கடலின் நுரையைப் போல
போர்கள் வந்து போகின்றன,
ஆனால் அலைகளின் ஆழத்தைப் போல
துயரம் நிலைத்திருக்கிறது.
-
நான் பார்த்தேன் மண்ணின் மகன்களே !
உங்கள் இரத்தம் காய்ந்த களங்களில்
புல் முளைக்கிறது,
உங்கள் எலும்புகளில் இருந்து
வெளிப்படும் வெளிச்சத்தில்
நாட்டின் புதிய கதைகள் எழுதப்படுகின்றன.
-
மரணித்த வீரர்களின் தாய்மார்களே
உங்கள் கருவறைகள்
ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்
உங்கள் கைகளில் இருக்கும் வெற்றிடத்தை
எந்த கோட்டையும், எந்த சிலையும்
எந்த பாடலும் நிரப்ப முடியுமா?
-
இப்போது அரிசிப் பானையில்
சாம்பல் மணம்,
அவன் படுத்த படுக்கையில்
தூசியின் மெளனம்,
அவள் தொட்ட வேப்பமரத்தில்
இன்னும் ஒலிக்கிறது
திரும்பி வருவேன் என்ற
வார்த்தையின் எதிரொலி
-
மன்னர்கள் மாறலாம், கொடிகள் மாறலாம்,
ஆனால் இழப்பு நிகழ்ந்த
ஒவ்வொரு வீட்டிலும் காத்திருக்கிறது
பெயரிடப்படாத, முடிவற்ற,
நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்
-
நான் உணர்கிறேன்
தேசத்தின் விடுதலைக்கான அந்த விலை
வீரனின் மனைவியின் கண்ணீரிலும்,
மகனின் பெயரை உச்சரிக்காத
தந்தையின் உதடுகளிலும்,
உணர்வை இன்னமும்
வெளிச் சொல்லத் தெரியாத
குழந்தைகளில் பெருமூச்சுகளிலும்
காத்திருப்பின் ஊமையான
வலியில் உறைந்திருக்கிறது.
-
போர்கள் முடிவடையும்,
ஆனால் காயங்கள் ஒருபோதும்
ஆறுவதில்லை,
மண்ணின் மடியில் வீழ்ந்த
மனிதனின் இடத்தை
எந்த வெற்றியாலும் நிரப்பவிட முடியாது.
ஓ.. இதுதான் விடுதலையின் விலையா?
-
ஆனால் இப்போது நாம்
கற்றுக்கொண்டே ஆகவேண்டும்
எப்படி வெற்றிடத்துடன் வாழ்வது
எப்படி இல்லாமையின் இருப்புடன்
இணைந்திருப்பது
எப்படி எல்லாவற்றையும்
மறக்கப் பழகும் மூளையைப் பெறுவது
அல்லது நினைவுகள் எதுவும் தங்காத
பைத்திய நிலையை அடைவது..
No comments:
Post a Comment