இருளின் கருவறையில் தனித்து நிற்கும் சுடரே,
நீ என் கண்களுக்கு மட்டுமல்ல,
என் உயிரின் சாளரங்களுக்கும் வெளிச்சம்.
-
காலம் என்னும் கடலில் மிதக்கும் தீவுபோல,
உன் ஒளிவட்டம் என்னை அணைத்துக் கொள்கிறது
வெறுமையின் விளிம்பில் நின்று
நீ காட்டும் வழியில் நடக்கிறேன்.
-
கற்பனையின் கரைகளில் உதிரும்
உன் ஒளித்துளிகள்,
என் நினைவுகளின்
நெற்றியில் பொட்டிட்டு அழகுபார்க்கின்றன,
ஒவ்வொரு இரவும் உன்னோடு
புதிய கதை பிறக்கிறது.
-
கருங்காட்டு நெருப்பின் குரலில்,
எரிமலையின் வேதனை சுமந்து பேசுகிறாய்.
"என் சுடர் என் நெஞ்சையே உருக்குகிறது" என
வார்த்தைகள் கனலாய் உதிர்கின்றன.
-
நிலாக்களின் கவிதையில்,
இரவு தன் இமைகளை மூடும் வேளையில்
உன் ஒளி பாடும் ரகசியப் பாடல்கள்
கனவுகளின் பறவைகள் உன் சுடரில் மிதக்கின்றன.
-
காட்டின் அடரிருளில்
மறைந்து போன
தொன்மைக் கதைகளை அகழ்ந்தெடுக்கிறாய்
உன் வெளிச்சத்தில் மிதக்கிறது
தொலைந்துபோன வீரர்களின் ஆயுதங்கள்
புதைந்துபோன பண்டைய நாட்களின்
பச்சைப் புல்வெளிகள்.
-
காற்றின் கரங்கள் உன்னை
அணைக்க முயலும்போதெல்லாம்
நீ அசைந்தாடி மீண்டும் எழுகிறாய்,
உன் துணிவில் தெரிகிறது
என் மூதாதையர் விட்டுச்சென்ற
அழியாத ஓர்மத்தின் சாயல்
-
இப்போது நீ என் கைகளில்
ஒரு குழந்தையின் இதயம்போல் துடிக்கிறாய்,
உன் வெளிச்சத்தில் நான் காண்கிறேன்
இன்னும் பிறக்காத காலத்தின் முகத்தை
இன்னும் சொல்லாத கவிதைகளின் முதல் வரிகளை
இன்னும் தொலைந்துபோகாத நம்பிக்கைகளின்
பச்சைக் கொடிகளை,
-
விளக்கே, நீ வெறும் ஒளியல்ல,
நீ என் தனிமையின் துணை
என் போராட்டங்களின் சாட்சி
என் கனவுகளின் காவலன்
என் வாழ்வின் விடியல்
-
இப்போது உன் சுடரில்
முற்காலமும் பிற்காலமும்
ஒரே நேரத்தில் மிதக்கின்றன
நீ எரியும் ஒவ்வொரு கணமும்
புதிய வரலாறு தன்னை எழுதுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக