Wednesday 12 September 2012

காணுதற்கான நெஞ்சக் கனா..


உள்ளங்கை வேர்த்து
உடல் கொதித்துக் கண் செருக
அலை கரையை அலம்பியதாய்
அலைந்திருந்த என் கரத்தை
தளம்பாமல் நீயும்
தட்டி விட்டிருக்கலாம் தான்

பெரு மூச்சில் நெஞ்சுயர்ந்து
பெருக, செடிப் பூவைப்
பருக வண்டு செட்டை
பறத்தி அடிப்பது போல்
இருண்ட கண்ணிமைகள்
இருதயம் போல் அடிக்க முன்னே
ஒரு தரம் நானுமென்னை
உலுப்பி விழித்திருக்கலாம் தான்

’கோமா’ போல் புலனெல்லாம்
குளைந்து மயக்க முற
ஏமாந்து போய் நாமும்
எமை மாந்திக் கிடந்து விட்டோம்

வரண்ட நிலம் வான் மழையை
வழித்துறிஞ்சிப் புகைவது போல்
திரண்டுவந்த உடற் தீயைத்
தின்றவிந்து நனைந்து விட்டோம்

கால விதி எம்மைத் தன்
கடிய இருட் பாதைகளால்
ஓலமிட்டழ அழவும்
ஒவ்வொன்றாய்த் தனித்தனியாய்
கீலமாயெம் பாதைகளைக்
கிழித்து வேறாக்கி விட
ஞாலச் சுழற்சியினில்
நாம் பிரிந்து சென்று விட்டோம்

நாளையிலே ஓர் நாள் நாம்
நடக்கின்ற பாதைகளில்
ஆளாளை எதிர்ப்படுமோர்
அவலம் தான் நிகழ்ந்து விட்டால்
நிலம் பார்த்துக் கடப்போமா
நிமிர்ந்தெம்மைப் பார்ப்போமா
கலங்குகின்ற கண்களினைக்
கைகளினால் மறைப்போமா
கொடுப்புக்குள் சிரித்தபடி
குறுகுறுக்கும் மனம் மறைத்து
விடுப்பேதோ பார்ப்பது போல்
விண் பார்த்து நடப்போமா
மெளனத்தில் மூச்சு மட்டும்
மாரடிக்க நிற்போமா
இவ்வளவு காலமாய்
எங்கிருந்தாய் என ஆவல்
அவ்வளவும் பிதுங்க
ஆசை கொண்டணைப்போமா!

சொல்லுக்குள் கிடக்கின்ற
சுவையூறும் கவியொன்று
வல்ல கவிஞனுக்காய்
வழி பார்த்திருப்பது போல்
சில்லுக்குள் சில்லாகச்
சிறை கிடக்குமென் மனசு
உள்ளேயுன் நினைவு வர
உயரப் பறக்கிறது..

No comments:

Post a Comment