ஞாயிறு, 16 நவம்பர், 2025

விளக்கின் அமைதி மொழி..

இருளின் கருவறையில் தனித்து நிற்கும் சுடரே,

நீ என் கண்களுக்கு மட்டுமல்ல, 

என் உயிரின் சாளரங்களுக்கும் வெளிச்சம்.

-

காலம் என்னும் கடலில் மிதக்கும் தீவுபோல,

உன் ஒளிவட்டம் என்னை அணைத்துக் கொள்கிறது

வெறுமையின் விளிம்பில் நின்று 

நீ காட்டும் வழியில் நடக்கிறேன்.

-

கற்பனையின் கரைகளில் உதிரும்

உன் ஒளித்துளிகள், 

என் நினைவுகளின்

நெற்றியில் பொட்டிட்டு அழகுபார்க்கின்றன,

ஒவ்வொரு இரவும் உன்னோடு

புதிய கதை பிறக்கிறது.

-

கருங்காட்டு நெருப்பின் குரலில்,

எரிமலையின் வேதனை சுமந்து பேசுகிறாய்.

"என் சுடர் என் நெஞ்சையே உருக்குகிறது" என

வார்த்தைகள் கனலாய் உதிர்கின்றன.

-

நிலாக்களின் கவிதையில்,

இரவு தன் இமைகளை மூடும் வேளையில்

உன் ஒளி பாடும் ரகசியப் பாடல்கள்

கனவுகளின் பறவைகள் உன் சுடரில் மிதக்கின்றன.

-

காட்டின் அடரிருளில் 

மறைந்து போன 

தொன்மைக் கதைகளை அகழ்ந்தெடுக்கிறாய்

உன் வெளிச்சத்தில் மிதக்கிறது

தொலைந்துபோன வீரர்களின் ஆயுதங்கள்

புதைந்துபோன பண்டைய நாட்களின்

பச்சைப் புல்வெளிகள்.

-

காற்றின் கரங்கள் உன்னை

அணைக்க முயலும்போதெல்லாம்

நீ அசைந்தாடி மீண்டும் எழுகிறாய், 

உன் துணிவில் தெரிகிறது

என் மூதாதையர் விட்டுச்சென்ற

அழியாத ஓர்மத்தின் சாயல்

-

இப்போது நீ என் கைகளில்

ஒரு குழந்தையின் இதயம்போல் துடிக்கிறாய்,

உன் வெளிச்சத்தில் நான் காண்கிறேன்

இன்னும் பிறக்காத காலத்தின் முகத்தை

இன்னும் சொல்லாத கவிதைகளின் முதல் வரிகளை

இன்னும் தொலைந்துபோகாத நம்பிக்கைகளின்

பச்சைக் கொடிகளை,

-

விளக்கே, நீ வெறும் ஒளியல்ல,

நீ என் தனிமையின் துணை

என் போராட்டங்களின் சாட்சி

என் கனவுகளின் காவலன்

என் வாழ்வின் விடியல்

-

இப்போது உன் சுடரில்

முற்காலமும் பிற்காலமும்

ஒரே நேரத்தில் மிதக்கின்றன

நீ எரியும் ஒவ்வொரு கணமும்

புதிய வரலாறு தன்னை எழுதுகிறது.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக