Friday, 2 May 2025

விதியெனச் சொல்வதா..

உன் கண்களில்

காலம் தேங்கி நிற்கிறது

நினைவுகளின் ஆழத்தில்

முகங்கள் மறைகின்றன.

-

வாழ்க்கை என்ற நதியில்

சந்திக்கும் கரைகள் நாம்

சிறிது நேரம் தொடும்

அலைகள் போல் உறவுகள்.

விதியா தற்செயலா இந்த சந்திப்புகள்?

-

யாரோ ஒருவர் வருகிறார்

யாரோ ஒருவர் போகிறார்

இடைவெளியில் வாழ்க்கை ஓடுகிறது

மணல் கடிகாரத்தின் நுண்துகள்கள் போல

-

தேடாத போதும் காண நேர்கிறது

தேடியும் காணாமல் போகிறது

நட்சத்திரங்கள்

ஒருமுறை தொடும் பாதைகள் போல

சில உறவுகள்

ஒருமுறை மட்டுமே சந்திக்கின்றன

-

முன்னரே எழுதப்பட்ட கதை அல்ல இது

ஆனால் தற்செயலின் விளையாட்டும் அல்ல

கடலில் கலக்கும் ஆறுகள் போல

நாம் யாரைச் சந்திப்போம் என்பது

இடையில் வந்த

ஏதோவோர் ஏற்பாடு தானோ..?

-

இன்று என் வாழ்வில் நீ இருக்கிறாய்,

நாளை உன் நினைவு மட்டுமே மிஞ்சலாம்

ஆனால் நம் சந்திப்பின் நறுமணம்

காலத்தின் கையில்

பொறிக்கப்பட்ட ஒரு கவிதையாய்

நாசிக்குள் ஒழிந்து கிடக்கும்

-

விதியென்று நம்பினால்

தேடுதல் தேவையில்லை,

தற்செயலென்று புரிந்தால்

ஒவ்வொரு சந்திப்பும் அற்புதம்.

-

இவ்வுலகம் ஆழ்ந்தகன்ற பெருங்கடல்

அதில் சிதறித் தெறிக்கும்

பெயரறியா துளிகள் நாம்

ஒருமுறை தன்னை

ஆரத் தழுவும் அலைகளை

மீண்டும் சந்திக்குமா கரை..?

No comments:

Post a Comment