Friday, 9 May 2025

விடுதலையின் விலை..

கடலின் நுரையைப் போல

போர்கள் வந்து போகின்றன,

ஆனால் அலைகளின் ஆழத்தைப் போல

துயரம் நிலைத்திருக்கிறது.

-

நான் பார்த்தேன் மண்ணின் மகன்களே !

உங்கள் இரத்தம் காய்ந்த களங்களில்

புல் முளைக்கிறது,

உங்கள் எலும்புகளில் இருந்து

வெளிப்படும் வெளிச்சத்தில்

நாட்டின் புதிய கதைகள் எழுதப்படுகின்றன.

-

மரணித்த வீரர்களின் தாய்மார்களே

உங்கள் கருவறைகள்

ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்

உங்கள் கைகளில் இருக்கும் வெற்றிடத்தை

எந்த கோட்டையும், எந்த சிலையும்

எந்த பாடலும் நிரப்ப முடியுமா?

-

இப்போது அரிசிப் பானையில்

சாம்பல் மணம்,

அவன் படுத்த படுக்கையில்

தூசியின் மெளனம்,

அவள் தொட்ட வேப்பமரத்தில்

இன்னும் ஒலிக்கிறது

திரும்பி வருவேன் என்ற

வார்த்தையின் எதிரொலி

-

மன்னர்கள் மாறலாம், கொடிகள் மாறலாம்,

ஆனால் இழப்பு நிகழ்ந்த

ஒவ்வொரு வீட்டிலும் காத்திருக்கிறது

பெயரிடப்படாத, முடிவற்ற,

நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்

-

நான் உணர்கிறேன்

தேசத்தின் விடுதலைக்கான அந்த விலை

வீரனின் மனைவியின் கண்ணீரிலும்,

மகனின் பெயரை உச்சரிக்காத

தந்தையின் உதடுகளிலும்,

உணர்வை இன்னமும்

வெளிச் சொல்லத் தெரியாத

குழந்தைகளில் பெருமூச்சுகளிலும்

காத்திருப்பின் ஊமையான

வலியில் உறைந்திருக்கிறது.

-

போர்கள் முடிவடையும்,

ஆனால் காயங்கள் ஒருபோதும்

ஆறுவதில்லை,

மண்ணின் மடியில் வீழ்ந்த

மனிதனின் இடத்தை

எந்த வெற்றியாலும் நிரப்பவிட முடியாது.

ஓ.. இதுதான் விடுதலையின் விலையா?

-

ஆனால் இப்போது நாம்

கற்றுக்கொண்டே ஆகவேண்டும்

எப்படி வெற்றிடத்துடன் வாழ்வது

எப்படி இல்லாமையின் இருப்புடன்

இணைந்திருப்பது

எப்படி எல்லாவற்றையும்

மறக்கப் பழகும் மூளையைப் பெறுவது

அல்லது நினைவுகள் எதுவும் தங்காத

பைத்திய நிலையை அடைவது..

No comments:

Post a Comment