சனி, 17 மே, 2025

முள்ளிவாய்க்கால் படுகளம்..

திரைகடல் முழங்கும் திண்மணற் பரப்பில்

கார்முகில் கவிந்த கானல் நெடுநிலை

சுடுபடு மறவர் யாக்கைகள் மடிந்து

கணைநுதி சிதறிக் கருஞ்சுடரெழுந்து

களத்தொடு கலவா களமகள் செந்நீர்

விசும்பொடு கலந்த வெம்மையின் சீற்றம்

நோக்கினென் திரும்பி நொந்தனென் நின்றே

-

கழிமுக நெய்தல் கதிர்விரி காலை

நீல்நிற வானத்து நேர்கதிர் பரந்து

அகல்வயல் ஊர்ந்த அந்திப் பொழுதில்

தானைகள் சூழத் தாக்குபடை வந்தென

கரையினில் மலிந்த களிற்றுமுக மறவர்

நுண்கூந்தல் அவிழ்ந்து நெக்குநெக்கு உருகி

மென்னடை மகளிர் அயர்வுற்று நின்றார்

-

முள்ளிதழ் அரும்பி முகிழ்த்த பொழுதின்

திரைநுரை பொங்கித் திரண்டுடல் தழுவி

நீர்சொரிந்து நைந்து நிலைகலங்கி நின்று

பொருள்புரி காட்டும் புலவுநா றுடலம்

-

பொருகளத்து எதிர்ந்த பொலிவுறு மறவர்

பகைப்புலம் புகுந்து பரிவின்றிப் பொருது

கானல் காக்கும் கடற்புள் போலவே

பிறர்க்கொடை படாஅப் பெருமித நெஞ்சொடு

உயிர்திறம் கொடாஅ உரனுடை யாளர்

-

வன்னிமர வடுப்புண் ஆறா தாங்கு

அரவுதின் றனைய அழல்புண் போலவே

களத்துறு வடுக்கள் கழிதல் இலவே

நெஞ்சுறு துயரம் நீங்குதல் இன்றி

வான்பெயல் பொழியும் வளநீர் போல

தளர்வற எழுந்து தலைப்பெய்து மீளும்

-

எஃகுடை வலத்தர் இயங்குறு களத்தில்

யாண்டுபல கழியினும் எக்கர் தந்த

மாண்புறு மறவர் மரபுவழி நின்று

தமிழியல் காக்கும் தகைசால் உளமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக