மரத்தின் விரல்நுனியில் நடுங்கும்
ஈர இலைகளை
இறகுகள் கொண்டு வருடுகிறது
காற்று
அவை தங்கள் தனிமையின்
கதைகளை கசியவிடுகின்றன
-
பனித்துளி போல் மிதந்து
பவள நிறத்தில் பிரகாசிக்கும்
விடைபெறும் கணங்கள்,
நீர்த்திவலைகளாய் நெகிழ்ந்து வீழும்
நேற்றைய நினைவுகள்
-
கிளையின் கைவிரல்களில் இருந்து
கீழே நழுவும் ஒவ்வொரு இலையும்
கரைந்து போகும் கனவின்
கண்ணாடித் துண்டுகள்,
காலம் அவற்றை முத்தமிடுகிறது.
-
மரத்தின் பழைய வலிகளை
மழைத்துளிகள் கழுவிச் செல்கின்றன
வண்ண இலைகளின் வழியே
வானத்தின் கருணை கசிகிறது
-
பனிக்கூட்டில் இருந்து பிரிந்து வரும்
பால்வெளி ஒத்த பனித்துளி போல
பிரிவின் வலி மென்மையானது
விடுதலையின் சுவை இனிமையானது
வீழ்தலின் சுவை அலாதியானது
-
இலைகள் விழும் ஒலியில்
இசைக்கப்படுகிறது வாழ்வின் கீதம்..
அதன் அர்த்தம் தெளிகிறது இப்போது
காற்றின் கரங்களில் கரைவதே
காலத்தின் கனிவான மொழி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக