Wednesday 17 October 2012

வடலிகளின் வாழ்வெண்ணி..


எம் மண்ணின் குறியீடே
எப்படி நாம் மெதுமெதுவாய்
இம் மண்ணில் இடிபட்டும்
எழுந்தம் எனச் சொல்லுகின்ற
கம்பீர வரலாற்றின் காட்சி உரு வடிவே!

பறந்தடித்த ஷெல்லுக்கும்
பாய்ந்து வந்த குண்டுக்கும்
அறுத்து உன்னுடலை
அரணாகக் கொடுத்தாய் நீ
கறுத்த உன்னுடலுக்குள்
கசிகின்ற கனிவை நாம்
கள்ளாய், கிழங்காக
கண் போன்ற நுங்காக
அள்ளிக் குடித்தும் அடங்காமல்
உனை மேலும்
பணியாரம், பினாட்டென்று
பசி போகத் தின்றிருப்போம்
உனிலொடியற் புட்டாக்கி
உயிர்ச் சத்தைச் சேர்த்திருப்போம்

உயிர்த் தினவின் ஓர்மத்தை
உரமாகக் கொண்ட மண்ணில்
உயிராக, உடலாக
உனை முழுதாய்க் காப்பகமாய்
தாரை வார்த்த எங்கள்
தருவே! போர் மேகம்
ஆரைத்தான் இம் மண்ணில்
அழிக்காமல் விடவில்லை
பொழிந்தடித்த போர் மழையில்
பொசுங்கித் துடி துடித்து
அழிவடைந்த சனத்துக்குள்
அடங்குதடா உன் சனமும்

இழிவாய் எமையின்று
எல்லோரும் பார்த்தாலும்
அழிவின் சாம்பலினை
அப்பியபடி மெல்ல
வளருதற்கு எத்தனிக்கும்
வடலிகளின் வாழ்வுக்கு
உளமாரக் கை கொடுப்போம்
ஓர் விதையை நட்டிடுவோம்
எழுவோம் நாம் என்பதனை
எண்ணி...

No comments:

Post a Comment