விதைத்தலும் இல்லை
அறுத்தலும் இல்லை
எங்கும் சேமித்தலும் இல்லை
உணவின்றி இறந்ததென எவையுமில்லை
வானளவு சுதந்திரமாய் வாழ்க்கை
பறவைகள்..
விதைத்தலும் இல்லை
அறுத்தலும் இல்லை
எங்கும் சேமித்தலும் இல்லை
உணவின்றி இறந்ததென எவையுமில்லை
வானளவு சுதந்திரமாய் வாழ்க்கை
பறவைகள்..
வானம் நீரை உறிஞ்சும் தாகம்
வாயோ வறண்டு கிடக்கிறது
தேனில் வண்டு திளைக்கும் மோகம்
தீயே இதழாய் இருக்கிறது
காட்டிற் பாயும் ஆற்றின் தாபம்
காற்றே அணைக்க இருக்கிறது
கோட்டை அதிரும் யானைக்காமம்
கோடை படர்ந்து வெறிக்கிறது
பாறிவிழுந்தும் மரத்தின் தளிராய்
பாசம் இன்னும் துடிக்கிறது
ஊறிய மாநதி உருள மறுத்து
உள்ளே சுழலாய்க் கிடக்கிறது
உடலோ மனசைக் கேளேனென்று
உலுப்பி உலுப்பி வெடிக்கிறது
படத்தில் மட்டும் பார்த்துப் புழுங்கும்
பாட்டை பாட்டு வடிக்கிறது
கோன் மறந்தும் அறஞ்சறுக்கின்
கொளுத்துமது கோலையென்றும்
வான் போற்றும் வாழ் பெறுவாள்
வாய் தவறா வஞ்சியென்றும்
நானிலத்தில் செய்தவினை
நடந்துன்னைத் தொடருமென்றும்
கண்ணகியாற் காட்டுவது
கதையன்று தமிழறமே..
எவருமே காப்பாற்ற முடியா
கையறு நிலையின் கைகள்
இறுதி வினாடியில் அதிசயமாய்
எவரேனும் வரக்கூடுமென்ற
கடைசி நப்பாசையில்
வானை நோக்கி அசைகிறது
நீரில் மூழ்குகின்ற ஒருவன்
தன்னைக் காப்பாற்ற வேண்டி
எழுப்பும் சைகையில் தெரிகின்ற
ஒற்றைக் கையின்
அதே அவலக் காட்சிதான் இங்கும்
கந்தகப் புகையின் வீச்சத்தில்
அபலக் குரல் எழுப்பியவாறு
கருகி வீழ்ந்த அந்த
கைகளின் வடிவம் தான்
இனப்படுகொலையின் சாட்சியாய்
எழுதப் பட்டிருந்தது
ஒவ்வொரு விரல் வழியாகவும்
ஓலம் எழுப்பி
கண்சிதறக் கதறிய
கைகளில் தெரிந்த அந்த முகங்களை
சிதைத்து எறிய முடிகிற
மனத்தின் குரூரத்தை எண்ணிப் பார்க்கிறேன்
வருடத்தின் நாளொன்றில் மட்டும்
வருவார்களெனக் காத்திருக்கும்
கல்லாய் இறுகிய நினைவுகளின் காட்சி
மண்ணாக்கப்பட்ட பின் தான்
ஒவ்வொரு மனதிலும் உறுதியாய்
ஊன்றப்படுகிறது
பூசலாரை இப்போது தான்
புரிய முடிகிறது
மனசின் அகக்காட்சி தான்
மண்ணின் யுகக்காட்சி
போற்றியெம் வாழ்முதலாகிய புதல்வீர்
புலரும், பெருமுயிற் கொடைகொண்டு
ஊற்றினீர் விடிவிற்கு உம் வாழ்வை
ஒருக்கிலும் மறந்திடோம், இதன் பதிலாய்
தோற்கிலோம் என்கிற தினவுடை வாக்கினை
தூயரே வைக்கிறோம் உம் முன்னால்
ஏற்று நம் கனவதன் துணையாக
இருந்தொளி காட்டுமெம் இறையோரே..
இன்னமும் நினைவினில் ஏங்குவோர் ஒருபால்
எங்கையோ இருக்கிறீர் எண்ணுவோர் ஒருபால்
முன்செய்த பாவமோ முனகுவோர் ஒருபால்
முயன்றுமீள் எழவென முயல்பவர் ஒருபால்
என்ன தான் வந்தினி இயம்புவர் ஒருபால்
கல்லறை வாழ்கிற கடவுளே நீவிர்
எம்முடை மனதுக்கு உம்பலந் தருவீர்
எமக்கொளி காட்டுவீர் இறையரே வாழ்வீர்..
கூவிய வானகம் கூவிய காற்று
குறிதப்பாது வீழ்ந்தன குண்டுகள்
ஏவிய கணையினால் எங்கணும் சிதறல்
இருப்பினும் தளரலை எமக்கென நின்றீர்
காவிய வீரராய் ஆகியெம் கண்முன்
காட்டினீர் பாதையை காந்தளே நீவிர்
காயம் விட்டேகினும் கண்களில் நெஞ்சில்
கண்கண்ட தெய்வமாய் காவலாய் வாழ்வீர்..
உறைந்த மூளை
உடைந்த நெஞ்சம்
அறைந்த வாழ்க்கை
அழிந்த நான்
அறுந்த தாபம்
அகன்ற மேகம்
திறந்த வானம்
தொலைந்த நான்
முறிந்த நேசம்
முடிந்த காலம்
தெரிந்த கானல்
தெளிந்த நான்
இருந்த காலை
இழந்த மாலை
புரிந்த வேளை
எரிந்த நான்..