புதன், 12 நவம்பர், 2025

விடத்தின் நேர்மை..


கரிய மணிமுத்தாய் தெளிவாய்

கண்பார்க்க என் நாவில் வை

நஞ்சை 

பாலின் வெண்மையில் 

அதனை மறைக்காதே

ஏனெனில் 

அத்தனை நம்பிக்கையுடன் 

அதனை நான் அருந்தும் போது

நன்றி பொழியும் என் கண்கள்

உன்னைச் சங்கடப்படுத்தலாம் 

நான் ஒரு திறந்த காயம்

நம்பிக்கை என்னும் 

பெருநோய் பிடித்தவன் 

நீ கொடுத்த ஒவ்வொரு 

துளியையும் தேனாய் நுகர்வேன்

ஆதலால் 

இது விடம் என்று சொல்

இருளை இருளாகவே கொடு

-

நஞ்சு நஞ்சாகவே இருக்கட்டும்

இறங்கும் போதே 

உதடுகளில் எரிந்து 

தொண்டை பிளக்கட்டும் 

நான் கண்களைத் திறந்தபடி குடிப்பேன்

மரணத்தை நேர்மையாகப்

பருகவே விருப்புகிறேன் 

உன் பொய்யை விட 

உண்மை என்னைக் கொல்வதையே

அதிகம் விரும்புகிறேன் 

ஏனெனில் நம்பிக்கை என்பது

என் இரத்தத்தில் ஓடும் ஆறு

அதனை மாசுபடுத்தாதே

-

தூய்மையாகக் கொல் 

தூய்மையாகச் செல்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக