உன் கண்களில்
காலம் தேங்கி நிற்கிறது
நினைவுகளின் ஆழத்தில்
முகங்கள் மறைகின்றன.
-
வாழ்க்கை என்ற நதியில்
சந்திக்கும் கரைகள் நாம்
சிறிது நேரம் தொடும்
அலைகள் போல் உறவுகள்.
விதியா தற்செயலா இந்த சந்திப்புகள்?
-
யாரோ ஒருவர் வருகிறார்
யாரோ ஒருவர் போகிறார்
இடைவெளியில் வாழ்க்கை ஓடுகிறது
மணல் கடிகாரத்தின் நுண்துகள்கள் போல
-
தேடாத போதும் காண நேர்கிறது
தேடியும் காணாமல் போகிறது
நட்சத்திரங்கள்
ஒருமுறை தொடும் பாதைகள் போல
சில உறவுகள்
ஒருமுறை மட்டுமே சந்திக்கின்றன
-
முன்னரே எழுதப்பட்ட கதை அல்ல இது
ஆனால் தற்செயலின் விளையாட்டும் அல்ல
கடலில் கலக்கும் ஆறுகள் போல
நாம் யாரைச் சந்திப்போம் என்பது
இடையில் வந்த
ஏதோவோர் ஏற்பாடு தானோ..?
-
இன்று என் வாழ்வில் நீ இருக்கிறாய்,
நாளை உன் நினைவு மட்டுமே மிஞ்சலாம்
ஆனால் நம் சந்திப்பின் நறுமணம்
காலத்தின் கையில்
பொறிக்கப்பட்ட ஒரு கவிதையாய்
நாசிக்குள் ஒழிந்து கிடக்கும்
-
விதியென்று நம்பினால்
தேடுதல் தேவையில்லை,
தற்செயலென்று புரிந்தால்
ஒவ்வொரு சந்திப்பும் அற்புதம்.
-
இவ்வுலகம் ஆழ்ந்தகன்ற பெருங்கடல்
அதில் சிதறித் தெறிக்கும்
பெயரறியா துளிகள் நாம்
ஒருமுறை தன்னை
ஆரத் தழுவும் அலைகளை
மீண்டும் சந்திக்குமா கரை..?
No comments:
Post a Comment