Saturday, 17 May 2025

முள்ளிவாய்க்கால் படுகளம்..

திரைகடல் முழங்கும் திண்மணற் பரப்பில்

கார்முகில் கவிந்த கானல் நெடுநிலை

சுடுபடு மறவர் யாக்கைகள் மடிந்து

கணைநுதி சிதறிக் கருஞ்சுடரெழுந்து

களத்தொடு கலவா களமகள் செந்நீர்

விசும்பொடு கலந்த வெம்மையின் சீற்றம்

நோக்கினென் திரும்பி நொந்தனென் நின்றே

-

கழிமுக நெய்தல் கதிர்விரி காலை

நீல்நிற வானத்து நேர்கதிர் பரந்து

அகல்வயல் ஊர்ந்த அந்திப் பொழுதில்

தானைகள் சூழத் தாக்குபடை வந்தென

கரையினில் மலிந்த களிற்றுமுக மறவர்

நுண்கூந்தல் அவிழ்ந்து நெக்குநெக்கு உருகி

மென்னடை மகளிர் அயர்வுற்று நின்றார்

-

முள்ளிதழ் அரும்பி முகிழ்த்த பொழுதின்

திரைநுரை பொங்கித் திரண்டுடல் தழுவி

நீர்சொரிந்து நைந்து நிலைகலங்கி நின்று

பொருள்புரி காட்டும் புலவுநா றுடலம்

-

பொருகளத்து எதிர்ந்த பொலிவுறு மறவர்

பகைப்புலம் புகுந்து பரிவின்றிப் பொருது

கானல் காக்கும் கடற்புள் போலவே

பிறர்க்கொடை படாஅப் பெருமித நெஞ்சொடு

உயிர்திறம் கொடாஅ உரனுடை யாளர்

-

வன்னிமர வடுப்புண் ஆறா தாங்கு

அரவுதின் றனைய அழல்புண் போலவே

களத்துறு வடுக்கள் கழிதல் இலவே

நெஞ்சுறு துயரம் நீங்குதல் இன்றி

வான்பெயல் பொழியும் வளநீர் போல

தளர்வற எழுந்து தலைப்பெய்து மீளும்

-

எஃகுடை வலத்தர் இயங்குறு களத்தில்

யாண்டுபல கழியினும் எக்கர் தந்த

மாண்புறு மறவர் மரபுவழி நின்று

தமிழியல் காக்கும் தகைசால் உளமே..

No comments:

Post a Comment