ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

வடுக்களில் துளிர்க்கும் பேரன்பு..

வழுவழுப்பான கருங்கற்பாறையில்

பச்சைப் பாசி படராது, 


பிளந்த மரத்தின் வெடிப்பில்தான்

பறவையின் எச்சம்

வேராகிறது.


குறைகளற்ற முழுமை 

காற்று புகாத

கண்ணாடிப் பேழை.


தழும்புகளும்

உதிர்ந்த சருகுகளும் தான்

காட்டில் காலம் நடந்துச் சென்ற சுவடு.


பிழைகளைச் சீவி அகற்றிவிட்டால்

பின்னர்

தழுவிக்கொள்வதற்கு

எச்சம் ஏதும் இருக்காது.


உடைந்த சிப்பியின் கூர்விளிம்பிற் தான் 

அலை

தன் வெண்ணுரையை அணிவிக்கும்.


நமது வடுக்களின்

மேடு பள்ளங்களிற் தான் 

காதலின் விரல்கள்

தங்கி இளைப்பாறுகின்றன.


களங்கமற்ற தூய்மை 

வெறித்த பனிப்பரப்பு,

அங்கே

அன்பின் ஈரம்

கண்ணாடியாக உறையும்.


முழுமை

யாரையும் தேவைப்படாத

குளிர்ந்த கல்.


நிறைவற்றமை தான் 

மனிதனை 

மனிதனிடம் அழைத்துச் செல்கிறது.


சிறிது உடைந்திருப்பதே

உயிரின் கருணை 

அங்கேதான்

அன்பு

தன் முதற் கூட்டைக் கட்டுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக