Monday, 28 April 2025

இல்லியல்..

பிரிவிடைத் துயர்வரா பிணைந்த நெஞ்சம்

அணுவினுள் அடங்கா அனைத்துமாய்ப் பரவி

இல்லையாம் உடலினுள் இருப்பதாம் உணர்வு 

மூக்கினுள் நுழைதந்து முழுநிலா ஆகி

நின்னுயிர்ப் பாவி நிறைந்திடும் என்னுள் 

-

கைத்தலம் பிரிந்தும் கனவினில் தொட்டு

விரல்நுனித் தடத்தில் விரிந்திடும் வெம்மை

இசையிலா அறையினும் இதயத்தின் ஓசை

நின்குரல் தேடி நெளிந்திடும் காதில்

மின்னல்போற் தோன்றி மறையினும் நின்முகம்

கண்ணிமை நொடியில் கனற்றிடும் மனத்தில்

-

சுளையிலா நாவினும் சுவைத்திடும் இன்பம்

இதழ்ப்பரப் பெங்கும் ஈரத்தின் சுவடுகள்

இவ்வுயிர்க் கலப்பே எழுந்திடும் அமைதி

இடையிலா அறிவின் இயல்பின் உரையாடல்

தொலைவிலா அகலம் துலங்கிடும் நின்னொளி

முயங்கலில் சேர்ந்தும் முயங்கலில் பிரிந்தும்

இல்லியல் மீதே எழுகிற துளிர்ப்பு

-

உண்மையுற் றுணர்தல் ஒன்றிய மங்கலம்

உருபொடு சேர்ந்தும் உருவின்றி நின்றும்

இருமையும் கடந்த இயலுணர் அகத்தே

கொம்பினிற் தளிர்போல் குழைந்திடும் உணர்வின்

மென்மையின் தண்டாய் மிளிர்கின்ற பிணைப்பில்

பால்பெயர் கடந்த பாங்கது நிற்க,

உயிரது கரைய உணர்ச்சியில் வாழ்தல்

இவணிது கண்டேன் இதயமார் துணையே..

No comments:

Post a Comment