Tuesday, 6 May 2025

மிக நீண்ட கொல்களம்..

அந்தக் கடற்கரையில் இரத்தம் உப்பாகிறது

சிதைந்த உடல்களின்

சாம்பல்கள் அலைகளாக எழுகின்றன.

நான் கேட்கிறேன்

இந்தப் பூமி இன்னும்

எத்தனை துயரங்களைத்தான் தாங்கும்?

-

பல்லாயிரம் உடலங்கள்

உலகின் நீண்ட கொல்களத்தில்

கேட்பாரற்றுச் சிதறிக் கிடந்ததை

எப்படி மறக்க முடியும்?

-

கருவறையில் கிழிக்கப்பட்ட குழந்தைகளின்

முடிவடையாத கனவுகளை

யார் பாடுவார் ?

மிதிபட்ட பூக்களின் வாசனையை

யார் நுகர்வார் ?

முள்ளிவாய்க்காலின் மணலில்

என் இனத்தின் பெயரை

யார் மீண்டும் எழுதுவார் ?

-

உலகத்தின் அமைதி

என் மக்களின் சாவில் உறங்குகிறது

அவர்களின் கண்களில்

கடைசி வெளிச்சம் இன்னும் எரிகிறது

மரணம் என்ற பறவை

எம் வானத்தை மூடியது

எம்முடைய கிழக்கில்

நீதி என்ற கதிரவன்

இன்றுவரை எழவில்லை

-

கொலையாளிகளுக்கு

வாக்களிக்க சொல்கிறார்கள்

அவர்களின் கரங்களில்

இன்னும் எம் குருதி உலர்ந்திருக்கிறது

இனவெறியின் கூத்தில்

எம் ஈழம் சிதைந்தது

இப்போது அதே கூத்தாடிகள்

நீதி பேசுகிறார்கள்

-

எனது மக்களின் தோல் உரிக்கப்பட்டது

அவர்களின் சதை வெட்டப்பட்டது

அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்டது

ஆனால் நினைவு,

நினைவை உடைக்க முடியாது.

-

இன்று தமிழீழம்

ஒரு கவிதையாக வாழ்கிறது

ஒவ்வொரு சொல்லும் ஒரு சாட்சி

ஒவ்வொரு வரியும் ஒரு வடு

ஒவ்வொரு பாடலும் ஒரு போராட்டம்..

No comments:

Post a Comment