Saturday, 5 April 2025

திரும்பக் கூடும்..

வதைகளின் நினைவுகள் எனது தோலில்

அவர்களின் கோரமுகத்தை வரைந்துள்ளன

ஒவ்வொரு வடுவும் ஒரு கதை சொல்கிறது

நான் மரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக

கண்டங்களைக் கடந்தேன்

தேசங்களைத் தாண்டினேன்

-

உடைந்த என் உடல்

இந்த பனிப்பாறைகளில் தவழ்கிறது

ஆனால் என் கனவுகள்

என் மண்ணின் வெப்பத்தில் விளைகின்றன

அங்கே பனை மரங்கள்

என் வருகைக்காக காத்திருக்கின்றன

அங்கே என் காதலியின் கண்கள்

வீதிகளை நோக்குகின்றன

-

என் கைகளில் என்ன எஞ்சியுள்ளது

ஒன்றாய் நடந்த தோழர்கள் படங்கள்

மற்றும் நாங்கள் சேர்ந்து பாடிய

விடுதலையின் பாடல்கள் அவ்வளவுதான்

-

நினைவுகளின் சிறகுகளில் கனவுகளின் பாதைவழி

இரவில் நான் என் தாயகத்திற்கு திரும்புகிறேன்

அங்கே பூக்கும் பூவரசு மரங்களின் மணம்

இங்கே பனிக்காற்றின் குளிரை துடைக்கிறது

-

இந்த பனிபொழியும் தேசத்தில்

என் உடல் உறையலாம்

ஆனால் என் வார்த்தைகள்

என்றென்றும் என் மண்ணின் வெப்பத்தில்

உயிர்பெறும்

நான் இறந்தாலும்

அடுத்த தலைமுறைக்கு விடுதலையின் விதைகளாக

என் கவிதைகள் வாழும்

-

நாளை என் நாடு விடுதலை பெறுமா

கிழக்கிலிருந்து கதிரவன் உதிக்குமா

நான் அதைப் பார்க்காமல் போனாலும்

என் வார்த்தைகள் அந்த காலையை வரவேற்கும்

-

என் காதலியின் கைகள் என்னை தேடுகின்றன

எங்கள் இடையிலுள்ள பெருங்கடலிலும்

எல்லைகளிலும், தடுப்புச் சுவர்களிலும்

காதல் என்ற அந்த அற்புதமான பறவை பறக்கிறது

-

உயிரோடோ அல்லது வார்த்தைகளிலோ

என்றோ ஒருநாள்

நான் திரும்பி வருவேன்

அதுவரை

இந்த பனிப்பெருக்கிற்கிடையில்

என் தாயகத்தின் வெப்பத்தை

நான் மனதில் சுமக்கிறேன்..

Saturday, 29 March 2025

வெற்றிடத்தில் குரல்..

இல்லாதவர்

இல்லாதவரை அழைக்க

இருப்பதெங்கே

-

வெற்றிடத்தில்

அழைப்பொலி அலைகிறது

செவியில்லை

-

யாருமற்ற வெளியில்

ஊர்கிறது

பெயரற்ற குரல்

-

பாழின் வெளியில்

யாரின் அழைப்பொலி

நிழலிடம் பதில்

Monday, 24 March 2025

உறக்குதலென்னும் சாக்காடு..

உறங்கும் போது துயரம் வற்றிவிடுகிறது,

இரவென்னும் கருப்பு மருந்து

மென்மையாக என் உதடுகளில் கரைகிறது.

ஆனால் விழித்தெழுகையில்

அடித்துப் போட்டது போல்

அத்தனை வலி

-

கனவு என்ற புதையற் குழியில்

சிதைந்துகொண்டிருக்கிறது என் அடையாளம்

தினமும் இறந்து தினமும் பிறக்கிறேன்

ஒவ்வொரு மறக்கப்பட்ட நினைவும்

என் தோலின் ஒரு பகுதி

-

நினைவுகளின் கண்ணாடி அறையில்

எத்தனை முறை

என்னை நானே கொன்றிருக்கிறேன்

உடைந்த கண்ணாடித் துண்டுகளில் பிரதிபலிக்கும்

எண்ணற்ற அகங்கள், எது நான், எது கனவு?

-

என் உற்ற தோழன் இறந்து போனான்

அவனது நினைவுகளைத் திரட்ட முடியாமல் தவிக்கிறேன்

யாருக்கும் தெரியாத ஒரு மரத்தின் பெயர் போல்

ஒரு நாள் நானும் இறப்பேன்,

-

வாழ்வின் பெருமூச்சாக

ஞாபகங்களின் பூச்சி கூடுகள்

உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது.

-

மூளையின் இருண்ட நாடக அரங்கில்

ஒரு கனவு

மேலும் ஒரு கனவைக் கனவு காண்கிறது.

சூன்யத்தின் அப்பால் இருக்கிறேன்

இறந்தவர்களின் குரல்களை

ஒலிப்பதிவு செய்ய காத்திருக்கும்

ஒரு வெற்று ஒலிநாடா

-

நான் உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் என்ன?

பசிக்கும் வயிறா

மகனின் அணைப்பின் சூடா?

-

ஒவ்வொரு மறதியும் ஒரு சிறிய சாவு

நான் பதுக்கி வைத்திருக்கும் நினைவுகளே

என் ஆன்மாவின் செலாவணி

ஆனால் எத்தனை நாணயங்கள் எஞ்சியிருக்கின்றன?

-

நான் இறக்கும் வேளை,

என் நினைவுகள் பறவைகளாக பறந்து செல்லுமா

அல்லது காகிதக் கப்பல்களாக மூழ்கிப் போகுமா?

-

அந்தக் கடைசி நாளில்

மூடிய கண்கள் இமைகளுக்குப் பின்

என்ன காண்கின்றன இறுதியாய்?

கனவா, வாழ்க்கையா அல்லது

வேறொரு பிறப்பின் முதற் தரிசனமா?

-

பொன்னிறக் கதவு ஒன்று திறக்கிறது

நான் நுழைகிறேன்..

Friday, 21 March 2025

தொலைந்த காலத்தின் குழந்தை..

நினைவுகளின் கயிறுகள்

என் கழுத்தைச் சுற்றும்,

அவை தேனீக்களின் கூட்டமாய்

மூளையை மொய்க்கும்

உன் வியர்வையின் வாசனை

நாசியெல்லாம் நிறைந்து

என் நுரையீரலில் படிந்துள்ளது

-

இரவின் மைத்தடங்களில்

உன் பெயர் ஒரு வெட்டுக்காயம்.

நான் அதை மூடிக்கொள்கிறேன்

ஆனால் அது இரத்தப்பெருக்கை நிறுத்துவதில்லை

-

நீ கேட்ட அந்தப் பாடல்

மழை துளிகளில் செதுக்கப்பட்டது

உடைந்த கண்ணாடிகளாய்

என் காலடியில் சிதறுகிறது

கடற்கரையிலிருந்து ஓடிவரும்

அலைகள் போல

நினைவுகள் திடீரென்று

வந்துவிடுகின்றன, மூச்சைப் பிடித்தவனாய்

நான் மூழ்கிவிடுகிறேன்

உன் கரங்கள்

இனி என்னைக் காப்பாற்றாது.

-

சொல்லப்படாத உண்மைகள்

என் உடலின் அறைகளில்

அடைபட்டிருக்கின்றன,

பறவைகளின் எலும்புகள் போல

கூடுகளில் பதுங்கியிருக்கின்றன.

ஆழ்ந்து புதைந்துள்ள பொருள் போல

மண்ணடியில் கிடக்கிறது நமது காலம்,

புதைபொருளியல் நினைவுகள்

நாம் வாழ்ந்த காலத்தின் தொல்லியல்.

-

இப்போது இருளின் வடிகால்களில்

நீ வழிந்தோடுகிறாய்

ஒரே ஒரு மழைத்துளி

ஆயிரம் நினைவுகளைத் தூண்டும்

உன் அடிச்சுவடுகள்

என் மூளையின் சதுப்புநிலத்தில் பதிந்துள்ளன

-

ஆனால் நான்

ஏன் உன்னை நினைக்கிறேன் என்பது

மர்மமாகவே உள்ளது

யார் நினைத்தால்

யார் நினைவுக்கு வருகிறோம்?

நாம் தொலைந்த காலங்களின்

குழந்தைகள் மட்டுமே.

-

உன் நினைவு

ஒரு கூர்மையான கத்தி

என் ஆன்மாவைக் கிழிக்கிறது.

ஏனென்றால் நினைவுகள்

இறந்த பின் புதைக்கப்படுவதில்லை

அவை உயிரோடு புதைக்கப்படுகின்றன..

Monday, 17 March 2025

கண்ணாடியின் கவிதை

இந்த கண்ணாடி இங்கே எதற்காக

என் முகத்தின் ரேகைகளை எண்ணிக்கொண்டே

காலம் முழுவதும் அமைதியாய் நிற்கிறது

பசித்த நாட்களின் சலிப்பும்

போராட்டங்களின் வியர்வையும்

அதன் மேற்பரப்பில் படிந்திருக்கிறது.

-

ஒரு தொழிலாளியின் உடைந்த கைகளைப் போல

கண்ணாடியின் விளிம்புகள் கரடுமுரடானவை.

அது காட்டும் உண்மைகள்

வறுமையின் வாசலில் நின்ற

குழந்தையின் கண்கள் போல கசக்கின்றன.

-

நீ உன்னைப் பார்க்கிறாய்

ஆனால் அது நீயல்ல

அது உன் தந்தையின் சிதைந்த கனவுகள்

உன் தாயின் கண்ணீரில் கரைந்த உப்பு

உன் மூதாதையர்களின் சாபங்கள்

எல்லாம் ஒன்றாய் உறைந்து போன படிமம்.

-

கண்ணாடி என்ன சொல்கிறது?

அது பேசவில்லை

ஆனால் அதன் அமைதியில்

பல்லாயிரம் மாவீரர்களின் தியாகம்

போராளிகளின் கனவு

ஆயிரக்கணக்கான விதவைகளின் கண்ணீர்

காணாமல் ஆக்கப்பட்ட

காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கண்கள்

கலந்திருக்கிறது.

-

இரவில் கண்ணாடி முன் நிற்கிறேன்

என் முகத்தில் படிந்திருக்கும்

எத்தனை போராட்டங்கள்

எத்தனை வெற்றிகள், தோல்விகள்

எத்தனை காதல்கள், பிரிவுகள்.

-

கண்ணாடி காட்டுகிறது

நாளை வரப்போகும் புரட்சியை

மக்களின் விடுதலைப் பாடல்களை

சமத்துவத்தின் வானவில்லை

நீதியின் சூரியனை.

-

ஆனால் இன்று

இந்த கண்ணாடியில்

நான் காண்பது

விடுதலைக்காக ஏங்கும் ஓரினத்தின் முகம்

அநீதியால் சிதைந்த சமூகத்தின் முகம்

கையறு நிலையில் குமையும் தோழர்களின் முகம்.

-

கண்ணாடியே

நீ எனக்கு காட்டுவது

வெறும் விம்பம் அல்ல

அது ஒரு வரலாறு, போராட்டம்

எதிர்காலம்..

Wednesday, 12 March 2025

மங்கிய பனிப்புகையாய்..

காலி செய்த வீடு

சுவரில் தொங்கும் படத்தில்

காற்று அசைக்கும் முகம்

-

இலை உதிர்ந்த மரம்

கிளைகளில் தங்கும்

மழையின் கண்ணீர்

-

அலை கொண்டு செல்கிறது

கரையில் எழுதிய

குழந்தையின் பெயர்

-

நெருப்பின் சாம்பலில்

மீண்டும் எழுகிறது

காற்றின் நினைவு

-

கண்ணாடி உடைந்தது

துண்டுகளில் தெரிகிறது

ஒரே நிலவு

Monday, 10 March 2025

காலம் என்னும் காரணம்..

நான் கேட்கிறேன்

காலம் என்பது

இயக்கத்தின் அளவீடா

அல்லது இயக்கமே காலமா?

-

எந்த முதல் புள்ளியிலிருந்து

காலம் தன் பயணத்தைத் தொடங்கியது

அல்லது தொடங்கியதற்கு முன்பே

தொடங்கியிருந்ததா காலம்

-

வெளியில் நகரும் பொருட்களின்

இயக்கத்தை அளப்பதற்காக

மனிதன் கண்டுபிடித்த கருவியா காலம்

அல்லது காலமே கண்டுபிடித்ததா மனிதனை

-

பரிணாம வளர்ச்சியின்

படிக்கட்டுகளில் ஏறி வந்த

மனித மூளையின் வளர்ச்சியில்

காலம் என்பது ஒரு கண்டுபிடிப்பா

அல்லது கண்டுபிடிப்புக்கு முந்தைய

அடிப்படை உண்மையா

-

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்

சாக்ரடீஸ் குடித்த விடம்

இன்று நான் குடிக்கும் தேனீரில்

கலந்திருக்கிறதா

காலத்தின் தொடர்ச்சியில்

எல்லாமே கலந்திருக்கிறதா

-

வரலாற்றின் இயக்கவியலில்

முரண்பாடுகளின் மோதலில்

காலம் என்பது நடுவனா

அல்லது மோதலின் விளைவா

-

உழைப்பின் மதிப்பை

அளக்கும் அளவுகோலாக

காலத்தை மாற்றியது யார்

மூலதனத்தின் கைகளில்

காலமும் ஒரு சரக்கானதா

-

நேற்று இறந்த

தொழிலாளியின் கனவுகள்

நாளை பிறக்கப்போகும்

குழந்தையின் கண்களில்

தொடர்ந்து வாழ்கின்றதா

-

பொருளின் இயக்கமா காலம்

அல்லது இயக்கத்தின் பொருளா காலம்

விடை தேடலின் தொடர்ச்சியில்

கேள்விகளே விடையாகின்றன

-

ஆனால்

காலம் என்னும் காரணத்தை

காரணமின்றி விளக்க முடியுமா

காலத்தைக் கடந்து நின்று

காலத்தை விளக்க முடியுமா

-

நான் கேட்கிறேன்

காலம் என்பது

வரலாற்றின் இயக்கமா

அல்லது இயக்கத்தின் வரலாறா?

Wednesday, 5 March 2025

ஓடும் பொன்னும் ஒக்கும்..

கொடுங்கதிர் மாமுகடு குளிர் மரபு கொழிக்கும்

இறுதலின் மாண்பினைக் கருதிய உள்ளம்

புறவணி மாந்தர் அகம்புகா மாட்சியின்

பிறந்த கருக்குழவி நறும்புகை கவினி

யாண்டுந் தோன்றிய கண்ணகத்து உணர்வே

-

விண்மிசை நிலாவின் வெண்மையும்

கண்மிசை கருவியின் பெருமையும் ஒக்கும்

வெறுமையில் உள்ளமும் நிறைமையில் கருத்தும்

ஏதும் இன்றியத் தெளிவின் ஒருங்கே

அருள்மிகு பெருவெளி அமைதியில் உறைவது

புல்நுனி பனித்துளி பொலிவுடன் தோன்றி

வானெனும் வெறுமையில் வகையற மறைதல்போல்

மூவுலகம் ஞாயிறு திங்கள் உடுக்களும்

கரம்புணர் குலத்தொடு கலந்து மறையவே

-

அத்திறன் பொருந்திய அருள்மிகு சிவனே

நின்னின் வேறலேன் நெஞ்சகம் வீழலரும்

செழுங்கரும் புள்ளியின் சிலம்பும் யாறினும்

ஆறடியொற்றிய தடம்பெறு கால்களில்

நீறு படர்ந்திட நிலவிய சீவனே

ஒன்றிணையாகிய உள்ளொளி வாழ்வே..

Sunday, 2 March 2025

என்றென்றும் எரியும் நெருப்பு..

மரணத்தின் வாசலில் 

மாலைப்பொழுது போல

மெல்ல அசைந்தாடும் ஒளி நீ.

என் எலும்புகளின் 

குகைகளுக்குள் பாயும்

பச்சை இரத்தம் நீ.

-

காற்றில் கலந்த காதல் மணம் ஊறி

கண்ணீராய் கரைந்த கவிதை நீ

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்

பெருமூச்சாய் உறையும் பிரார்த்தனை நீ.

-

விதியின் வெண்சுவரில்

விரல்களால் வரையும் ஓவியம் போல

வலிகளின் வண்ணங்களில்

வாழ்வின் வரைபடம் நீ.

-

இருளின் கர்ப்பத்தில்

இன்னும் பிறக்காத கனவுகளின்

தாலாட்டு பாடும்

தனிமையின் தாய் நீ.

-

உன்னை தொலைத்த

ஒவ்வொரு நொடியும்

உயிரின் செத்த பகுதிகளில்

உப்பாய் படிந்த வலி நீ.

-

நீ இல்லாத வெறுமையில்

நெஞ்சம் அலையும் போதெல்லாம்

நினைவுகளின் நீர்க்குமிழிகளில்

நித்தியமாய் மிதக்கும் தெப்பம் நீ.

-

என் கண்களின் கடைக்கோடியில்

எப்போதும் உறையும் ஈரம் நீ

காலத்தின் கைகளில்

காயாத காயம் நீ.

-

உன்னோடு நான்

உயிர்த்த ஒவ்வொரு காலையும்

உதிர்ந்த இலைகளாய்

என் நினைவில் அசைகிறது.

-

மௌனத்தின் மொழியில்

மயங்கி அவிழ்ந்த வார்த்தைகளின்

அர்த்தமற்ற அழகில்

அனாதையாய் அலையும் அலை நீ.

-

நீ என்பது

நெருப்பின் நினைவுகளில்

நித்தியமாய் எரியும்

நேற்றின் நிழல்..

Wednesday, 26 February 2025

பிரமை வழிச்சுருள்..

வாழ்வென்பது ஒரு நூலகம்

நமக்கும் நமக்கு முன்னும் பின்னும்

வாழ்ந்தவர்களின் கனவுகளை

அதன் நூல்களில் நாம் வாசிக்கிறோம்

-

என்னோடு ஒன்றாய்ப் படித்தவர்கள்

தொடர்பற்றுப் போனார்கள்

பயணத்தில் எதேச்சையாய்

சந்தித்தவர்கள் நண்பராகிறார்கள்

காதலித்தவள்

நீர்மேல் எழுத்தாய் மறைந்தாள்

முன்னறிமுகமில்லாதவள் நெருக்கமானாள்

-

அனைத்தும் முன்குறிக்கப்பட்டதோ

அல்லது தற்செயலின் விளையாட்டோ?

மாபெரும் கண்ணாடி பிரமைவழிச் சுருளில்

நாம் அனைவரும் தொலைந்தவர்களே

-

ஒவ்வொரு சந்திப்பும் பிரிவும்

எல்லையற்ற நூல்களில்

ஏற்கனவே எழுதப்பட்ட வரிகள்

நாம் வாசிப்பவர்கள் மட்டுந்தானா?

-

நினைவென்பது மற்றொரு கனவு

நிகழ்காலமும் மற்றொரு மாயை

ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு

நாம் நடக்கும் பாதை வெறும் நிழல்

-

உண்மையெனக் கருதுபவை அனைத்தும்

மறையும்போது தான் அறிகிறோம்

வாழ்வென்பது ஒரு கனவின் கனவு

அதில் காண்பதெல்லாம்

அந்தக் கனவின் நினைவுகள்..

Saturday, 22 February 2025

நிலத்தின் நினைவுகள்..

இன்று காலை நான் எழுந்தபோது
என் நிலம் வேறொருவனின் கைகளில்
கருகிய விதைகளாய் உதிர்ந்து கொண்டிருந்தது
பழைய நாட்காட்டிகளில் குறித்த நாட்கள் போல
என் நண்பர்கள் ஒவ்வொருவராய் மறைந்து போனார்கள்
-
அவர்களின் கண்களில் நான் கண்ட கனவுகள்
இப்போது துப்பாக்கிக் குழல்களில் உறங்குகின்றன
வெறுமையின் நிழல்கள் வளர்ந்து
பெருங்காடுகளாய் என் நினைவுகளை மூடுகின்றன
-
ஒவ்வொரு மாலையிலும் 
புதிய கல்லறைகள் முளைக்கின்றன
பழைய போராட்டங்களின் தழும்புகள்
இன்னும் குணமாகவில்லை
காலம் என்கிற கரையான்
எங்கள் வரலாற்றை மெல்ல மெல்ல அரிக்கிறது
-
ஆனால் இந்த மண்
தன் குருதியை மறக்கவில்லை
ஒவ்வொரு விதையிலும்
பழைய போராட்டங்களின் நினைவுகள்
புதிய வேர்களாய் முளைக்கின்றன
-
எங்கள் வீதிகளில் அறம் இறந்து கிடக்கிறது
இன்னும் மீந்திருக்கும் 
அதன் சாட்சிகள் நாங்கள்
காலத்தின் கையில் கரைந்து போகும்
எங்கள் காலடித் தடங்களில்
இன்னொரு தலைமுறை
தன் கதையைத் தேடுகிறது..

Friday, 21 February 2025

தாய்மொழி நாள்..

யாணர்கொள் புலம்பொழில் அகன்றிலை மரத்தின்

வேணிலங் கொண்ட வெம்முகை அவிழ

வான்பொழி தண்துளி வரைப்புறத் தோய்ந்து

கானம் கமழும் கார்வரு காலை

மலையமா தவத்தோன் மாமொழி போல

நிலையின் நீடிய நிகரில் தமிழே

-

யாழின் நரம்பிசை எழுமொலி போல

வாழிய நின்மொழி வளம்பல தந்தே

தென்புல வாணர் தெளிந்துரை கேட்டன

தேன்பொதி மென்மொழி திகழ்வுறப் புணர்த்தன

ஐங்குறு நூற்றின் அகத்திணை மாண்பும்

பைங்கிளி மொழியும் பாடிடப் பதிந்தன

அகலினும் நெகிழா அரும்பொருள் காப்பாய்

இகலினும் குன்றா இயல்பினை உடையாய்

-

மாறிவரு காலத்து ஆறுபல கண்டும்

வேறுபட்டு நில்லா நின்னிழல் தோன்றி

மணிவண்டு மொய்க்கும் மலிபெயல் ஊதையும்

அணிகொள் பூந்தார் அரும்பா நாற்றமும்

நின்னோ டுறழ்வில தமிழின் தொன்மையே

-

ஓங்கிய பெருங்கடல் உலவா தாயினும்

நீங்கா நின்பெயர் நிலைபெற்ற தன்றே

இன்னகம் பெறுக இதுகேள் பாண

உன்னுதல் தவிரா ஒண்டமிழ் ஒலியே..

Wednesday, 19 February 2025

தேசம் அவர்களைக் காணும்..

இந்த மண்ணில் நாம் பிறந்தோம்

கடலின் ஓசை எங்கள் தாலாட்டு

மலைகளின் வடிவம் எங்கள் கனவுகள்

நாங்கள் விரும்பியது ஒன்றே ஒன்று

எங்கள் பெயரால் ஒரு துண்டு நிலம் 

-

பின்னர் தேசம் என்பது

ஏதிலியின் நினைவுப் புத்தகமாயிற்று

செய்திகளின் கடைசி பக்கத்தில்

ஒரு சிறிய குறிப்பு.

-

நான் இப்போது பதிவு செய்கிறேன்

இறந்தவர்களின் பெயர்களை எண்ணுகிறேன்

அவர்கள் மண்ணோடு மண்ணானதற்கு

இளமையின் சாட்சியாக இருந்தேன்

-

எங்கள் வீரர்கள் சொன்னார்கள்

தேசத்திற்காக நாங்கள் செல்கிறோம்

நாங்கள் சொன்னோம்

தேசம் உங்களோடு திரும்பி வரும்

இரண்டுமே திரும்பவில்லை.

-

எங்கள் பாடல்கள் இப்போது

முற்றத்து சுவர்களில் எழுதப்பட்ட கவிதைகள்

வெளிச்சத்தில் மறைந்து போகும் எழுத்துக்கள்

ஆனால் மழையில் மீண்டும் தெரியும்.

-

ஒரு தாய் தன் மகனைத் தேடுகிறாள்

ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொரு கோவிலிலும்,

போர்க்களத்திலும், பின்னர் வானத்தில்

அவன் ஒரு விண்மீன் ஆனான் என்கிறார்கள்

ஆனால் விண்மீன் என்பது 

அவளருகில் என்றைக்குமே வரமுடியாத 

தொலைதூரக் கனவு தான் 

-

வரலாறு நம்மைக் கடந்து செல்கிறது

முதலில் கப்பல்களாக, பின்னர் விமானங்களாக

முதலில் ஆயுதங்களால், 

பின்னர் உடன்படிக்கைகளால்

உலகின் வல்லரசுகள் 

எங்கள் எலும்புகளில் நடக்கின்றன

-

உங்கள் காலடி ஓசையை 

இரவுகளிற் கேட்கிறோம்.

-

நான் இன்னும் நம்புகிறேன்

கடலின் அலைகளைப் போல

மண்ணின் வாசனையைப் போல

அடுத்த தலைமுறை 

நமது கனவைச் சுமப்பார்கள்

விடுதலை என்பது 

குருதியில் ஓடும் ஒரு வார்த்தை

அதை அழிக்க முடியாது.

-

நண்பனே..

எங்கள் சவப்பெட்டிகளில் எழுது 

அவர்கள் தேசத்தைக் காணவில்லை

ஆனால் தேசம் அவர்களைக் காணும்..

காத்திருத்தலின் இருள்..

காலம் என் இதயத்தை

கறுப்பு ரோஜாவாக்கியது

ஒவ்வொரு இதழும்

வாடிய நம்பிக்கைகள்

இருட் கூடாரத்தில்

நான் ஒரு சிறைப்பறவை

என் இறக்கைகள்

உதிர்ந்து போன பின்னும்

பறக்க முயல்கிறேன்

வானம் என்னை நிராகரிக்கிறது

-

அவள் மௌனம் ஒரு கத்தி

என் நெஞ்சை அறுக்கும் கூர்மை

ஆனால் இந்த வலி எனக்கு பழக்கமானது

வேதனை என் இரத்தத்தில் கலந்த விடம்

நான் அதைப் பருகி பருகி வளர்ந்தேன்

இப்போது அது என் உயிர்மூச்சு

-

‘ஒன்றுமில்லை’ என்பாள்

ஆனால் அந்த வார்த்தைகள்

பொய்களின் புதைகுழி

நான் அதில் விழுந்து கொண்டிருக்கிறேன்

எப்போதும் வீழவே செய்கிறேன்

கீழே எங்கும் இருள்தான்

மேலே அவள் முகம் ஒரு மங்கிய நிலவு

-

வரக்கூடுமென காத்திருந்து காத்திருந்தே

என் இளமை கருகி மடிந்தது

ஒவ்வொரு காலையும் ஒரு சவப்பெட்டி

நான் அதில் என் கனவுகளை புதைக்கிறேன்

ஆனால் அவை இறக்க மறுக்கின்றன

என் நினைவுகளில்

அழுகிக் கொண்டிருக்கின்றன

-

இன்னொரு நிழல்

அவள் கண்களில் நடனமாடுகிறது

அந்த நிழலுக்கும் நானே சாட்சி

என் மௌனமே என் சாபம்

ஒவ்வொரு அசைவிலும் நான் சிதைகிறேன்

-

இப்போது நான் ஒரு வெற்றுக் கூடு

காலம் என்னை வெறுமையாக்கியது

என் எலும்புகளில் காற்று ஊளையிடுகிறது

ஆனால் இந்த வெற்றிடத்திலும்

எதையோ இன்னமும் நம்புகிறேன்

காத்திருக்கிறேன்..

Tuesday, 18 February 2025

காதலென்பது..

நான் உனக்குச் சொல்கிறேன்

உன் இதயத்தின் கதவுகளைத் திற 

கடலின் அலைகள் போல 

உன் கைகள் திறக்கட்டும் 

வானத்தின் விரிவு போல 

உன் விழிகள் விரியட்டும்.

காத்திரு 

நீ காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்

புதிய வசந்தம் பிறக்கிறது.

இப்போது

தென்றலில் நடனமாடும் மரங்களைப் போல

உன் உடல் அசையட்டும்

கடற்கரையில் உடையும் 

அலைகளின் முத்தங்கள் போல

உன் தொடுகை இருக்கட்டும் 

பௌர்ணமி இரவில்

கடலின் மேல் பரவும் வெள்ளி வெளிச்சம் போல

உன் அன்பு பரவட்டும் 

கடைசியாக,

விடிவெள்ளி விடியலை வரவேற்பது போல

இருளை விட்டு விலகுவதற்கான

பாடத்தை கற்றுக்கொள்

இதுதான் காதல் 

வாழ்வின் நிலையற்ற தன்மையில்

நிலைத்திருக்கும் ஒரே நித்தியம்..

Friday, 14 February 2025

நிலமும் நினைவும்..

நாம் உழுத 
நினைவுகளின் வயல்களில்
இன்னும் முளைக்கிறது காதல்
மழை பெய்யும் போதெல்லாம்
புதிய பச்சையில் துளிர்க்கிறது

உழவன் கலப்பையில் சிக்கும்
பழைய நாணயங்கள் போல
திடீரென வெளிப்படுகின்றன
மறந்துபோன நினைவுகள்

பனிக்காலத்து நிலத்தின் கீழே
விதைகள் உறங்குவது போல
ஆழ்மனதின் அடுக்குகளில் கிடக்கும்
 உன் நினைவுகள்
மண்ணின் வாசனை போல 
மூச்சை நிறைக்கின்றன

நிலத்தின் வரலாறு போல
நம் காதலும் அடுக்கடுக்காய்
படிந்து கிடக்கிறது, 
ஒவ்வொரு அடுக்கும்
ஒரு காலத்தின் சாட்சியம்

வேர்கள் நீரைத் தேடிச் செல்வது போல
என் நினைவுகள் உன்னைத் தேடுகின்றன
நிலத்தின் ஆழத்தில்
நீ என் சாரமாக ஊடுருவியிருக்கிறாய்..

Wednesday, 12 February 2025

காத்திருத்தல்..

நெடுங்கடல் கடந்த நீள்நிலம் பிரிந்தும்

வெற்பகம் தாண்டிய வேறுபட்ட தேயமும்

மன்னர் வகுத்த மறைமுறை தடுப்பினும்

கானல் நீர்போல் காட்சியில் கலந்து

மாலை வேளையில் மனத்தொடு முயங்கி

கனவினில் கூடிக் களிநடம் புரிந்து

காமம் கனன்று கருத்தொடு பிணைந்து

எந்நாள் கூடும் எனக்காத் திருந்தும்

பருவம் பலவும் பயின்று தேய்ந்தபின்

ஒருநாள் கூடல் உறுதியென் றுணர்ந்து

தனித்தனி ஊரில் தளராது காத்து

நினைத்தொறும் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிற்கும்

காலம் என்னும் கடல்மிசை மிதந்து

ஊழியும் உலகும் ஒருங்குடன் கழியினும்

மாறா அன்பின் மறுபிறப் பெய்தி

மலரும் பொழுதின் மணம்போல் கமழும்

காதற் பயிரை கசிந்துயிர்த் திருந்தே..

Monday, 10 February 2025

ஒப்பாரும் இல்லான்..

கடல்சூழ் வையம் கண்புகழ் வெற்றி

வேல்வலம் கொண்டு வெருவரத் தாக்கி

தென்புலம் காக்கும் திறல்மிகு ஏறே

சிறு குழுவாளர் சீற்றமும் பொறுத்து

அமர்முனை நின்ற ஆண்மையன் தனக்கு

பகை கையிற்சிக்கா பைந்நஞ்சணிந்து

களம்புகு போரில் கணை கையேந்தி

உயிர்க்கொடை தந்த ஒருமகன் அல்லனோ

-

குன்றினை நுண்கோல் குத்திடல் போல

புறத்தோர் வந்து புகல்தல் இன்றே

பெருங்கடல் நீர்மேல் பேர்நடை போல

மாற்றோர் வந்து மலிதல் ஆமோ

-

மண்காக்கும் வேங்கை மறத்தமிழ் வேந்தன்

கண்துஞ்சா நெஞ்சின் களிற்றுமேல் வீரன்

அயல்புலத் தாரும் அடங்குவர் அவற்கே

தமிழ்நிலம் காத்த தகைமிகு மறவன்

ஒப்பிலா முனைவன் உயிரென நின்பான்..

Friday, 7 February 2025

மலரினும் மெல்லிதாய்..

மாமலை முகட்டின் மறைந்துறை அருவி

தண்கயம் நிறைந்து தழைமுகம் காட்டி

நுண்பொடி மணலின் நுரைத்துளி பரப்பிக்

கான்யாறாகிக் கரைபுரண் டோடும்

-

பைங்குலைக் காந்தள் பனிமலர் அவிழ்ந்து

மென்பனி துயில்வழி மெல்லென எழுந்து

நறுந்தேன் பருகி நளிர்புறம் சேர்ந்து

தெள்ளொளி பரப்பித் தேமொழி பாடி

இன்னிசை முழங்கி இனிதமர்ந் திருக்கும்

-

தெள்ளிய பிறையின் திருநுதல் பொலிந்து

வள்ளிதழ் மலரின் வண்ணம்கொள் விழியும்

பொன்னிற மேனி புதுமணம் கமழும்

மின்னொளி கூந்தல் மெல்லிய சாயலும்

தேம்பொழில் நடந்து திசைமுகம் விரியும்

-

நீர்த்துளி படிந்த நெய்தல்தாள் அசைவில்

கூர்த்தெழு விழியின் குளிர்நோக்கு பதிந்து

கூந்தல் நறுமணம் கொண்டுயிர் கவர்ந்து

ஊன்றிய நினைவின் உள்ளுயிர் உருகித்

தேன்சொரி மொழியால் திசைகள் நிறைக்கும்

-

அரும்பிய முகையின் அகவிதழ் அவிழ்ந்து

கரும்பினும் இனிய களிதரு தேறல்

சுரந்துநின் றதுபோல் சுவைபெறு காதல்

நிரந்துநின் றெழுந்து நெஞ்சகம் நிறைத்து

மலர்ந்த பூவின் மணம்போல் பரக்கும்

-

தேம்பிழி மலரின் திரள்மணம் கமழ்ந்து

ஆம்பல்நாள் மலரின் அளிநறா பொதிந்து

கூம்பிய இதழின் குறுநகை மலர்ந்து

தாம்புணர் காதல் தண்ணென விரிந்து

வெம்மையும் குளிர்ந்து வேட்கையும் தணியும்

-

மான்பிணை நோக்கின் மென்னடை பயின்று

தேன்மொழி பேசித் திளைத்துள மகிழ்ந்து

வான்பெரு வெளியின் வழிவழி பரந்த

காதலும் காமமும் கடல்கொண்டு பொங்கி

பேரின்ப வெள்ளம் பிறங்கிப் பெருகிக்

கரைகடந் தோடும் களிப்பினிற் திளைத்து

உயிரொடு கலந்த ஒண்பெரும் காதல்

கயிறென நீண்டு கருத்தினில் பிணைந்து

நெஞ்சொடு நெஞ்சம் நேர்ந்துநின் றுருகி

அன்பெனும் அமுதில் ஆழ்ந்துநின் றெழுந்து

பேரின்ப வெள்ளம் பெருகியே வழியும்..

Friday, 31 January 2025

தாயகத் தாகம்..

கானப்பறவை கதிரவன் நோக்கி

ஏங்கி நிற்கும் இயல்பினைப் போலவும்

மலைவாழ் யானை மரங்களை நோக்கி

தளைபட்டிருந்து தவிக்கும் தன்மையும்

நீர்வாழ் மீனினம் நெடுங்கடல் நினைந்து

தூண்டில் பட்டுத் துயருறும் போன்று

மண்ணில் வாழ்தல் மனம்கொள்வதிலையே

விண்ணைப் போல விரிந்த நெஞ்சினேன்

தாயக மீட்பில் தணியா வேட்கையேன்

பாடல்பாடிப் பரிதவிப்பேனே..

Thursday, 30 January 2025

தொன்மைத் தீ..

தொன்மை உலைக்களத்தின் ஓரத்தில்

முன்னோர் நெருப்பின் நினைவு

இன்னும் என் விரல்களில் துடிக்கிறது

ஒவ்வொரு பொறியிலும் ஒரு கதை

தொன்று நிலைத்த இரும்பின் மௌனம்

உலைக்களத்து நெருப்பில் உருகி

புதிய வடிவம் பெறும் நொடியில்

புதைந்து கிடந்த காலம் விழித்தது

துருவும் காற்றில் துடிக்கும் சுடரில்

துருத்தியின் மூச்சில் துள்ளும் தீயில்

கறுப்பு இரும்பின் கனவுகள் கரைந்து

செந்நிற ஊற்றாய் செழித்து வழிந்தன

எத்தனை தலைமுறை எத்தனை கைகள்

இந்த நெருப்பை ஏந்தி வந்தன

குளிர்காலக் காலைப் பனியில் நடுங்கி

குடிசையின் அடுப்பில் குடியேறியது

மூதாதையரின் முதல் கண்டுபிடிப்பு

மனிதக் கைகளின் முதல் ஆயுதம்

காடுகளை வெட்டி கனவுகள் விதைத்த

காலத்தின் முதல் வெளிச்சம்

சமவெளிக் குடியிருப்பில் சமைந்த

முதல் உணவின் மணம் இன்னும்

புகையின் நினைவில் படர்கிறது - அதன்

சாம்பலில் புதைந்த சரித்திரம் பேசுகிறது

பண்டைய பயிர்களின் பச்சை நினைவில்

பருவம் தவறாமல் பாய்ந்தெழுந்த

வெப்பத்தின் விதைகள் வேர்விட்டு

விளைந்த விடியல்கள் விரிகின்றன

கல்லில் தீப்பொறி கண்டெடுத்த நாளின்

கணநேர வியப்பில் கண்விழித்த

மனித இனத்தின் முதற் கனவு

மண்ணில் வேரூன்றி மரமாய் வளர்ந்தது

அடுப்பங்கரையில் அமர்ந்து கேட்ட

பழங்கதைகளின் பரம்பரை மரபில்

நெருப்பின் நாவில் நீண்ட நினைவில்

நிகழ்காலம் நெய்யப்படுகிறது

இப்போதும் உலைக்களத்தின் ஓரத்தில்

இளைஞன் ஒருவன் நின்று

முன்னோர் விட்டுச் சென்ற

தீயின் கதையைத் தொடர்கிறான்..

Monday, 27 January 2025

தனிமையின் விண்மீன்..

அந்த விண்மீன்

எப்போதும் தனியாகத்தான் இருக்கிறது

அதன் ஒளியும் அதன் வலியும் ஒன்றுதான்

ஆயிரம் விண்மீன்கள் சூழ இருந்தும்

அது தனது தனிமையை விரும்புகிறது.

எத்தனை சாம்பல் மேகங்கள்

அதன் கண்களை மறைக்க முயன்றன

எத்தனை கறுப்பு இரவுகள்

அதன் ஒளியை விழுங்க முயன்றன

ஆனால் அந்தக் கனல் மீன்

இன்னும் எரிகிறது, பிரகாசிக்கிறது.

அது காதலர்களின் விண்மீன்

பிரிந்தவர்களின் விண்மீன்

எதிர்பார்ப்பவர்களின் விண்மீன்

கடலின் ஆழத்தில் மிதக்கும் மீனவர்களின்

கண்களில் தெரியும் ஒளி அது

தொலைந்து போன வழிப்போக்கர்களின்

நெஞ்சில் துடிக்கும் நம்பிக்கை அது.

அதன் தனிமை எனக்குத் தெரியும்

நானும் ஒரு விண்மீன் தான்

பூமியில் தனியாக எரியும் விண்மீன்

என் வார்த்தைகள் என் ஒளி

என் கவிதைகள் என் கதிர்கள்.

நள்ளிரவில் நான் பார்க்கிறேன்

அந்த விண்மீனின் தனிமையை

அது என் தனிமையை பார்க்கிறது

நாங்கள் இருவரும் புரிந்து கொள்கிறோம்

மௌனத்தின் மொழியை

வலியின் வரலாற்றை

ஒளியின் இரகசியத்தை.

எங்கோ ஒரு காதலி காத்திருக்கிறாள்

அந்த விண்மீனைப் பார்த்தபடி

எங்கோ ஒரு கவிஞன் எழுதிக்கொண்டிருக்கிறான்

அந்த விண்மீனை நினைத்தபடி

எங்கோ ஒரு புரட்சியாளன் நடந்து கொண்டிருக்கிறான்

அந்த விண்மீனை நம்பியபடி.

விண்ணின் கருமையில் ஒளிரும்

அந்தத் தனி விண்மீன்

நமது தனிமையின் வேர்களை

நமக்குக் காட்டுகிறது

நமது வலிமையின் ஆதாரத்தை

நமக்குப் போதிக்கிறது.

இறுதியில் நாம் அனைவரும்

தனித்தனி விண்மீன்கள் தான்

ஒவ்வொருவரும் தனித்து ஒளிர்கிறோம்

ஒவ்வொருவரும் தனித்து எரிகிறோம்

தனிமையின் வலிமையை, ஒளியின் நேர்மையை

இருளின் தேவையை, காதலின் நித்தியத்தை

விண்மீன் சொல்லிக் கொண்டிருக்கிறது

காதுகொடு கேள்

இது தான்

அந்த விண்மீனின் பாடல்

நமது பாடல், தனிமையின் சங்கீதம்

ஒளியின் கவிதை..

-திரு

Thursday, 23 January 2025

அன்பின் ஐந்திணை..

அகத்திணைத் தொடர்நிலைச் செய்யுள்கள்

---

குறிஞ்சித் திணை - கந்தருவ மணத்துறை 

யாஅம் காதல் கொண்டனம் அவள்கண்

மாஅல் கொண்ட நிலவொப்ப முகத்தள்

வேஎய் அன்ன மெல்விரல் நுடங்க

தேஎம் பாய்ந்த தீங்குரல் பாட

காந்தள் மலரும் பொழிலிடைக் கண்டேன்

வண்டறை பொழுதில் வந்தனள் நின்றாள்

பண்டைநாள் முதலே பயின்றது போலப்

புணர்ந்தனம் யாமே புதுவதின் மகிழ்ந்தே

-
முல்லைத் திணை - தலைவன் வரவு எதிர்கோள் துறை 

காஅர் கொண்ட கார்முகில் போல

நீலம் துளும்பும் நெடுங்கண் பெண்ணே

மான்பிணை அன்ன மெல்நடை பயிற்றி

தேன்கமழ் கூந்தல் நெற்றியள் உடையள்

அழகு மிளிரும் அணிபொலிந் தோன்றி

நெஞ்சம் கவர்ந்தனள் நல்லணி யாளே

வெம்பகல் வேந்தன் வீழ்ந்திடும் பொழுதில்

அஞ்சிறை வண்டின் அரவமும் அடங்கி

முல்லை மலரின் மணம்வீ சும்மே

-
மருதத் திணை- புணர்ச்சியின்பின் பிரிதற் துறை 

தாமரை மலரின் தண்ணறு நறவம்

காமர் உண்கண் பாவையின் நோக்கம்

பொருனை யாற்றின் வளம்பெரு துறையில்

செய்ய வாயள் சிறுநகை பூத்தனள்

பொய்யா நெஞ்சம் புலம்புற நோக்கி

மெய்யே காதல் மேவிய பொழுதில்

கையால் தொட்டுக் கதிர்முலை தழீஇ

நெய்தல் நாணும் நெடுங்கண் காட்டி

நற்பொருள் தந்தனள் நங்கையே யானுக்கே

-

நெய்தல் திணை - காதல் மிகுதிறத் துறை 

கடல்திரை ஓதம் கரையினைத் தழீஇ

மடல்விரி தாழை மணற்கரை ஓரம்

வலம்புரி சங்கின் வார்முத்து அன்ன

நன்மைசேர் பல்லள் நகைமுகம் காட்ட

புலம்பொடு வந்தேன் பொழுதுடன் காண

ஒள்ளொளி பிறையம் எழுந்தது வானில்

கலங்கிய நெஞ்சம் அழகுற நோக்கி

தடுத்த காதல் வேட்கையின் மீதூர

நிலம்பக வந்தனள் நல்லணி தானே

-

பாலைத் திணை- பிரிவாற்றாமைத் துறை 

பிரிந்தனள் போனாள் பெருங்குறி காட்டி

வருந்திய நெஞ்சம் வாடிய பொழுதில்

பருந்துபட வறந்த பாலை நிலத்தில்

கருங்கல் பாலையில் கானல் தோன்ற

வெம்மை மிகுந்த வேனில் காலத்து

இம்மை யாக்கை இடர்ப்பட நோவ

செம்மை யாளர் செப்பிய மொழியே

தம்மை யானும் தளர்வற நினைந்தே

-
குறிஞ்சித் திணை - முதற் சந்திப்பு துறை 

வேய்மலர் பொழிலில் வெற்பகம் ஏறி

குயிலினம் பாட கூவும் பொழுதினில்

தேன்கொள் மொழியள் தேமொழி பாட

மலையகம் புல்கி மருண்டனள் நிற்ப

தளிர்க்குரல் கேட்டு தயங்கினள் நோக்கி

பாங்குற அணைந்து பணிமொழி கூறி

வீங்கிய முலையள் வெருவர நோக்க

தாங்கொணா காதல் தலைத்தலை சிறந்தே

-
முல்லைத் திணை- இருத்தல் துறை 

கார்கொண்ட வானம் கறுத்துமின் னாட

நலம்கொண்ட முல்லை செழித்துப்பூத் தாங்கு

நீர்கொண்ட முகில்கள் நிறைந்துபெய் தாங்கு

பார்கொண்ட காதல் பரந்துவிம் மாட

நலம்கொண்ட முகில்கள் இனிதுவந் தீண்ட

நெடும்கொண்ட முலையள் வழிமொழிந் தாளே

சேர்கொண்ட நெஞ்சம் திளைத்துள மகிழ

நேர்கொண்ட காதல் நிறைந்துள தம்மா

-
மருதத் திணை - ஊடல் நிமித்தத் துறை 


வயல்வளர் தாமரை வண்டமர் பொய்கை

அயல்வளர் நெய்தல் அலர்நிலா வீச

மயில்நடை பயிலும் மங்கையர் கூட்டத்து

கயல்விழி உடையாள் அழகொடு தோன்றி

வினைமறந் திருந்தேன் செழுங்கயல் விழியால்

பழகிய காதல் பரிவுடன் கொண்டே

அயர்வற நோக்கி அருள்செய்த வாறே

உயிர்க்குயி ராகி உள்ளுறைந் தனளே

-
நெய்தற் திணை- இரங்கற் துறை 

கானல் அலவன் கரையோ டாட

மீனின் கூட்டம் மிளிர்திரை பாய

ஊனுறு காதல் உள்ளத்துக் கொண்டு

தேனுறு மொழியள் திருமுகம் காட்ட

யானுறு துயரம் யாவரும் அறிய

மானுறு நோக்கி மனம்புகுந் தாளே

வானுறு பிறையம் வழிகாட்ட வந்து

மீனுறு கடலின் மெல்லடி பதித்தே

-
பாலைத் திணை - பொருள்வயிற் பிரிவுத்துறை 


பொருள்வயின் பிரிந்து பொன்னகம் தேடி

மனைமுகம் நோக்கி மனம்பெரிது உருகி

பனிபடு கானம் பலபக லிருந்து

துனிகொள் நெஞ்சம் துயர்மிகப் பெருக

இரங்குவென் யானும் இடர்ப்படும் பொழுதில்

மரங்கொண்ட பொழில்கள் மறைத்திட வந்து

பொறையுடை நெஞ்சம் புலம்புறத் தேற்றி

மறவாக் காதல் மனத்துள் நிறைந்தே

-
குறிஞ்சித் திணை - இயற்பழித்துக் கூறல் துறை


குன்றக நாடன் மாண்புடை மகளே

நிலையக மானும் நேர்கொண்ட விழியள்

நூலுணர் நுண்ணிடை அழகொடு நடந்து

மலையுறை தெய்வம் மருளுற வந்து

பேரருள் செய்த பண்புடை யாளாய்

என்றும் காதல் நெஞ்சினில் தந்து

பாடல்கள் பயிலும் பாவையள் ஆகி

மலைமகள் போல மனங்கவர்ந் தனளே

-

முல்லைத் திணை - தலைவி பருவங்கண்டு அழிதற் துறை 


முல்லையம் கானல் முகிழ்த்தன பூக்க

பழமையம் காதல் பாங்குற வந்து

வன்மையம் கூந்தல் வண்டமர் குழலி

மென்மையம் மொழியள் மெல்நடை பயின்று

சொல்லியல் தமிழால் சொல்லிய பாடல்

நன்மையம் நெஞ்சம் நயந்துகொண் டதுவே

இன்பியல் வாழ்க்கை இனிதுடன் அமைய

வளைந்த புருவம் வேட்கையின் வளைந்தே

-
மருதத் திணை - புலவித் துறை 

வயல்வளர் செந்நெல் வளம்பெருக் கெடுத்து

அயல்வளர் தாமரை அலர்மிசை அமர்ந்து

முயல்வளர் பிறையம் முகம்போல் விரிந்து

கயல்வளர் கண்ணி அழகொடு நடந்து

பயில்வளர் காதல் பண்புடன் மொழிந்து

துயில்வளர் கண்ணித் தூக்கம் கெடுத்து

மயில்நடை சாயல் மனங்கவர்ந் தனளே

நுண்மைசேர் விழியால் அன்புசெய் தாளே

-

நெய்தற் திணை - களவு வெளிப்பாட்டுத் துறை 


கடல்மிசை ஓதம் கரையினை முத்தும்

தடமலர் நெய்தல் தண்ணறு மலரும்

படுமணல் பரப்பில் பாவை வந்தனள்

நெடுநிலை மனையம் நேர்படக் கண்டு

கொடிநுடங்கு இடையாள் அழகினள் ஆகி

அடிவருந் தாமல் அணைந்துடன் வந்து

முடிவிலா காதல் முகிழ்த்துப்பூத் ததுவே

கடிமலர் கமழும் கானல் ஊரே

-

பாலைத் திணை - மீள்வழித் துயர் துறை 


பாலைவன் காடு பருந்துபட வறந்து

காலையம் பொழுதில் கதிரவன் கனல

மாலையம் பொழுதில் மனம்தளர்ந் திருந்து

பாதையம் வழியே தனித்துநின் றழுங்க

துயரம்தான் மிகுதி விளைந்துநின் றதுவே

நீள்விழி மடந்தை நல்கிய நோய்தீர

மேலையம் வானில் மின்னொளி தோன்ற

நெஞ்சகம் தன்னில் அமைதியுற் றதுவே

-

குறிஞ்சித் திணை - தோழி அறத்தோடு நிற்றல் துறை 

அன்னையும் ஊரும் அறிந்திலர் நம்மை

மின்னிடை மடந்தை மெய்யுறத் தழுவி

பொன்னிற மேனி பூத்துட னிலங்க

தன்னுடை நலத்தால் தளிர்க்கை பற்றி

மன்னிய காதல் மனத்தினில் கொண்டு

பின்னிய கூந்தல் பிறழவிட் டாங்கே

பெண்டிரும் காணப் பேரழ கோடு

இன்னுயிர் ஆகி இதயத்துள் நிறைந்து

தன்னுடை அன்பால் தவிப்பறச் செய்தாள்

என்னுடை நெஞ்சம் இன்பமே கொண்டே

-
குறிஞ்சித் திணை - தலைவி கூற்றுத் துறை 


மலையகம் புகுந்து மறைமுகம் நோக்கி

நூலுணர் மடவரல் ஒள்நுதல் காட்ட

வளைந்த புருவம் நெளிய நகைபூத்து

நிலவொளி பரப்பி நெஞ்சகம் புகுந்து

குடிமகள் ஆயினும் குறிப்பறிந் தணைந்து

நலமிகு தோளில் நறுமலர் சூட்டி

வலமுறை வந்து வழிமொழிந் தனளே

உணர்வெலாம் கலந்து உள்ளம் மலர்ந்ததே

-

மருதத்திணை- கற்பின் சிறப்பு துறை


மனையகம் புகுந்து நன்னாள் நாணால்

கால்சிலம் பொலிய கரம்பற்றிக் கொண்டு

தினையளவு பிரியா திருமணம் முடித்து

நினைவெலாம் ஒன்றி நெஞ்சகம் கலந்து

கனவிலும் பிரியா காதலள் ஆகி

இனியநல் வாழ்வில் இல்லறம் நடத்தி

தனிமையில் கூடி தழுவியே நின்று

பனிமலர் போலப் பரிவுடன் வாழ்ந்தே

-
குறிஞ்சித் திணை - இயற்கைப் புணர்ச்சித் துறை 


தேன்பிழி நறவின் திருந்திய வாயள்

காம்புடை முல்லை கமழ்ந்திடும் கூந்தல்

பாங்குற நெஞ்சில் இனியளாய்த் தோன்றி

வாடிய உள்ளம் தளிர்த்திட வந்து

வேம்புறு துயரம் விலக்கிட வல்லாள்

பூம்புனல் ஊற்றம் பொழிந்திடும் கண்ணள்

தாம்புணர் காதல் தலைக்கொண்டு நின்று

காப்புடை யாகி உயிர்க்குயி ரானாள்

-

முல்லைத் திணை - வாழ்த்தியற் துறை 


யாழினும் இனிய யாமத்து வந்து

தாழ்விலா காதல் தலைமகள் தந்த

வாழ்வின் இன்பம் வளம்பெறத் தோன்ற

சூழ்வினை யாவும் துயரறப் போக

ஊழியும் நிலைக்கும் உறுதியள் ஆகி

தூயநல் நெஞ்சில் பண்புடன் நிறைந்து

வானிடை மதியம் விண்ணிடை போல

ஆழ்கடல் அனைத்தும் அன்பினில் ஆக்கி

பெண்டிரும் புகழப் பேரருள் பெற்று

வாழியர் என்றும் வளமுடன் தானே..

Wednesday, 22 January 2025

அழகெனப்படுவது..

குடிசையின் கூரையில்

கொட்டும் மழைநீரில்

கரைகிறது இசை

தொழிலாளியின்

தழும்பேறிய கைகளில்

தவழ்கிறது அழகு

-

தெருவோர வாங்கிலில்

முதியவனின் முகத்தில்

மூழ்கியிருக்கிறது கவிதை

கூலித்தொழிலாளி

உடலில் வழியும்

வியர்வையில் மின்னுகிறது

சிற்பத்தின் ஒளி

-

உண்மை நிர்வாணமாய்

நடமாடும் தெருக்களில்

வறுமையின் வலியும்

வாழ்வின் அழகும்

வேறுவேறல்ல

-

நீ கவலைப்படாதே தோழா

அழகு எங்கும் இருக்கிறது

தொழிற்சாலை புகையிலும்

தொழிலாளி கண்ணீரிலும்

வியர்வை துளிகளிலும்

வீதியோர பிச்சைக்காரனின்

விரிசல் விழுந்த முகத்திலும்

-

பொய்யென நினைத்தது

மெய்யாய் மாறுகிறது

உண்மையென நம்பியது

பொய்யாய் உதிர்கிறது

அழகு மட்டும்

அப்படியே நிற்கிறது

முதலாளித்துவம்

விற்பனைப் பொருளாக்கிய

அழகு அல்ல இது

உழைக்கும் மக்களின்

உயிர்த்துடிப்பில் பிறந்த

உழைப்பின் உண்மை

-

கலையரங்கின் சுவர்களில்

காட்சிப்பொருளாய்

தொங்கும் ஓவியங்கள் அல்ல

கடின உழைப்பாளியின்

கரங்களில் மலரும்

காயங்களின் கவிதை

-

வர்க்க வேறுபாடற்ற

வருங்கால உலகின்

விடிவெள்ளி போல

வெளிச்சமாய் தெரிகிறது

அழகின் உண்மை

-

நாளை மலரும்

நம் கனவுகளின்

நித்திய இளமை போல

நிலைத்து நிற்கிறது

அழகின் மெய்மை

Monday, 20 January 2025

வான்பெயல் வண்ணம்..

யாழின் நரம்பின் இசையெனப் பொழியும் 

வான்துளி வீழ்ந்து வயங்கொளி பரப்ப 

திங்கள் முகத்து தெள்ளொளி போல 

மங்குல் சிந்தும் மாமழைத் துளிகள்

பானல் மலர்மேல் பனித்துளி துயில 

நீலம் பூத்த நெடுவான் கீழே 

காலை வெயிலின் கதிர்க்கை பற்றி 

தேமா மலரின் தேன்துளி சிந்த 

நறுமொழி கேட்டு நெஞ்சம் துடிப்ப 

கானக் குயிலின் கனிமொழி யாக 

வானம் உரைக்கும் வண்மொழி கேட்டு 

குன்றின் நெஞ்சில் குளிர்த் துளி பாய்ந்து 

நின்று நிலவும் நேயம் போல 

தண்ணீர்த் துளியின் தகைமையை நோக்கி 

மண்ணின் மடியில் மறைபொருள் தேடி 

நீர்த்துளி சிதறி நெஞ்சம் நனைய 

யார்பெயர் சொல்லி அழைத்தனை இங்கே? 

விழியில் நிறைந்த வியப்பினை நோக்கி 

மொழியற்று நின்ற முகிலின் கீழே 

அகத்துள் உறையும் அன்பினை உணர்த்தி 

புலரும் விடியல் பொழுதினில் தோன்றி 

மலரும் மனத்தின் மகிழ்வினைப் போல 

தண்மைப் பெருமழை தன்னுள் கரைக..

கடலின் மூச்சு..

நீ சொல்கிறாய் கடல் சுவாசிக்கிறது என்று

நான் கேட்கிறேன் யார் மூச்சு அது என்று

மீனவனின் இறுதிப் பெருமூச்சா?

அல்லது அலையில் கரைந்த கலப்பை உழவனின்

கனவுகளின் பெருமூச்சா?

-

தொழிற்சாலைக் கழிவுகளால்

மூச்சுத் திணறும் கடல்தாயின்

வலிகளை யார் கேட்பார்?

விட நுரையில் விக்கித் தவிக்கும்

மீன்களின் இறுதி மூச்சை யார் பதிவு செய்வார்?

-

எண்ணெய்க் கறையில் எரியும் பறவைகளின்

சிறகுகளில் சிக்கிய காற்றின் கதறல்

கேட்கிறதா உன் செவிகளில்?

-

இயந்திரங்களின் இரைச்சலில்

இழந்துபோன இயற்கையின் இசை

நினைவிருக்கிறதா உனக்கு?

-

ஆனாலும் கடல் சுவாசிக்கிறது

அதன் ஒவ்வொரு மூச்சிலும்

புரட்சியின் விதைகள் முளைக்கின்றன

ஒவ்வொரு அலையிலும்

எதிர்ப்பின் குரல் ஒலிக்கிறது

ஒவ்வொரு நுரைத்துளியிலும்

போராட்டத்தின் துளிர்கள் தெறிக்கின்றன

-

கடலின் நெஞ்சில்

காலம் முழுவதும் கேட்கும்

மீனவப் பெண்களின் காத்திருப்புப் பாடல்

அலைகளின் ஓசையில் கரைந்துபோகும்

வறுமையின் வலிகள்

நுரைக்கும் திரைகளில் தெறிக்கும்

வாழ்வின் வியர்வைத் துளிகள்

-

கடல் சுவாசிக்கிறது

அதன் மூச்சில் கலந்திருக்கிறது

மனித இனத்தின் முழு வரலாறும்

அடிமைத்தனமும் விடுதலையும்

அழிவும் எழுச்சியும்

தோல்விகளும் வெற்றிகளும்

-

நீ கேட்கிறாய் கடலின் இரகசியங்கள் என்ன என்று

நான் சொல்கிறேன்

கடலின் ஆழத்தில் மூழ்கியிருக்கிறது

மனிதனின் முழு அவலமும்

அதன் அலைகளில் மிதக்கிறது

நம் விடுதலைக் கனவுகளின்

தாகம் நுரைகளாய்,

கரைந்தும் மீண்டும்..

கடற்பெருங் காதல்..

பேராழி எழுப்பும் பெருந்திரை ஓதம்தான்

நீராடு காலம் நினைவுற - பாராளும்

பண்டைய கதைகளைப் பாய்திரை கொண்டுவரும்

வண்டமிழ் சான்றோர் வழி

-

முன்னோர் மொழிந்த முதுமொழி பேணியே

பின்னோர்க்கு நல்கும் பெருங்கடல் - என்னாளும்

ஆழத்து மூச்சாய் அலைமேல் அலைபரப்பித்

தாழ்வற வாழ்வைத் தரும்

-

திரைமேல் திரையாய்த் திசைதிசை சென்றிடும்

கரைசேர் பவர்க்குக் கதிகாட்டும் - விரைவுடன்

தேடும் மனத்தோர்க்குத் தெள்ளமுதம் ஊட்டும்

ஆடும் அலைக்கடல் காண்

-

நுண்ணிய நீலம் நுழைந்துள பொன்னெலாம்

கண்ணுக்குப் பூத்த கதிர்வீசும் - எண்ணரும்

மூழ்கிய மாந்தர் முடிவிலா வாழ்வினைக்

கீழ்மேல் என்றே கிளர்

-

பேராழி தன்னிற் பெருமைகள் நோக்கினால்

ஓராழி போலும் உயிர்ப்பெலாம் - நீராடிப்

போந்தது போலப் புணரிதான் போய்விடும்

ஆய்ந்தபின் முற்றும் அறிந்து

நாடற்ற நாவாய்கள்..

ஓ காலமே..!

உன் வெண்ணிலா விழிகளில் படிந்த

இரவின் கண்ணீர் துளிகளை

எம் வாழ்வின் கனவுகளாய் மாற்றும்

மாயக் கலைஞனே

-

கடற்பரப்பின் பேரலைகள் போல

கரைந்து கரைந்து வரும் நாட்களின்

கரையில் நாங்கள் சிறு கூழாங்கற்கள்

உன் அலைகள் எம்மை உருட்டி உருட்டி

உயிரின் வண்ணம் தீட்டுகின்றன

-

யாழின் நரம்புகள் போல் இழுக்கும்

இளவேனிற் காற்றின் கீதங்களில்

எம் இதயம் துடிக்கும் ஒவ்வொரு துடிப்பிலும்

உன் தூரிகையின் தடங்கள்

தனிமையின் பெருங்காட்டில்

தவழும் பனிப்பூக்கள் நாங்கள்

-

முற்றா முகிலின் கருவறையில்

முகிழ்க்கும் மின்னல் ஒளி போல

எம் வாழ்வின் கணநேரங்கள்

உன் கைவண்ணத்தில் பதிந்து

வலிகளின் வண்ணக் கனவுகளாய்

மலர்கின்றன, மறைகின்றன

-

நீலக் கடலின் ஆழத்தில்

நித்திரை கொள்ளும் முத்துக்கள் போல

எம் கனவுகள் உன் மார்பில் உறங்க

காலங்கள் கடந்தும் ஊறும்

கவிதையின் சுவை ஊற்றே

-

நீ வரையும் வானவில்லின் கீழ்

நிலவொளி குடித்து வளரும்

நெஞ்சின் மலர்க்கொடிகள் நாங்கள்

உன் அழியாப் பேரழகின் முன்

கரையற்ற கடலில் மிதக்கும்

நாடற்ற நாவாய்களாய்

நாமும் வாழ்வும்..

Friday, 17 January 2025

மாற்றமும் மாயை தானோ..

வானிலே மின்னும் மேகம் வழிகளில் நிழலைத் தந்து

கானலாய்க் கரைந்து போகும் காட்சியைக் கண்டு நின்றேன்

தேனெனத் திரண்ட வாழ்வும் திசையெலாம் சிதறிப் போக

ஞானமே துணையாய்க் கொண்டு நான்மறை உணர்ந்து நின்றேன்

-

பூவிதழ் சிதறும் போதும் புனலிடை மிதக்கும் போதும்

காவியம் படைக்கும் வண்ணம் கவிதையாய் மலர்ந்த போதும்

ஆவியின் பயணம் தன்னில் அழகெலாம் கனவே யென்று

மேவிய பொழுதி னாலே மெய்யுணர் வெய்தி னேனே

-

காதலென் றெழுந்த போதும் கனவெனத் தோன்றும் போதும்

ஓதிய கலைகள் யாவும் உணர்வினில் தேய்ந்த போதும்

சோதனை முடிவில் கண்ட துணிபெலாம் பொய்யே யென்று

தீதறப் புரிந்து கொண்டேன் திக்குகள் பட்ட தாலே

-

மண்ணிலே விதைத்த நீரும் மலரெனப் பூத்த வானும்

கண்ணினால் காணும் யாவும் கருத்தினில் தேய்ந்து போகப்

பண்ணிசை பாடி நின்ற பறவையும் காலம் என்னும்

வெண்ணிலா வெளியில் நின்று வீழ்ந்திடும் நேரம் கண்டேன்

-

நேற்றென வந்த தெல்லாம் நினைவிடை மறைந்து போக

ஆற்றலாய் நின்ற யாவும் அலைகடல் நுரையாய்க் காண

தோற்றமும் ஒளியும் கொண்ட தூயவெண் பிறையும் கூட

மாற்றமே உலக மென்னும் மறைபொருள் உணர்த்திற் றன்றே

Wednesday, 15 January 2025

மழையில் கரையும் நாட்கள்..

நேற்றென்பது

கடந்துபோன கனவின் நிழல்தான்

அதன் விளிம்புகளில் தேங்கிய பனித்துளிகள் போல

இன்று நம் விரல்களில் வழிகிறது காலம்

நாளையென்பது

இன்றின் கண்ணாடியில்

மங்கலாய் தெரியும் முகம்தான்

-

நினைவுகளின் மழைக்குள் நனைந்தபடி

நிற்கிறோம் நாம்,

ஒவ்வொரு துளியிலும் ஒரு கதை,

ஒவ்வொரு சொட்டிலும் ஒரு காலம்,

இடைவெளிகளில் தவழும் மௌனம்

இன்னொரு மொழியில் பேசுகிறது.

-

கனவுகளும் நினைவுகளும்

ஒரே நதியின் இரு கரைகள்தான்

நடுவே ஓடும் நீரில்

நம் விம்பங்கள் கரைகின்றன

யார் சொன்னது நேற்று வேறு,

நாளை வேறு என்று?

-

இரண்டும் ஒரே பறவையின்

இறக்கைகள்தான்

ஒன்று கனவின் நிறத்தில்,

மற்றொன்று நினைவின் நிழலில்

இடையே பறக்கிறது ‘இன்று’

இமைப்பொழுதில்..​​​​​​​

Saturday, 11 January 2025

என் நிழல்..


என் நிழல்
என்னைத் தொடர்கிறது
தெருவோரம்
ஒரு நாய்க்குட்டி போல

கூப்பிட்டால்
வருவதில்லை
விரட்டினால்
போவதில்லை

காலையில்
என் முன்னால் நடக்கிறது
மாலையில் 
பின்னால் தொடர்கிறது
இரவில்
எங்கோ மறைந்து போகிறது.

சாலையோர மரங்களுக்கடியில்
என் நிழல் சந்திக்கிறது
பல நிழல்களை.
அவை பேசிக்கொள்கின்றன
மௌனத்தில்
நாம் கேட்க முடியாத
பல கதைகளை.

நான் போகும் போதெல்லாம்
நிழல் என் காலடிச் சுவடுகளை
அதன் கருப்பு நினைவுப் பெட்டியில் சேகரித்து வைக்கிறது

வீட்டுச் சுவற்றில்
தலைகீழாக நிற்கிறது
என் நிழல்.
உலகைப் புரிந்து கொள்ள
சில நேரங்களில்
நாமும் தலைகீழாக
நின்று பார்க்க வேண்டியிருக்கிறது.

மேசையில் விளக்கொளியில்
என் நிழல் படிக்கிறது
என்னோடு சேர்ந்து
ஆனால் அதற்குப் புரிகிறது
நான் புரிந்து கொள்ளாத
பல அர்த்தங்கள்.

சில நேரங்களில்
என் நிழல் தெரிவதில்லை.
அப்போது நான்
பயப்படுகிறேன்
நான் இருக்கிறேனா என்று.

வெயிலில் நடக்கும்போது
என் நிழல் குட்டையாகிறது
குளிரில் நடக்கும்போது
நீளமாகிறது.
மனிதர்களும் அப்படித்தான்
சூழ்நிலைக்கு ஏற்ப
மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது
இந்தக் கவிதையை எழுதும்போது
என் நிழல்
என் கையசைவுகளைப் பார்த்து
புன்னகைக்கிறது.
அதற்குத் தெரியும்
நான் எழுதப் போகும்
அடுத்த வரி..

Friday, 10 January 2025

விசும்பின் அசை..

மண்திணி ஞாலத்து மாநில மடந்தை

விண்தொடு நெடுவரை விளிம்பினில் நின்று

கால்கொள் வளியின் கதிர்விரி கற்றை

மேல்வரும் விசும்பின் மீமிசை ஏற்றி

-

பனிபடு விசும்பின் பல்மீன் ஊர்தி

தினைத்துணை யளவும் திசைமுக நோக்கி

நனைபடு புற்றின் நறுமலர் போல

கனைகடல் பரப்பின் கதிர்விரி காலை

-

யாணர் புதுவெளி யாங்கணும் பரந்து

காணரும் பேரொளி கடல்கொள நிறைந்து

மூவகை உலகின் முழுமுதல் தோற்றம்

யாவரும் அறியா இருளகம் கிழித்து

-

பொங்குநீர்ப் பரப்பின் புணர்முக வரையின்

திங்கள்தன் கதிரின் திசைமுகம் நோக்கி

மண்ணின் மடந்தை மனமொடு கலந்த

விண்ணின் வெளியே வியன்பெரும் பாட்டு

-

கால்கொள் வளியின் கடுங்குரல் கேளாய்

மால்கொள் யாமத்து மதிமுகம் நோக்கி

நீள்நிலம் தழுவும் நெடுவெளி யாற்றின்

வாள்நுதி மின்னின் வழிவழி யாக

-

பாம்பொடு சுழலும் பால்வெளி நீந்தி

காம்புடை மலரின் கதிர்விடு தேறல்

தேம்பிழி தொடையல் திசைமுகம் பரப்பி

ஏந்துபொற் கிண்ணத்து இசைபட வீழும்

-

அகன்ற வானின் அடிமுதல் தொடங்கி

மிகுபெரும் வெளியின் மேல்முக நோக்கி

புல்லிய துகளின் பொடிபட மிதந்து

சொல்லிய பொருளின் துணிபொருள் ஆகி

-

நிலனுற வந்த நெடுவெளி யாற்றின்

குலமுதல் தொடங்கி குன்றுற வளர்ந்த

கானக் குரலும் கடல்திரைப் பாட்டும்

யாணர் வெளியின் யாழிசை தருமே

அண்டத்தின் தாளம்..

உலகம் சுழலும் ஓசையைக் கேள்

காற்றும் கடலும் தாளம் போடும்

இசையைக் கேள்

-

வானத்து மீன்கள்

மின்னி மறையும் வேளையிலே

பூமியின் தாலாட்டு ஒலிக்கிறது,

மலைகளின் உச்சியில்

காலம் ஊர்ந்து செல்கிறது,

பறவைகளின் இறக்கைகளில்

விதி எழுதப்படுகிறது.

-

மண்ணின் மகனே

நீயும் இந்த இசையின் ஒரு துளிதான்

உன் உயிர்ப்பின் ஒவ்வொரு துடிப்பும்

இந்தப் பேரிசையின் அசைவுதான்.

-

புல்லின் நுனியில்

பனித்துளி நடனமாடும் வேளையிலே

பூமியின் சுழற்சி

உன்னைத் தாங்கிக்கொண்டு போகிறது

நீ தனியன் அல்ல

-

ஒவ்வொரு மரத்தின் அசைவிலும்

ஒவ்வொரு அலையின் எழலிலும்

ஒவ்வொரு காற்றின் சுழல்விலும்

நீ இருக்கிறாய், உன் வாழ்வு

இந்தப் பேரண்டப் பெருங்கதையில்

ஒரு வரி

-

கேள்

இந்த மௌன இசையைக் கேள்

உன் இதயத்தின் துடிப்பிலே

உலகத்தின் தாளம் ஒலிக்கிறது

நீ இந்த வாழ்வின் பாடல்..

Wednesday, 1 January 2025

நினைவின் நிலவியல்..

கால்களில் பனிக்கட்டி படிந்த இடத்தில்

இல்லாமையின் கணக்கீடுகளைத் தொகுக்கின்றேன்

ஒவ்வொரு படிகமும் இழப்பின் நிலையம்

ஒவ்வொரு மூச்சும்

பனிக்காலத்தின் மீதான எதிர்ப்பு

வயல்களில் எழும் நீராவியில்

பிழைத்தலின் வடிவியல் தன்னை எழுதுகிறது

இப்பனி ஆளும் நிலத்தில்

தனித்த வெப்பம்

-

என் ஆவணங்களைக் கேட்கின்றனர்

ஆனால் என் வீட்டின் குருமண் முற்றத்தில் ஊரும்

மழையின் மணத்தை எப்படி ஆவணப்படுத்துவேன்?

என் தாயகம் இருமச் சொற்களாய் கரைகிறது

குவாண்டம் நிச்சயமின்மை போல

இருப்பதும் இல்லாததுமாய்

இல்லாமையை மட்டுமே பிரதிபலிக்கும்

திரைகளில் சிதறிய துகள்களாய் வாழ்வு,

-

அலுவலர் கேட்கிறார், பிறந்த இடம்?

"பூவரசின் இதயம்,

பனங்கூடலுக்கிடையே உள்ள வெளி,

விடியலில் பழைய கோயில்களின் நிழல்" என்று

சொல்ல விரும்புகிறேன் ஆனால் அவர்களின்

அதிகாரப்பூர்வ வரைபடத்தில்

ஒரு புள்ளியைச் சுட்டிக்காட்டுகிறேன்.

-

காலம் அந்நிய நாணயங்களில் வர்த்தகம் செய்கிறது

கொடூரமான விகிதங்களில் பரிமாறப்படும் நினைவுகள்,

தூரத்தின் சந்தையில் தினமும் மதிப்பிழக்கும் அடையாளம்,

அந்நிய மண்ணில் பிடிவாதமான சமன்பாடு போல வளர்கிறேன்,

வீட்டின் மாறிலியைத் தேடி

என் வேர்கள் பழகிய எண்களை வரைகின்றன

-

நாடுகடத்தப்பட்ட இதயத்தைச் சுற்றி

வெளி வளைவதை ஐன்ஸ்டீன் கணக்கிடவில்லை,

தூரம் எப்படி ஏக்கத்தின்

ஒருபக்கப்பட்டையாக வளைகிறது

விடைபெறுதல் வருதலாகி மீண்டும் விடைபெறுதலாகிறது

ஒவ்வொரு பிரிவும் இயக்கவிதிகளை மீண்டும் எழுதுகிறது

ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை

தென்றல் காற்றின் நினைவு.

-

நான் திரும்பி வரும்போது,

தொல்லியலாளர்கள் என் மார்புக்குழியில்

இல்லாமையின் அடுக்குகளை ஆய்வு செய்வார்கள்,

என் தனித்தமிழின் புதைபடிவங்களை

கரிம காலக்கணிப்பு செய்வார்கள்,

என் நிழலுக்கு முன்பே

ஆலமரங்கள் என்னை அடையாளம் காணும்

அவற்றின் வளையங்களில்

என் பிரிவின் ஆண்டுக்குறிப்புகள்,

அவற்றின் இலைகள்

செந்தமிழில் சலசலக்கின்றன.

-

கனவுகளில், சேர்தலின் புதிய வழிமுறைகளை

குறியீடாக்குகிறேன்,

நினைவின் மீள்செயல்பாடுகள்

அடையாளத்தின் முடிவில்லா சுழல்களை உருவாக்குகின்றன

என் முகம் ஆயிரம் கண்ணாடிகளில் சிதறுகிறது

-

என் இதயத்துடிப்புக்கும்

செந்நிலப்புலங்களின் துடிப்புக்கும்

இடையேயுள்ள தூரம் அவ்வெண் ஆகட்டும்

நாடுகடத்தலின் வளிமண்டலத்தை

வெட்டிச்செல்லும் குயிற்சிறகின் பாதை

இவ்வெண் ஆகட்டும்

வீட்டிற்கான தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்

நாளையின் சமன்பாட்டில்

பனை விதை போலப் புதைந்துள்ள மறை எண்

தமிழ் யாப்பின் பண்டைய கணிதவழி

முளைக்கக் காத்திருக்கிறது..