Monday 22 October 2012

நீயில்லாத மழைக்காலம்..


கண்ணைத் திறந்திருந்தால்
காணாத காட்சி எல்லாம்
கண்ணையிமை மூடிக்
கதவடைக்கக் காணுகிறேன்

எண்ணங்களெல்லாம்
எழுந்தெழுந்து சிறகடித்து
வண்ணமாய் எமைக் கடந்த
வழிகளிலே பறக்க வைக்கும்
தன்மை இம்மழைக்குத்
தானுண்டு, உன்னிமையை
என்னிமையால் மூடி
இதழ் கண்ட இழுத்துறிஞ்சி
பொன்னுடலிற் பூந்தளிரின்
பூரிப்புச் சிவப்பூற
என்னடி.! என நகைக்க
இழுத்தணைத்துக் கழுத்துக்குள்
புரியாத மொழி முனகிப்
புதைப்பாயுன் புன்சிரிப்பை

அறிவேன் நான் ஆனாலும்
அறியேனாய் அடம்பிடிக்க
பொறுக்கி! என மார்பில்
பூத்திடுவாய்!,மழை வீழ்ந்து
தெறிக்கின்ற துளியில்
தெரியுதடி அக்காலம்
விரியுதடி காட்சி வெறும் அறைக்குள்
முடியாமல்
எரியுதடி தாபம் என்பெல்லாம்
விழி ததும்பிச்
சொரியுதடி கண்ணீர் சுட்டபடி
இதையந்த

அப்பாவி மழை பாவம்
அறியாமல் பொழிகிறது
எப்பாடும் அறிந்த என்
இதயத்தின் ஆண்டவரே
இப்பாவியை நீவிர்
ஏதேனும் செய்து கொள்ளும்
தப்பேதும் தெரியாத மழைக்குத்
தயை கூர்ந்து
அப்பம் கொடுத்து அருள் சொரிந்து
மனம் நிறைய
பாவ மன்னிப்பருளும்
பரமே..!

No comments:

Post a Comment