புதன், 29 ஜூலை, 2026

முதுமையடைந்த காத்திருப்பு..

பல ஆண்டுகளாக

நான் பூட்டிவைத்திருந்த ஒரு தெருவை

பழைய தாயகப் பாடல் ஒன்று

இரவில் திறந்துவிடுகிறது


அந்தத் தெருவில்

நீங்கள் மீண்டும் நடந்து வருகிறீர்கள்.


ஒருவன் சைக்கிளின் கைப்பிடியில்

ஒரு கையை மட்டும் வைத்தபடி, 

ஒருவன் நண்பனின் தோளில்

தன் சிரிப்பை விட்டபடி, 

இன்னொருவன்

வீட்டிலிருந்து புறப்பட்டபோது

அம்மா சொன்ன கடைசி சொல்லை

இன்னும் முடிக்காத முகத்தோடு, 


அப்போது

உங்களுக்கு வயது இருந்தது, 


அதை நாம் மறந்துவிட்டோம்.


புகைப்படங்கள்

மனிதர்களின் வயதை அழித்துவிடுகின்றன.

அதில் நீங்கள்

எப்போதும் அதே இளைஞர்கள்

நரை வராத தலைகள்,

மகளின் முதல் பள்ளிநாளைக் காணாத கண்கள்,

வீட்டின் சாவியை

ஒருபோதும் சொந்தமாக வைத்திராத கைகள்.


விரைவில் வருவேனென 

அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சென்ற சிலரை 

வைத்தியசாலையின் வெள்ளை வெளிச்சத்தில்

நான் பார்த்திருக்கிறேன்.


காயத்தின் அருகில்

செவிலியர் வெட்டிய துணி,

படுக்கையின் அடியில்

மண்ணோடு கிடந்த செருப்பு,

தலையணைக்கு அருகே

அரைவாசி குடித்த தண்ணீர்


தேசம் என்ற பெரிய சொல்லைவிட

இப்போது அவைகள்தான்

என்னை அதிகம் கொல்கின்றன.


ஏனெனில்

வரலாறு எப்போதும்

பெரிய சொற்களில் எழுதப்படுகிறது, 


மரணம் மட்டும்

மிகச் சிறிய பொருட்களில்

தன் முகவரியை விட்டுச் செல்கிறது.


சீப்பு, கடிதம்.

திரும்பக் கொடுக்கப்படாத பேனா.

சட்டைப் பையுள் மடிக்கப்பட்ட

வீட்டுப் புகைப்படம்.


எத்தனை ஆயிரம் உயிர்களை

இந்த மண் வாங்கிக்கொண்டது?


அவர்களின் பெயர்களைச்

சொல்லத் தொடங்கினால்

இரவு போதுமா ? 


ஒவ்வொரு பெயருக்கும் பின்னால்

ஒரு சமையலறை இருந்தது,

தாய் காத்திருந்தாள்,

சகோதரி கதவுச் சத்தத்தைக் கேட்டாள்,

குழந்தை தன் நினைவில் இல்லாத 

ஒருவரின் முகத்தை

பிறர் சொல்லிக் கொடுத்த கதைகளால்

அப்பாவாக அமைத்துக்கொண்டது.


எத்தனை வாழ்க்கைகள்

எதிர்காலத்திற்கென்று செலுத்தப்பட்டன, 


ஆனால் எதிர்காலம்

அந்தக் கடனை

இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை.


என் கண்ணீருக்கு காரணம் 

இது தானே தவிர மரணம் அல்ல 


மரணத்திற்குப் பிறகும்

இன்னும் விடியாதிருப்பதே 

நெஞ்சை அடைக்க வைக்கிறது 


அவர்கள் நடந்த வீதிகள் இருக்கின்றன

ஆனால் அவற்றின் பெயர்கள் மாறியிருக்கலாம்

அவர்கள் தொட்ட மரங்கள் இருக்கின்றன

அவற்றின் கீழ்

இப்போது வேறு குழந்தைகள்

திணிக்கப்பட்ட வரலாறொன்றைக் 

கற்றுக் கொண்டிருக்கலாம்.


நீங்கள் பார்த்த கடல் இருக்கிறது

அது மட்டும்

யாருடைய ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு இரவும் அது கரைக்கு வந்து

உடைந்து விம்முவதை 

நான் தினமும் பார்க்கிறேன் 


என் மண்ணே.. 


உனக்காக இறந்தவர்களை

நான் கல்லாக்க விரும்பவில்லை.

அவர்களை

சிலைகளுக்குள் அடைத்துவிடாதே.


அவர்கள் ஒருகாலத்தில்

சிரித்த மனிதர்கள், 

பசியுற்ற மனிதர்கள்,

காதலித்த மனிதர்கள், 

வீடு திரும்ப விரும்பிய மனிதர்கள்.


அவர்களின் மரணத்தைவிட

அவர்களின் வாழாத வாழ்க்கைகளே

பெரியவை.


நாங்கள் உங்களிடம் 

ஒரு தேசத்தை வாக்குறுதி வாங்கவில்லை.

நீங்கள்தான் எங்களிடம்

ஒரு நாளை ஒப்படைத்துச் சென்றீர்கள்.

அந்த நாள்

இன்னும் வரவில்லை.


அதனால்தான்

உங்கள் படங்களைப் பார்க்கும்போது

என் கண்கள் அழுவதில்லை


என் காலமே அழுகிறது.


நாம் வாழ்ந்த ஆண்டுகள்

ஒன்றன் பின் ஒன்றாக

கண்ணீராக வெளியேறுகின்றன.


இளமை, தெருக்கள்,

நண்பர்களின் குரல்கள்,

அவசரமாக மூடப்பட்ட கதவுகள்,

இரவின் வானில் திடீரென அணைந்த விளக்குகள்

அனைத்தும்

ஒரே புகைப்படத்தின் பின்னால்

நின்றுகொண்டிருக்கின்றன.


அதன் பிறகு 

அவர்கள் திரும்பவில்லை

அவர்கள் முகங்கள் மட்டும்

அந்த இளமையிலேயே நின்றுவிட்டன


நம் காத்திருப்பும் 

முதுமையை எய்தி விட்டது 


பல்லாயிரம் உயிர்கள் கடந்தும்

இந்த மண் இன்னும்

அவர்கள் சென்ற

அந்த இரவின் மறுபுறம்

சேரவே இல்லை.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக