Monday 1 October 2012

அழிக்கப்படும் சாட்சியங்கள்..


அலைக் கரங்களை
மார்பில் அடித்தடித்து
உரக்க அலறியது கடல்
அதன் குரலில்
இத்துணை ஆண்டுகாலக் கனவுகளும்
கண் முன்னே கலைந்து போய்
கந்தகப் புகையான ஏக்கம்
கப்பிப் போய்க்கிடந்தது

தட்டிக் கேட்க யாருமற்ற தைரியத்தில்
அதன் கறுத்த மேனியில்
சன்னங்களைக் கொட்டிப் பொழிந்து
கூத்தாடியது நிலவு

வான வல்லாதிக்கமோ
தன்னால் தீட்டப்பட்ட திட்டம்
தீரும் வரைக்கும்
ஏனிதென்று கேட்க எவரையும் விடாமலுக்கு
அடர்மெளன ஒலியால்
அனைத்தையும் மூடியது

இரவுப் படுகொலைகளின்
சாட்சிகளும், எச்சங்களும்
வெண் நுரைகளாய் அடைந்து போய்க்கிடக்கிறது
கரை முழுவதும்

மாபெரும் அவலப் பிரளயம்
அடங்கிய அதிகாலையில்
எதுவுமே தெரியாதது போல்
எழுகின்ற வெய்யோனால்
தேடி அழிக்கப் படுகின்றன
அத்தனை சாட்சியங்களும்

மீண்டும்
இருளத்  தொடர்கிறது
இரவுப் படுகொலைகள்
புலர
அழிக்கப் படுகின்றன சாட்சியங்கள்

ஆனாலும்
கடல் வற்றிப் போகாதென்ற
காலப் படிப்பினையில்
உடலைச் சுமக்கிறது
உயிர்..

No comments:

Post a Comment