குருதி குடித்து ஓய்ந்த
நிலத்தின் மீது கவிந்திறங்குகிறது
பாறையென இறுகியதோர் பேரடங்கல்
தலை துண்டிக்கப்பட்ட
பனைகளின் நிழலிருந்து
கிளம்பும் பெருந்துயர்கூட
இப்போது
நடுகற்களின் விறைப்பைப் பழகிக்கொண்டது
உறைந்துபோன நெஞ்சம்
தன்னைத்தானே வினவுகிறது
அந்தப் பெருநெருப்பைக் கடந்து வந்தவர்கள்
நாம் தானா ?
எம் ஊர்கள் எரியுண்டது நேற்றிலா
அன்றேல்
பல நூறாண்டுகளுக்கு முன்னரா ?
தம்மையே தொலைத்துவிட்ட பாழ்வழிகளில்
எவ்வுணர்வுமற்றுச் சுழல்கின்றன
உயிரற்று இயங்கும் பாதங்கள்.
மண்ணிலோ மலையிலோ
சூறையாடப்பட்ட வெறுமையிலோ
எங்கு நடந்தாலும்
முள்வேலிகளுக்குள் சிக்குண்ட
கல்லின் பார்வையற்ற உறைநிறைவு.
இஃது
கொப்பளித்த கொதிநிலையில்
காய்ச்சி ஊற்றி
இறுகிப்போன ஈயத்தின் நாழிகை
இருப்பறுந்து போன காரிருட் பொழுது
பேரழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவன்
தன் சுடலை நீற்றை
தானே உதிர்த்துப் பார்ப்பது போல
பழைய நினைவுகளின் மீது
படியும் கனத்த கையறுநிலை.
பனியில் உறைந்த உடலென
எம் நிலம்,
முன்னே பெருநடுக்கம்
பின்னே மரத்தல்
ஈற்றில்
எல்லாமே முடிந்துவிட்டதென
தன்னைத் தானே கையறுத்துச் சரியும்
முடிவிலாப் பேரவலம்
வலிந்து பழக்கப்படுத்திய
மறதி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக