அந்தக் கடற்கரையில் இரத்தம் உப்பாகிறது
சிதைந்த உடல்களின்
சாம்பல்கள் அலைகளாக எழுகின்றன.
நான் கேட்கிறேன்
இந்தப் பூமி இன்னும்
எத்தனை துயரங்களைத்தான் தாங்கும்?
-
பல்லாயிரம் உடலங்கள்
உலகின் நீண்ட கொல்களத்தில்
கேட்பாரற்றுச் சிதறிக் கிடந்ததை
எப்படி மறக்க முடியும்?
-
கருவறையில் கிழிக்கப்பட்ட குழந்தைகளின்
முடிவடையாத கனவுகளை
யார் பாடுவார் ?
மிதிபட்ட பூக்களின் வாசனையை
யார் நுகர்வார் ?
முள்ளிவாய்க்காலின் மணலில்
என் இனத்தின் பெயரை
யார் மீண்டும் எழுதுவார் ?
-
உலகத்தின் அமைதி
என் மக்களின் சாவில் உறங்குகிறது
அவர்களின் கண்களில்
கடைசி வெளிச்சம் இன்னும் எரிகிறது
மரணம் என்ற பறவை
எம் வானத்தை மூடியது
எம்முடைய கிழக்கில்
நீதி என்ற கதிரவன்
இன்றுவரை எழவில்லை
-
கொலையாளிகளுக்கு
வாக்களிக்க சொல்கிறார்கள்
அவர்களின் கரங்களில்
இன்னும் எம் குருதி உலர்ந்திருக்கிறது
இனவெறியின் கூத்தில்
எம் ஈழம் சிதைந்தது
இப்போது அதே கூத்தாடிகள்
நீதி பேசுகிறார்கள்
-
எனது மக்களின் தோல் உரிக்கப்பட்டது
அவர்களின் சதை வெட்டப்பட்டது
அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்டது
ஆனால் நினைவு,
நினைவை உடைக்க முடியாது.
-
இன்று தமிழீழம்
ஒரு கவிதையாக வாழ்கிறது
ஒவ்வொரு சொல்லும் ஒரு சாட்சி
ஒவ்வொரு வரியும் ஒரு வடு
ஒவ்வொரு பாடலும் ஒரு போராட்டம்..
No comments:
Post a Comment