Monday 12 November 2012

நிலவாய் தொடர்கிறதென் நிலம்..


அடிக்கின்ற புயல் நடுவே
ஆடுகின்ற மரத்தினது
உடைகின்ற கொப்பாக
ஓர் வாழ்வு, கள்ளடியில்
அடைகின்ற மண்டியைப் போல்
அதிற் தனிமை, ஆனாலும்
விடிவெய்தும் என் தேச
விடுதலையின் எழுகதிரை
கையிரெண்டும் அகட்டி
கால் மடக்கித் தாளிட்டு
மெய் சிலிர்க்க நாடியினை
மேற் தூக்கி அண்ணாந்து
அப்படியே கண்ணால்
அதை நுகர்ந்து பருகியெந்தன்
இப்பிறப்பைத் துறக்கோணும்
என்பதொன்றே தீராத
ஆசையடி எந்தனுக்கு
அதற்குள்ளே என் வாழ்வு
ஓசையின்றி எங்கேனும்
ஓர் கண்டத் தகட்டிடுக்கில்
ஒடிந்து வீழ்ந்துடைந்து
உரு மறைந்து போயிடலாம்

எங்கெங்கோ நானோடி
இழுபட்டுத் திரிந்தாலும்
அங்கங்கெல்லாம் என்
அழகு மண்ணின் விடுதலையை
எங்ஙனம் நானெட்டுவேன் என்பதே
என் கனா மூச்சு எல்லாமும், அடிக்கடி
வாழுகின்ற இடம் வேறாய்
இருந்தாலும் பாதைகளாய்
நீளுகின்ற வழியெல்லாம்
நிறைந்திருப்பதென் மண்ணே

மாழுகின்ற போதிலுமென்
மனதாய் நினைவாக
சூழ்ந்தெங்கும் மண் மணமே
சுற்றி வரும், ஆதலினால்
எங்கே நான் வீழ்ந்தாலும்
என் மண்ணில் தான் வீழ்வேன்
அங்கே தான் உரமாவேன் அறி..

No comments:

Post a Comment