புதன், 12 பிப்ரவரி, 2014

நடைப்பிணம்..

நீதியே பேசிப் பேசி
நீதிக்காய் வாழ்ந்து வாழ்ந்து
ஏதுமே அற்று மற்றோர்
இகழுதற்குரியனாகி
வீதிக்கு வந்து முற்றி
விசரனும் ஆகி, கேட்க
நாதியே அற்று நாறி
நடைப்பிணமாகி மாண்டேன்

இயங்குதல் செத்து வெற்றாய்
இருப்பதும், மூச்சு நின்று
இயங்குதலற்று மூளை
இறப்பதும் ஒன்று தானே

அகதியாய் ஓடியோடி
அலைவுற்று நொந்து வாழ்வை
சகதியிற் கீழாய் ஆக்கிச்
சரிந்த பின் திரும்பிப் பார்த்தால்
எதுவுமே இல்லை, பக்கம்
எவருமே இல்லை, அன்றே
அவர்களோடொன்றாய் நானும்
அடியுண்டு போயிருந்தால்
இத்தனை கீழ்மையின்றி
இன்னும் நான் வாழ்ந்திருப்பேன்..

வெள்ளி, 17 ஜனவரி, 2014

கைகளை இழந்த கணையாளி..

எல்லாமே புதையுண்டு போயிற்று
இப்போதெல்லாம் நீ
நினைவில் எழுவதில்லை
அகழ்ந்தெடுக்கும் சாத்தியத்தையும்
அடித்துச் சென்றுவிட்டது
காலக் கடல்கோள்
சிதிலங்களைக் கூட்டியள்ளி
துடைத்தெடுத்தாலும் கூட
அது இனித் தொல்பொருள் தான்
வட்டப்பாதையில்
என்றேனும் ஒருநாள்
எட்டிப்பார்க்க மட்டும் இனிது

மற்றபடி இன்றைக்கு
எழுதுகிறதா என
புதுப்பேனாவைக் கிறுக்கிப்பார்த்த போது
நினையாப் பிரகாரமாய்
உன் பெயர் தோன்றியிருப்பது
குறட்டை போல்
நானறியாமல் நிகழ்ந்த ஒன்று
திக்குவாய் மூச்சின்
திணறல் தான் குறட்டையெனில்
ஒப்புவமைப்படி
மூச்சிலின்னும் நீயிருப்பதாய்
முடிச்சுப் போட்டால்
நானல்ல அதற்குப் பாத்திரவாளி

கூர் முள்ளில் வாழைக்குருத்தாய்,
அடிபெயர்ந்து வீழ்ந்த பெருமரத்தின்
நடுங்கும் இளந்தளிராய்
முடங்கிப் போயிருக்குமென் வாழ்வு
தோள் கூடத்திருப்பவியலாதோர்
ஒற்றையடிப் பாதை.

கால்களின் கீழே காலநீரோட்டம்
பாதங்களைப் பதிக்கவிடாமல்
பலவந்தமாய் இழுத்துச் செல்கிறது
ஓடி இழுபட்டு
எதுவெதுவோ வாழ்விலாகி
இப்பொழுதில்
கோளக் கடிகாரத்தின்
வட துருவத்தில் நீ
தென் துருவத்தில் நான்
இதற்குள்
அரைவாசி ஓடிற்று ஆயுள்

போதும்
பருவகாலம் மாறுமென்றெல்லாம்
இனிப் பாடமெடுக்காதே
இலையுதிர்ந்த இளம் மரத்துக்குண்டே தவிர
பட்ட மரத்துக்கேது சொல்
வசந்த காலம்?
கைகளை இழந்த பின்னால்
எதற்குத்தான் கணையாளி?

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நினைவிலெழல்..

இத்தனை ஆண்டாய்
நினைவில் வராமலும்
இருக்கிறாய் தானா
எதுவும் தெரியாமலும்
எங்கோ மனத்தின்
குகையில் இருந்த நீ
எதிரே தாண்டும் குழந்தையின்
கண்களில்
எந்தக் கபடமும் இல்லாச் சிரிப்பில்
மின்னல் போல தோன்றி மறையலாம்

அதனின் நீட்சி
உதட்டில் மெல்லிய சிரிப்பாய்,
வயிற்றை உப்பி
ஆழவிட்டிடும் மூச்சாய் அமையலாம்
சிலர்க்கு
கண்களில் லேசாய் ஈரம் கசியலாம்
நொடிகள் வானில்
நிலைக்குத்தியும் கூட
நிற்கலாம் விழிகள்
முடிந்தால்
சமூக இணையத் தளங்களில்
இருப்பை
தட்டிப் பார்க்கவும் செய்யலாம்
கண்டால்
எங்கே இப்ப? சுகமா?, கேட்க
தயங்கி விரல்கள்
தளர்ந்து பின்வாங்கலாம்
பொம்மை கேட்டுக் குழந்தை அழைக்க
அந்த வேளையும் மறையலாம்
ஆனால்

யாருமே இன்றி
ஆழ்ந்த வெறுமையாய்
அகன்று கிடக்கும் வெளியிடை
சட்டென
எங்கோ இருந்து பறந்து சென்றிடும்
ஒற்றைப் பறவை, சூன்ய வெளியை
உயிர்ப்புடைக் கவியாய் மாற்றுதல் போல

எந்தக் கண்டத் தகட்டின் மூலையில்
இருப்பினும் மண்ணை
தழுவிப் புணர முன்விளையாட்டை
மழை செய்திடும் போது
எழுந்திடும் கலவி வாசம் ஊரின்
மண் மணந்தன்னை
உருகும் படியாய் நாசியில்
மீண்டும் ஊட்டுதல் போல

எங்கே இருக்கிறாய் தெரியாதிருப்பினும்
எந்தத் தொடர்புமே இல்லாதிருப்பினும்
இத்தனை நாட்களாய் நினையாதிருப்பினும்
ஏதோ கணத்தில்
உந்தன் நினைவு எங்கோ யார்க்கோ
எழலாம், நீயும்
உயிரின் மனசால் நொடிகளெனினும்
நினைக்கப்படலாம்
ஆதலால்
ஒருவரிலேனும் ஒருகணம் தன்னும்
உருகும் நினைவாய்ப் பழகி
விடைபெறு
எதிர்வரும் சாவெனல்
ஓர் வெறுங்கனவே..

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

முகிலாய் நினைவும்..

சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்

மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது

இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

இன்றிருளும் வரைதான்
இது கூட,
அண்ணாந்த விழிகளும்
அசையும் முகில்களும்
அப்படியே நாளை
அவை வேறு

வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள்
வாழும் வரைதான் நினைவு

ஆயின்
வரலாற்றினூடுணர்தலென்றால்..
பிணத்தைப் புணர்தல்
அல்லது
கோமா உடலுடன் முன்விளையாட்டு

இதனாற் தான்
நாலுபேரின்று நையாண்டி செய்யினும்
அவர்களோடொன்றாய்
களத்தில் கேட்ட கானங்களை
வெறிச்சோடிப் போயிருக்கும்
இற்றை வேளையில்
கேட்க நேருகின்ற போது

எச்சில் விழுங்க முடியாமல்
தொண்டை இறுகியும்
கண்ணை இமைக்க முடியாமல்
குளமாய் பெருகியும்
நெஞ்சுக்குள் ஓடும் நரம்புகளெல்லாம்
அறுந்த பல்லிவாலாய்
ஆகி விடுகிறது..

சனி, 26 அக்டோபர், 2013

இன்றும் கூட இப்படியாய்..

தொடுவானத் தொலைவெனினும்
தொட்டிடலாம் என்றெண்ணி
காத்திருந்தும் இன்றுவரை
கையெட்டாக் கலக்கத்தில்
கடலில் மூழ்குகின்ற 
கடைசிக் கணச் சூரியனாய்
கண்கள்

விடைபெறுமந்தக் கண 
வேளையிலும் எற்றியெற்றி
அடிக்கின்ற அலைகளாய்
அவள் நினைவு, மூச்சடைத்து

வெடித்த நெஞ்சிருந்து
விசிறுண்ட குருதியின்
படிவாய் ஆங்காங்கே
பரவி முகிற் தசைகள்
வாழ்ந்திருந்த காதலின்
வழித் தடமாயும் தான்,

நேத்திரத்துள் நிழலாய்
நினைவினுரு கரைகையிலே
போர்த்துறங்கிப் போயிற்று அந்தி
சோர்த்த படி
வெறித்த என் மனம் போல்
வீழ்கிறது இன்றிரவு..

எதுவுமற்ற காலை..

எதற்கும் வணங்காத காலமொன்று
எமக்கும் இருந்தது

கடல் நோக்கிப் பறந்து செல்லும்
வெள்ளைப் பறவையொன்று
கலங்கி மறைவதைப் போல
மூன்று தசாப்தத்தின் கனவு
ஒருநாள் காலையில் பார்த்த போது
கந்தகப்புகையைக் காவிக்கொண்டு
முகிலாகிக் கலைந்து போனது

உடைந்தழுத படி
ஒருக்களித்துப் படுத்துவிட்டு
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
மறுபக்கம் திரும்பிய போது
ஆண்டுகள் ஓடிப்போயிருந்தன

கொடுத்து வைத்தவர்கள்
அமரர்,மாவீரரென ஆக
ஊழ்வினை முடியாதோர்
உழல உயிர்  பிழைத்தது
அப்போது தான் தெரியவந்தது

குண்டுகளை வானமன்று
குடையாகப் பிடித்திருந்தும்
தன்மான வாழ்வின்
தன்னிறைவில் இருந்ததனை
எப்படித்தான் நாம் மறந்து போனோம்?

இப்போதில்
கழுத்தை நெரித்த கவட்டுக்குள்
கன்னம் தேய்த்தல் தான்
இராஜதந்திரமெனும்
பொரிமாவை மெச்சும்
பொக்கை வாய்ச்சியின் காலம்
பாத்தீனியமாய் எம்முன்னே
படர்கிறது

மறதியும் காலமும்
மனுச வழிக்காவி தான்
அதற்காக
அறணையாய் எப்படி ஆனோம் நாம்?

வீங்கிச் சிவந்த கண்ணும்
வீறிட்டழுத வாயும்
ஏங்கிய மனமுமாய் நாளை
எழுந்து நாம் பார்க்கும் போது
தேங்கியிருக்குமோ எம்
தீராத கனவு கொஞ்சம்?, இல்லை
ஓங்கி அரசதையும் மேவி
உயர வளர்ந்திருக்கு மோடா?


சனி, 12 அக்டோபர், 2013

காலத் தூரிகை

ஊர் நினைவில் மிதப்பதற்கு
உயிர் விரும்பிக் கேட்கிறது
யார் முகங்கள், எவர் நினைவு
எழுந்து வரும்!, என அறிய
ஆசை தான் எனக்கும்,
ஆனாலும் உடனடியாய்
யோசித்த மாத்திரத்தில்
யுகத்தை முன் கொணர்தலெலாம்
வாய்ப்பில்லை, எனினுமுயிர்
வாய்விட்டுக் கேட்ட பின்னால்
ஏய்த்து, இழுத்தடித்தல்
எனக்கியலாதெனச் சொல்ல

உதட்டைக் கடித்து
ஓரமாய் விழி உருட்டி
பதட்டமின்றி மனத்தாள்
பாதையொன்றை வரைந்தாள்
ஆளற்று நீண்டு செலும்
அப்பாதை முடிவினிலே
நீலக் கடல் அகன்று
நிலம் தொட்டுப் புரள்கிறது
வானிலிருந்தெடுத்துத் தான்
வண்ணத்தைச் சேர்த்திருப்பாள்

எழுந்துவரும் என்னுடைய
ஏக்கப் பெருமூச்சை
இழுத்தெறிந்தாள் கடல் மேலே!
ஏதோ சில வெண்கோடாய்
இதன் படிமம், அப்போதே
ஆவியாய் கடல் கொஞ்சம்
அசைந்தெழுந்து வான் முட்ட
காவியத்தின் அதியுச்சக்
கட்டம் போல் விழியிருந்து
அஞ்சனத்தை எடுத்து
அப்பி விட்டாள் முகில்மேலே
பஞ்சு வண்ண முகில்
பாரமாகிக் கருக்கட்டி
பன்னீர்க் குடமுடைந்து
பளபளக்கும் துளிகளெந்தன்
கண்ணீரோடு சேர்ந்தென்
கன்னத்தில் உருளுகையில்

ஒவ்வொரு துளிகளிலும்
ஊரும், உறவுகளும்
எவ்வளவு இயல்பாக
என் முன்னே!, உயிரென்னை
கட்டி அணைத்துக்
கை இறுகப் பற்றியது
விட்டுன்னைச் செல்லேனென
விம்மியது, பூவுலகின்
காலக் கரைப்பானிந்தக்
களிமழைதான் காணென்று
கண்ணைத் துடைத்தென்னைக்
கட்டியது, காதோரம்

மழையன் பாடல்கள்
மண்ணீர மணத்தோடு
அளைந்தென்னைச் செல்கிறது
அள்ளி..

செவ்வாய், 8 அக்டோபர், 2013

அனுக்கிரகம்..

அப்படி எதைத்தான் நீ
அகல இமை விரித்து
இப்படி உன்னிப்பாய்
எதையோ முன் தேடுவதாய்
கண்கரையில் ஈரம்
கசிந்தபடி காணுகின்றாய்?

வெண்பறவை அழகாய்
விரித்தடிக்கும் சிறகுகளில்
கண் தொற்றிக்கொண்டு
கடக்கிறதோ கடல்களினை!

வீணையை வானம்பாடி
மீட்டினால் எழுந்துவரும்
கானந்தான் ஏதுமுந்தன்
காதுகளிற் கேட்கிறதோ!

இதழாற் காதுமடல்
இழுத்துக் கடித்தபடி
பிடரிக்குள் விரலூரும்
பெருஞ்சுகத்தின் கிறுக்கத்தில்
கண்ணிருட்டிப் போவது போல்
காய்கின்ற அந்தியிலே
ஊறுகின்ற நினைவுகள் தான்
உனைக்கரைத்து விட்டதுவா!

கடற்தொடுப்பின் கரையிலுள்ள
கற்தூணில் மெல்லமெல்ல
உடற்பாரம் முதுகினிலே
ஊன்றி, தேய்த்தபடி
குந்திவிட்டாய் வினாக்குறியாய்
கூனி, கொதித்தெரியும்
எந்த வலியெனினும்
இடியாமல் அதன் சுவையை
அனுபவித்துச் சுகிக்கின்ற
அனுக்கிரகம் உனக்குளது
தனித்துப் போனாயெனும்
தடுமாற்றம் ஏதுமில்லை

யாருமற்ற கடற்கரையும்
அரையிருளும்,குளிர்காற்றும்
தூரத்தில் எங்கிருந்தோ
துமிக்கின்ற ஓரிசையும்
தாழ்ந்துயர்ந்து மிதந்து செலும்
தனித்தனிப் பறவைகளும்
வாழ்வுக்குப் போதாதா
வழி நெடுக, கை நிறைய
கட்டியணை முழங்காலை
கண் கலங்கும், பிறகென்ன
அழகான தனிமையடா
அப்படியே செத்து விடு..

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இறக்கி விடு என்னை..

களைத்துப் போய் விட்டேன்
காலச் சாரதியே
என் மண்ணைப் பார்க்க முடிந்த
எங்கேனுமோர் திருப்பத்தில்
என்னை இறக்கி விடு

நேற்றெனும் நினைவு கலங்கலாய்,
இன்று இதோ கடந்து போகிறது
நாளை தெரியாது
இல்லாமைப் பெருங்கனத்தை
இருப்பாய்ச் சுமந்தபடி
எவ்வளவு தூரந்தான்..
இறக்கி விடு

ஓர்மம் என்னவாயிற்றென்பதுவாய்
உயர்த்தாதே புருவத்தை!
இரும்பு முட்களேறும் இருளறை,
வதையே சிதைகின்ற வதை,
ஆளில்லாத வெளி,
ஆறுதற்குத் தோள் சாய
உறவில்லாத ஊர்,
பிரிவெனும் பெருவலியினாற் பின்னிய
மின்சார நாற்காலி, அதிற் தினமும்
உயரழுத்த மின்சாரம் பாய்ச்சும்
கன்றினதும் பசுவினதும் கண்ணீர்
இப்படியோர் பாதை வழி
எனையேற்றி வந்து விட்டு
எப்படி மனம் வந்து
எனைப்பார்த்து ஓர்மமென்பாய்?
குலுக்கிய குலுக்கில்
குடல் பிரண்டு போயிற்று
இனியுமுன் வாகனத்தில்
இயலாது, இறக்கி விடு

எதுவுமே இல்லாமற் போகலாம்
இறுதியிற் போய்ச் சாய்கின்ற மரத்தில்
நிழலிருக்காதென்பதைத்தான்
நினைப்பதற்கே முடியவில்லை
அப்படியே முழுவதுமாய் வழித்தெடுத்து
இரெண்டு கைகளிலும் அள்ளி
உயிரூற்றி வளர்த்த மரமது
மலைபோற் தெரிந்த அதன் கனவை
குடைந்துள் நுளைகையில்
அது தொடுவானமாயிற்று

கடலதை விழுங்கியதாய்
கண்ணுக்குத் தெரிந்தாலும்
உடைத்துக் கொடுத்தது
உப கண்டம் தான்
ஒருநாளில்லை ஒருநாள்
தாகத்தின் தகிப்புத் தாங்காமல்
உபகண்டம் உடைய
உதிக்குமெம் கனவு
அருவமாய் இருந்தேனும்
அதையணைப்பேன், ஆதலால்
இப்போதைக்கென்னை
என் மண்ணிலிறக்கி விடு

குருதி வடியுமெம் கனவின்
காயத்துக்கு
கை மருந்துக் கவிதையால்
கட்டுப் போட்டு விட்டு
எட்டப் போய்விடுகிறேன்
போதுமினி, விரைவாக
இறக்கி விடு என்னை
இனிமேலும் இயலாது..

வியாழன், 26 செப்டம்பர், 2013

வாழ மறுக்கப்பட்டவர்கள்..

அட்லான்டிக் பெருங்கடலை நோக்கி
விரைந்துகொண்டிருக்கும்
யாருமற்ற தொடுகடல் நீரோட்டக்கரையில்
இளமை அவனிடமிருந்து
விடைபெற்றுச் செல்கிறது

எந்தக் கண்கசக்கலும் இன்றி
ஒரு தலையசைப்போடு
வழக்கம் போலவே
வழியனுப்பி வைக்கிறது
முதிர் மனது

உன்னது மட்டும் தானா?
என்னிளமையும் கனவுகளும் கூட
இந்தக் கரையிற்தானே களவாடப்பட்டதென
இன்றவள் அங்கிருந்து அழக்கூடும்
இல்லை
இப்போதெல்லாம் அவள் அழுவதில்லை
இறுகி, ஒடுங்கி, இயல்பாகி
பழகிப் போயிருக்கலாம் அவளுக்கும்

இத்தனை காலமாயும் இன்னுமேனென
நீங்கள் எண்ணலாம்
வெற்றி மமதையில் ஆர்ப்பரிக்கும்
எகத்தாள அலைகளின் இரைச்சற் காதுகளுக்கு
நீதி வேண்டும் குரல்கள்
ஒருபோதுமே கேட்பதில்லை

இம்மியளவும் இடைவெளியின்றி
கடல்,நிலத்தால் கட்டி அணைத்தபடி
ஒட்டியிருக்கிறது பூமி
இடைவந்த அதிகாரமும், பலமும்
தாம் நினைத்தபடி வேலிகளைத்
தாட்டு நட
ஏதிலிகளாய் ஆக்கப்பட்ட
எத்தனையோ லெட்சம் பேரின்
படிமமாய் அவளும், அவனும்

நாளை
இவர்கள் குழந்தையும்
பெயரறியாக் கரையொன்றிலிருந்து
இது போலொன்றை
எழுதுதல் கூடும்..