Wednesday 28 November 2012

நினைவில் வைத்திருங்கள்..


கானகத்தின் மூச்சாய்
கடலலையின் அசைவுகளாய்
மானம் எனும் உயிரின்
மார்பாய், எம்தேச
வானத்தின் கீழ் நிற்கும்
வளியாய், வரலாறாய்
ஊனுடம்பின் ஆசைதனை
உதறி எம் மண்ணில்
மானுடம் வாழ்ந்ததென
மார்தட்டிச் சொல்ல வைத்த
எமதிருப்பின் சுவடுகளே!
எமக்காக உம் வாழ்வை
அமரத்துவமடைய வைத்த
ஆற்றல்மிகு நல்லுயிர்காள்!

தீபமாய் ஒளிருமும்
தியாகத்தின் வெளிச்சத்தில்
தாபமாய் எமக்குள்ளே
தகிக்கின்ற மண்காதல்
கலங்கரை விளக்கம் போல்
கட்பார்வைத் தூரத்தில்
துலங்குகின்ற விடுதலைக்கு
துயர் தாங்கி நடக்கிறது

இந்தக் கடல், காடு
எம்முடைய வயல்வெளிகள்
முந்தையொரு நாளிலெம்
முதுசமெனச் சொல்லும் நிலை
வந்ததெண்ண நெஞ்சின்
வயிறு பற்றி எரிந்தாலும்
சந்ததிகள் நிமிர்ந்தென்றோ
சரித்திரத்தைப் படிக்கையிலே
வந்த வழி அறிந்துங்கள்
வழியூடு நடந்து செல்ல
விந்தை நிகழ்ந்தொருநாள்
விடியும், சீக்கிரமாய்
எந்தை நிலம் எமதாகும்
என்கின்ற வாக்கினை நாம்
இந்தத் திரு நாளில்
ஏற்றுகிறோம் உம் முன்னே

கட்டிளம்வயதை காதலை உங்களின்
இட்டம் மிகுந்த வாழ்க்கையை - விட்டு நீர்
எமைக்காத்தீர் இங்கெப்படியும் நாமெழுந்து
அமைப்போமும் தேசத்தை ஆம்

No comments:

Post a Comment