Monday, 20 January 2025

வான்பெயல் வண்ணம்..

யாழின் நரம்பின் இசையெனப் பொழியும் 

வான்துளி வீழ்ந்து வயங்கொளி பரப்ப 

திங்கள் முகத்து தெள்ளொளி போல 

மங்குல் சிந்தும் மாமழைத் துளிகள்

பானல் மலர்மேல் பனித்துளி துயில 

நீலம் பூத்த நெடுவான் கீழே 

காலை வெயிலின் கதிர்க்கை பற்றி 

தேமா மலரின் தேன்துளி சிந்த 

நறுமொழி கேட்டு நெஞ்சம் துடிப்ப 

கானக் குயிலின் கனிமொழி யாக 

வானம் உரைக்கும் வண்மொழி கேட்டு 

குன்றின் நெஞ்சில் குளிர்த் துளி பாய்ந்து 

நின்று நிலவும் நேயம் போல 

தண்ணீர்த் துளியின் தகைமையை நோக்கி 

மண்ணின் மடியில் மறைபொருள் தேடி 

நீர்த்துளி சிதறி நெஞ்சம் நனைய 

யார்பெயர் சொல்லி அழைத்தனை இங்கே? 

விழியில் நிறைந்த வியப்பினை நோக்கி 

மொழியற்று நின்ற முகிலின் கீழே 

அகத்துள் உறையும் அன்பினை உணர்த்தி 

புலரும் விடியல் பொழுதினில் தோன்றி 

மலரும் மனத்தின் மகிழ்வினைப் போல 

தண்மைப் பெருமழை தன்னுள் கரைக..

No comments:

Post a Comment