செவ்வாய், 18 நவம்பர், 2025

இதற்கெல்லாம் என்ன பதில்..

பல்லாயிரம் இதயங்கள்

ஒரே கனவுக்காகத் துடிப்பதை நிறுத்தின 

அவர்களின் கடைசி மூச்சில்

தமிழீழம் என்ற சொல் மிதந்தது.

-

இப்போது அந்த ஆன்மாக்கள்

வானத்தில் அலைகின்றன 

பதில் இல்லாத கேள்விகளாக

முடிவில்லாத ஏக்கங்களாக

-

அவர்களின் எலும்புகளில்

இன்னமும் கூட 

விடுதலையின் பாடல்கள் 

உறங்குகின்றன,

ஆனால் வரலாற்றை 

எழுதுவது என்னமோ 

வென்றவர்களின் பேனா மட்டுமே

-

இந்தப் பிரபஞ்சத்தில்

நியாயம் ஓர் அனாதைக் குழந்தை,

பலவான்களின் காலடியில்

அழுது கொண்டிருக்கிறது 

-

ஆன்மபலம் என்பது

காற்றில் எழுதப்பட்ட கவிதை,

புயல் வரும்போது

அது சிதறி மறைந்து விடுகிறது

-

உண்மையின் வாள்

தந்திரத்தின் கயிற்றால் 

கட்டப்பட்டுள்ளது,

நேர்மையின் கேடயம்

சூழ்ச்சியின் அம்புகளால் 

துளைக்கப்பட்டுள்ளது

-

நாங்கள் இருக்கிறோம்

எங்கள் இல்லாமையில்,

நாங்கள் வாழ்கிறோம்

எங்கள் மரணத்தில்

-

எங்கள் வீழ்ச்சி என்பது 

வரலாற்றின் இசையில்

அடுத்த இசைக்குறிப்புக்கு முன்னர்

ஓர் இடைநிறுத்தம் மட்டுமேயென 

எண்ணுதலன்றி 

ஆற்றிக்கொள்ள கைவசம் 

எம்மிடம் வேறு 

மாற்று வழிகள் இல்லை

-

எங்களால் இன்னும் 

நம்ப முடியாமல் இருக்கின்ற 

கேள்வி ஒன்று தான் 

இந்த தியாகங்களுக்கெல்லாம் 

என்ன பொருள்? 

இந்த இழப்புகளுக்கெல்லாம் 

என்ன பதில்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக