பல்லாயிரம் இதயங்கள்
ஒரே கனவுக்காகத் துடிப்பதை நிறுத்தின
அவர்களின் கடைசி மூச்சில்
தமிழீழம் என்ற சொல் மிதந்தது.
-
இப்போது அந்த ஆன்மாக்கள்
வானத்தில் அலைகின்றன
பதில் இல்லாத கேள்விகளாக
முடிவில்லாத ஏக்கங்களாக
-
அவர்களின் எலும்புகளில்
இன்னமும் கூட
விடுதலையின் பாடல்கள்
உறங்குகின்றன,
ஆனால் வரலாற்றை
எழுதுவது என்னமோ
வென்றவர்களின் பேனா மட்டுமே
-
இந்தப் பிரபஞ்சத்தில்
நியாயம் ஓர் அனாதைக் குழந்தை,
பலவான்களின் காலடியில்
அழுது கொண்டிருக்கிறது
-
ஆன்மபலம் என்பது
காற்றில் எழுதப்பட்ட கவிதை,
புயல் வரும்போது
அது சிதறி மறைந்து விடுகிறது
-
உண்மையின் வாள்
தந்திரத்தின் கயிற்றால்
கட்டப்பட்டுள்ளது,
நேர்மையின் கேடயம்
சூழ்ச்சியின் அம்புகளால்
துளைக்கப்பட்டுள்ளது
-
நாங்கள் இருக்கிறோம்
எங்கள் இல்லாமையில்,
நாங்கள் வாழ்கிறோம்
எங்கள் மரணத்தில்
-
எங்கள் வீழ்ச்சி என்பது
வரலாற்றின் இசையில்
அடுத்த இசைக்குறிப்புக்கு முன்னர்
ஓர் இடைநிறுத்தம் மட்டுமேயென
எண்ணுதலன்றி
ஆற்றிக்கொள்ள கைவசம்
எம்மிடம் வேறு
மாற்று வழிகள் இல்லை
-
எங்களால் இன்னும்
நம்ப முடியாமல் இருக்கின்ற
கேள்வி ஒன்று தான்
இந்த தியாகங்களுக்கெல்லாம்
என்ன பொருள்?
இந்த இழப்புகளுக்கெல்லாம்
என்ன பதில்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக