
இருந்தாலும் பாதைகளாய்
நீளுகின்ற வழியெல்லாம்
நிறைந்திருப்பதென் மண்ணே

மாழுகின்ற போதிலுமென்
மனதாய் நினைவாக
சூழ்ந்தெங்கும் மண் மணமே
சுற்றி வரும், ஆதலினால்
எங்கே நான் வீழ்ந்தாலும்
என் மண்ணில் தான் வீழ்வேன்
அங்கே தான் உரமாவேன் அறி..

திங்கள், 22 அக்டோபர், 2012

நீயில்லாத மழைக்காலம்..


கண்ணைத் திறந்திருந்தால்
காணாத காட்சி எல்லாம்
கண்ணையிமை மூடிக்
கதவடைக்கக் காணுகிறேன்

எண்ணங்களெல்லாம்
எழுந்தெழுந்து சிறகடித்து
வண்ணமாய் எமைக் கடந்த
வழிகளிலே பறக்க வைக்கும்
தன்மை இம்மழைக்குத்
தானுண்டு, உன்னிமையை
என்னிமையால் மூடி
இதழ் கண்ட இழுத்துறிஞ்சி
பொன்னுடலிற் பூந்தளிரின்
பூரிப்புச் சிவப்பூற
என்னடி.! என நகைக்க
இழுத்தணைத்துக் கழுத்துக்குள்
புரியாத மொழி முனகிப்
புதைப்பாயுன் புன்சிரிப்பை

அறிவேன் நான் ஆனாலும்
அறியேனாய் அடம்பிடிக்க
பொறுக்கி! என மார்பில்
பூத்திடுவாய்!,மழை வீழ்ந்து
தெறிக்கின்ற துளியில்
தெரியுதடி அக்காலம்
விரியுதடி காட்சி வெறும் அறைக்குள்
முடியாமல்
எரியுதடி தாபம் என்பெல்லாம்
விழி ததும்பிச்
சொரியுதடி கண்ணீர் சுட்டபடி
இதையந்த

அப்பாவி மழை பாவம்
அறியாமல் பொழிகிறது
எப்பாடும் அறிந்த என்
இதயத்தின் ஆண்டவரே
இப்பாவியை நீவிர்
ஏதேனும் செய்து கொள்ளும்
தப்பேதும் தெரியாத மழைக்குத்
தயை கூர்ந்து
அப்பம் கொடுத்து அருள் சொரிந்து
மனம் நிறைய
பாவ மன்னிப்பருளும்
பரமே..!

புதன், 17 அக்டோபர், 2012

வடலிகளின் வாழ்வெண்ணி..


எம் மண்ணின் குறியீடே
எப்படி நாம் மெதுமெதுவாய்
இம் மண்ணில் இடிபட்டும்
எழுந்தம் எனச் சொல்லுகின்ற
கம்பீர வரலாற்றின் காட்சி உரு வடிவே!

பறந்தடித்த ஷெல்லுக்கும்
பாய்ந்து வந்த குண்டுக்கும்
அறுத்து உன்னுடலை
அரணாகக் கொடுத்தாய் நீ
கறுத்த உன்னுடலுக்குள்
கசிகின்ற கனிவை நாம்
கள்ளாய், கிழங்காக
கண் போன்ற நுங்காக
அள்ளிக் குடித்தும் அடங்காமல்
உனை மேலும்
பணியாரம், பினாட்டென்று
பசி போகத் தின்றிருப்போம்
உனிலொடியற் புட்டாக்கி
உயிர்ச் சத்தைச் சேர்த்திருப்போம்

உயிர்த் தினவின் ஓர்மத்தை
உரமாகக் கொண்ட மண்ணில்
உயிராக, உடலாக
உனை முழுதாய்க் காப்பகமாய்
தாரை வார்த்த எங்கள்
தருவே! போர் மேகம்
ஆரைத்தான் இம் மண்ணில்
அழிக்காமல் விடவில்லை
பொழிந்தடித்த போர் மழையில்
பொசுங்கித் துடி துடித்து
அழிவடைந்த சனத்துக்குள்
அடங்குதடா உன் சனமும்

இழிவாய் எமையின்று
எல்லோரும் பார்த்தாலும்
அழிவின் சாம்பலினை
அப்பியபடி மெல்ல
வளருதற்கு எத்தனிக்கும்
வடலிகளின் வாழ்வுக்கு
உளமாரக் கை கொடுப்போம்
ஓர் விதையை நட்டிடுவோம்
எழுவோம் நாம் என்பதனை
எண்ணி...

திங்கள், 1 அக்டோபர், 2012

அழிக்கப்படும் சாட்சியங்கள்..


அலைக் கரங்களை
மார்பில் அடித்தடித்து
உரக்க அலறியது கடல்
அதன் குரலில்
இத்துணை ஆண்டுகாலக் கனவுகளும்
கண் முன்னே கலைந்து போய்
கந்தகப் புகையான ஏக்கம்
கப்பிப் போய்க்கிடந்தது

தட்டிக் கேட்க யாருமற்ற தைரியத்தில்
அதன் கறுத்த மேனியில்
சன்னங்களைக் கொட்டிப் பொழிந்து
கூத்தாடியது நிலவு

வான வல்லாதிக்கமோ
தன்னால் தீட்டப்பட்ட திட்டம்
தீரும் வரைக்கும்
ஏனிதென்று கேட்க எவரையும் விடாமலுக்கு
அடர்மெளன ஒலியால்
அனைத்தையும் மூடியது

இரவுப் படுகொலைகளின்
சாட்சிகளும், எச்சங்களும்
வெண் நுரைகளாய் அடைந்து போய்க்கிடக்கிறது
கரை முழுவதும்

மாபெரும் அவலப் பிரளயம்
அடங்கிய அதிகாலையில்
எதுவுமே தெரியாதது போல்
எழுகின்ற வெய்யோனால்
தேடி அழிக்கப் படுகின்றன
அத்தனை சாட்சியங்களும்

மீண்டும்
இருளத்  தொடர்கிறது
இரவுப் படுகொலைகள்
புலர
அழிக்கப் படுகின்றன சாட்சியங்கள்

ஆனாலும்
கடல் வற்றிப் போகாதென்ற
காலப் படிப்பினையில்
உடலைச் சுமக்கிறது
உயிர்..

புதன், 12 செப்டம்பர், 2012

மெளன அலை..


அள்ளி எறிகிறாய் என் கவிதைக்குள்
உன் நினைவுகளையும் காதலையும்
அடர் இரவில்
யாருமற்ற கடலின் நடுவே
கைவிடப்பட்ட படகொன்றின்
செவிப்பறைகளை
நிசப்த ஊழை கிழிப்பது போல
உன்னுடைய ஆழ்மெளன மிகையொலியால்
வெடித்துப் பிய்கிறதென்
மனச் செவிகள்

பிரிவு ஒரு குழந்தையைப் போல்
நம் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி
அங்குமிங்குமாய் ஓடி
அழுதழுது முகம் வீங்கி
ஏமாற்றப் பெரு மூச்சை
எமைச் சுற்றி இறைக்கிறது

தேச விடுதலையை நெரித்துக் கிழிக்கின்ற
விலங்கினைத் தீய்க்க
பற்றி எரிந்த மண் பற்றில்
உறவுகள் உடைதலும்
சிதைதலும் உலகில்
வலி மிகுந்ததெனினும்
வழமை தான் அன்பே
பிரிவு என்னும் குழந்தை பிறந்தது
நமக்கு மட்டுமே அல்ல மண்ணிலே
நாலு லெட்சம் பேருக்கும் தானடி

குண்டுகள் வெடித்துச் சிதறிப் பறந்ததில்
கொலைக்கரம் நீண்டு குரல்வளை நெரித்ததில்
குலை சரிந்து பனை முறிந்தது
ஆயினும்
சரிந்ததைப் பார்த்த வடலிகள் ஒரு நாள்
சரித்திரம் தெரிந்து நிமிரலாம்
நாங்கள்
வரைந்திட முயன்ற வரைபடம் தன்னை
வரைய வடலிகள் நினைக்கலாம்
அன்று
திரும்பி நான் வருவேன்

வரப்போகும் அந்த வசந்தத்தின் நாளில்
உன்னை நானும் என்னை நீயும்
அடையாளம் கூடக் காணாதிருக்கலாம்
வாழ்ந்த வாழ்க்கை வழிகள் நெடுக
இனிய நினைவாய் இன்னும் இருப்பதை
உணர்வு மிகுந்த ஓர் தருணம்
எமக்கு உணர்த்தலாம். ஆயினும்
வாழுதற்கென்று  வழங்கிய காலம்
மீழ முடியா இடத்தில் இருப்பதால்
வடலிக்கானதாய் ஆகுமெம் வாழ்வு

வளரும் எங்கள் வடலியும் நாளை
தேச வரைபடக் கோட்டினைச் சரியாய்
தீவிரமாக வரைகிற போது
பென்சிலையேனும் தீட்டிக் கொடுத்தல்
பெற்றோராக எம் தலைக் கடனே
அது வரை எம்மிடை
மெளனப் பெருங்கடல் விரிந்தும் அகன்றும்
அங்குமிங்குமாய் அலைகளின் மேலே
காவித் திரியட்டும் எங்கள் காத்திருத்தலை
காதலை..

மகிழ்வென்னும் முகமூடி மாட்டல்..


எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

வாழ்ந்த வாழ்க்கை வந்த
வழி வழியே வீழ்ந்துடைந்து
பாழ் நிலம் போலிருண்டு
பயனற்றுப் போனாலும்
நானிறந்து போகவில்லை
நடக்கின்றேன் ஆதனினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

அப்பா வா என்று
அழைக்கின்ற குரலுக்கு
எப்பேர்ப்பட்ட இதயமும்
இளகும் தான், ஓடோடி
அப்படியே கட்டி அணைப்பதற்கு
அனுங்கும் தான்
இருந்தென்ன இதைவிட நீ
இறந்து விடு என மனமும்
அரித்தரித்துள்ளே
அனற்குளம்பை ஊற்றும் தான்
தெரிகிறது ஆனாலும்
தீய்ந்து விடாதிருப்பதற்கு
வரும் மாசம் எப்படியும்
வழி திறக்குமெனச் சொல்லி
இருக்கின்றேன் நாலாண்டாய்
இருப்பேன் இன்னமும் நான்
வெறுப்பென்று ஏதுமில்லை
வேதனையா? அது சும்மா
திரும்பிப் படுத்தால் தீர்ந்து விடும்
அதனாலே
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

வயசேறிப் போகிறது
வாழ்க்கையெனும் படகில்
அசைவலைகள் அழுத்தி அடிக்கிறது
அந்திமத்தின்
கரைகளை நோக்கியெம்
கை பற்றி இழுக்கிறது
வருவாயா அதற்குள் வழி இடையில்
எனப் பெற்றோர்
உருக்கும் கேள்வியொன்றை உகுக்க
ராக் கனவில்
போக்கிடம் தெரியாத பொறியில்
நான் வீழ்ந்து
சாக்களையில் கட்டிலினால்
சரிந்து வீழ்ந்தெழுந்து
ஏக்கம் மூச்சு முட்ட
ஏது செய்வேன் என்றிரவில்
தூக்கம் தொலைத்துத் துடித்தாலும்
காலையிலே
அப்படியே இருந்தபடி
அயர்ந்தெழவும் மனமேனோ
இப்படி எத்தனை பேர் என ஆறும்
அதனாலே
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

முள்ளந்தண்டின் முடிச்சுகளில்
கூரிரும்பால்
உள்ளே விட்டித்து உருட்டுவதாய்
கொதிக்கையிலும்
இதயக் கூட்டினையோர்
இடுக்கியால் இழுத்தெடுத்து
சதைகளினைப் பிய்ப்பதுவாய்
சா வலி உடம்பெல்லாம்
பரவிக் காய்ச்சலொடு பற்றி
எரிகையிற் தான்
அன்பான வார்த்தையோடு
ஆறுதலாய் வருடி விட
என் பாவி மனமேங்கும் ஏதிலியாய்
மறு நிமிடம்
தன் பாட்டில் கை நெளிந்து
தானே தடவி விட
என்னுடலம் எப்படியோ இழுத்தோடும்
ஆதலினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்

தலை காய்ந்து நெஞ்சம்
தடுமாறிப் போகையிலே
தொலைவில் இருந்தாலும்
தொடுகின்ற வார்த்தைகளால்
உலை மனசின் மூடி திறந்தூதித்
தோழி சொன்னாள்
மகிழ்வென்ற முகமூடி மாட்டு
நாளடைவில்
அகமே அதுவாகிப் போகுமென்று
முடிந்தவரை
இழுத்திழுத் தம்முகத்தை
எனில் மாட்டப் பார்க்கின்றேன்
அழகாகும் காலமென்ற ஆசையிலே
ஆதலினால்
எனக்கென்ன மகிழ்வோடு
இடியாமல் இருக்கின்றேன்..

காணுதற்கான நெஞ்சக் கனா..


உள்ளங்கை வேர்த்து
உடல் கொதித்துக் கண் செருக
அலை கரையை அலம்பியதாய்
அலைந்திருந்த என் கரத்தை
தளம்பாமல் நீயும்
தட்டி விட்டிருக்கலாம் தான்

பெரு மூச்சில் நெஞ்சுயர்ந்து
பெருக, செடிப் பூவைப்
பருக வண்டு செட்டை
பறத்தி அடிப்பது போல்
இருண்ட கண்ணிமைகள்
இருதயம் போல் அடிக்க முன்னே
ஒரு தரம் நானுமென்னை
உலுப்பி விழித்திருக்கலாம் தான்

’கோமா’ போல் புலனெல்லாம்
குளைந்து மயக்க முற
ஏமாந்து போய் நாமும்
எமை மாந்திக் கிடந்து விட்டோம்

வரண்ட நிலம் வான் மழையை
வழித்துறிஞ்சிப் புகைவது போல்
திரண்டுவந்த உடற் தீயைத்
தின்றவிந்து நனைந்து விட்டோம்

கால விதி எம்மைத் தன்
கடிய இருட் பாதைகளால்
ஓலமிட்டழ அழவும்
ஒவ்வொன்றாய்த் தனித்தனியாய்
கீலமாயெம் பாதைகளைக்
கிழித்து வேறாக்கி விட
ஞாலச் சுழற்சியினில்
நாம் பிரிந்து சென்று விட்டோம்

நாளையிலே ஓர் நாள் நாம்
நடக்கின்ற பாதைகளில்
ஆளாளை எதிர்ப்படுமோர்
அவலம் தான் நிகழ்ந்து விட்டால்
நிலம் பார்த்துக் கடப்போமா
நிமிர்ந்தெம்மைப் பார்ப்போமா
கலங்குகின்ற கண்களினைக்
கைகளினால் மறைப்போமா
கொடுப்புக்குள் சிரித்தபடி
குறுகுறுக்கும் மனம் மறைத்து
விடுப்பேதோ பார்ப்பது போல்
விண் பார்த்து நடப்போமா
மெளனத்தில் மூச்சு மட்டும்
மாரடிக்க நிற்போமா
இவ்வளவு காலமாய்
எங்கிருந்தாய் என ஆவல்
அவ்வளவும் பிதுங்க
ஆசை கொண்டணைப்போமா!

சொல்லுக்குள் கிடக்கின்ற
சுவையூறும் கவியொன்று
வல்ல கவிஞனுக்காய்
வழி பார்த்திருப்பது போல்
சில்லுக்குள் சில்லாகச்
சிறை கிடக்குமென் மனசு
உள்ளேயுன் நினைவு வர
உயரப் பறக்கிறது..

படர் மெளனம்..


பிரிவின் துயர் உன்னைப்
பிழிந்து உருக்குகையில்
அருவி போற் சொரிந்து அழுது விடு
உள்ளடக்கி
எரிந்தெரிந்து நெஞ்சால் எதுவுமே பேசாமல்
முறிந்த மரம் போல முகஞ்சரிந்து கிடக்காதே
பாழடைந்த கல்லறை போற்
பரவுகின்ற உன் மெளனம்
தோளை உலுப்பியுந்தன் துயரெனக்குச் சொல்லுதடி

நீளுமெம் பிரிவென்று நினைத்தோமா
அன்பூற
வாழத்தான் சேர்ந்தோம் வலிய விதி
எம்மிடையே
எழுதுகின்ற கதைகளுக்கு என்ன தான்
நாம் செய்வோம்
தொழுதுகொண்டு வாழ்துயரம் தொலையோணும்
என்பதற்காய்
உழுது விதைத்த மண்ணில்
உரம் போட நினைத்தேன் நான்
அழுதழுது நீயும் அனுசரித்தாய் எம் சேர்வின்
விழுதொன்றும் உன்னோடு
விருட்சமாய் வளர்கிறது
எழப்போகும் அதனுடைய
எதிர்காலத்துக்காயேனும் 'அழுதூத்து'
உன்னுடைய
அடர் மெளனம் கரையட்டும்

புறாவின் குறுகுறுப்பை,புன்னகையைச்
சுமந்தபடி
உறவு கொண்டிருந்த காலத்தில்
உணர்வொழுக
இறக்கும்வரை உன்னோடு இருப்பேன்
என்றன்று
உறக்கத்திலும் நீ சொன்ன ஒட்டுறவை
எண்ணிப் பார்
மறக்கும் பழக்கமென்றும்
மனிதருக்கு உண்டெனினும்
கிறக்கம் தருமன்பும் கிழிந்துறைந்து போமோடி?

உன் விழி பாய்ச்சிய உயிர் கவர்
காந்தமும்
உன்னுடல் வீசிடும் ஒருவகை
வாசமும்
இன்றுமென் நாசியில் எழுந்தெழுந்தூறுது
கண்களில் அலையலைக்
காட்சிகளாகுது
குன்றென இருந்த நான்
குமைந்து குலைந்துயிர்
சென்றெனை விட்டு சிதம்பிப் போம்வரை
உன்னுடை வாசமும் கண்ணுமே முடிவிலும்
என்னுடன் சென்றிடுமென்பதைப் புரியடி!

புலம்பெயர் குளிர்ப்புழுக்கம் புரியாமல்
மிகப் பெரிதாய்
புலப்படலாமுனக்கென் புன் வாழ்வு
இங்கே நாம்
’விலங்கொடு’ விலங்காய்
வேறொரு மனிதராய்
கலங்கிய மனசொடு காலம் கடத்திடும்
நிலமதில் வந்துநீ நிற்கிற வரைக்கும்
உலக உருண்டையின் ஒட்டடை
உணராய்

பிரிவென்னும் தீயெரியப்
பெரும் மெளன எண்ணையினை
தெரிந்தே நீ ஊற்றுகின்றாய் தீய்வனென்று
தீயட்டும்
உருகுகின்ற மணம் விழுதை
உறுத்தாமற் பார்த்துக் கொள்

எத்தனையெத்தனையோ பேரின்னும்
இது போல
தத்தமது வாழ்விற் தகிப்பதற்கு
எவரெல்லாம்
மொத்தமாய் முழுதான காரணமோ
அவர் நோக்கி
இத் தீயில் ஓர் கவளம் எடுத்துப்
பலம் சேர்த்து
மொத்தமாய் அவரழிய மூசி எறி
ஓர் தேசம்
பத்தரை மாற்றுத் தங்கமாய்
பர்ணமிக்கும்
அத்தினத்தில் நானுன்னை அடைவேன்
அதன் பிறகே
மடிவேன் நான் உன்னுடைய
மடியில்..