செவ்வாய், 21 அக்டோபர், 2025

இலையும் மழையும் - வாழ்வு..

மரத்தின் விரல்நுனியில் நடுங்கும்

ஈர இலைகளை

இறகுகள் கொண்டு வருடுகிறது 

காற்று 

அவை தங்கள் தனிமையின்

கதைகளை கசியவிடுகின்றன 

-

பனித்துளி போல் மிதந்து

பவள நிறத்தில் பிரகாசிக்கும்

விடைபெறும் கணங்கள்,

நீர்த்திவலைகளாய் நெகிழ்ந்து வீழும்

நேற்றைய நினைவுகள்

-

கிளையின் கைவிரல்களில் இருந்து

கீழே நழுவும் ஒவ்வொரு இலையும்

கரைந்து போகும் கனவின்

கண்ணாடித் துண்டுகள்,

காலம் அவற்றை முத்தமிடுகிறது.

-

மரத்தின் பழைய வலிகளை

மழைத்துளிகள் கழுவிச் செல்கின்றன

வண்ண இலைகளின் வழியே

வானத்தின் கருணை கசிகிறது 

-

பனிக்கூட்டில் இருந்து பிரிந்து வரும்

பால்வெளி ஒத்த பனித்துளி போல

பிரிவின் வலி மென்மையானது 

விடுதலையின் சுவை இனிமையானது 

வீழ்தலின் சுவை அலாதியானது 

-

இலைகள் விழும் ஒலியில்

இசைக்கப்படுகிறது வாழ்வின் கீதம்..

அதன் அர்த்தம் தெளிகிறது இப்போது 

காற்றின் கரங்களில் கரைவதே

காலத்தின் கனிவான மொழி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக