மென்தூறல் வந்துவிழும்
காயம்பட்ட செம்மண்ணில்
உயிர்வாசம் எழும்,
ஒளிரும் சிறகசைவோடு
தகைவிலான்கள் தம்வானில் வட்டமிடும்
பாழடைந்த குளங்களில்
இரவெல்லாம் தவளைகள்
பெருங்குரலெடுக்கும்,
பனிநடுங்கும் வெண்மையில்
பாலைமரங்கள் பூத்துக்குலுங்கும்
செந்தீ வண்ணச் சிறகுகளோடு
செண்பகங்கள்
தரைதாழ்ந்த முள்வேலிகளில்
வீடுகட்டச் சுள்ளிபொறுக்கும்
குருதி சிந்திய போரினை அவை அறியா
ஒன்றுகூட அறியா
எல்லாம் எரிந்து முடிந்தபின்னும்
எவற்றையும் அவை பொருட்படுத்தா
மாந்தர்குலம் முற்றாக வேரற்றுப் போனாலும்
மரங்களும் பறவைகளும்
அதனைக் குறையெனக் கொள்ளா
புலர்காலையிற் கண்விழிக்கும்
இளவேனிற் காலம்கூட
நாம் அற்றுப்போன பெருவெளியை
ஒருபோதும் அறிந்துகொள்ளாது
காலம் அத்தனையையும்
ஒரு தாண்டலில் கடக்கும்
பல்லாயிரம் கோடி
உயிர் பார்த்த பூமிக்கு
புல்லாய் கூட நாமிரோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக