Monday, 20 January 2025

கடற்பெருங் காதல்..

பேராழி எழுப்பும் பெருந்திரை ஓதம்தான்

நீராடு காலம் நினைவுற - பாராளும்

பண்டைய கதைகளைப் பாய்திரை கொண்டுவரும்

வண்டமிழ் சான்றோர் வழி

-

முன்னோர் மொழிந்த முதுமொழி பேணியே

பின்னோர்க்கு நல்கும் பெருங்கடல் - என்னாளும்

ஆழத்து மூச்சாய் அலைமேல் அலைபரப்பித்

தாழ்வற வாழ்வைத் தரும்

-

திரைமேல் திரையாய்த் திசைதிசை சென்றிடும்

கரைசேர் பவர்க்குக் கதிகாட்டும் - விரைவுடன்

தேடும் மனத்தோர்க்குத் தெள்ளமுதம் ஊட்டும்

ஆடும் அலைக்கடல் காண்

-

நுண்ணிய நீலம் நுழைந்துள பொன்னெலாம்

கண்ணுக்குப் பூத்த கதிர்வீசும் - எண்ணரும்

மூழ்கிய மாந்தர் முடிவிலா வாழ்வினைக்

கீழ்மேல் என்றே கிளர்

-

பேராழி தன்னிற் பெருமைகள் நோக்கினால்

ஓராழி போலும் உயிர்ப்பெலாம் - நீராடிப்

போந்தது போலப் புணரிதான் போய்விடும்

ஆய்ந்தபின் முற்றும் அறிந்து

No comments:

Post a Comment