Wednesday, 22 January 2025

அழகெனப்படுவது..

குடிசையின் கூரையில்

கொட்டும் மழைநீரில்

கரைகிறது இசை

தொழிலாளியின்

தழும்பேறிய கைகளில்

தவழ்கிறது அழகு

-

தெருவோர வாங்கிலில்

முதியவனின் முகத்தில்

மூழ்கியிருக்கிறது கவிதை

கூலித்தொழிலாளி

உடலில் வழியும்

வியர்வையில் மின்னுகிறது

சிற்பத்தின் ஒளி

-

உண்மை நிர்வாணமாய்

நடமாடும் தெருக்களில்

வறுமையின் வலியும்

வாழ்வின் அழகும்

வேறுவேறல்ல

-

நீ கவலைப்படாதே தோழா

அழகு எங்கும் இருக்கிறது

தொழிற்சாலை புகையிலும்

தொழிலாளி கண்ணீரிலும்

வியர்வை துளிகளிலும்

வீதியோர பிச்சைக்காரனின்

விரிசல் விழுந்த முகத்திலும்

-

பொய்யென நினைத்தது

மெய்யாய் மாறுகிறது

உண்மையென நம்பியது

பொய்யாய் உதிர்கிறது

அழகு மட்டும்

அப்படியே நிற்கிறது

முதலாளித்துவம்

விற்பனைப் பொருளாக்கிய

அழகு அல்ல இது

உழைக்கும் மக்களின்

உயிர்த்துடிப்பில் பிறந்த

உழைப்பின் உண்மை

-

கலையரங்கின் சுவர்களில்

காட்சிப்பொருளாய்

தொங்கும் ஓவியங்கள் அல்ல

கடின உழைப்பாளியின்

கரங்களில் மலரும்

காயங்களின் கவிதை

-

வர்க்க வேறுபாடற்ற

வருங்கால உலகின்

விடிவெள்ளி போல

வெளிச்சமாய் தெரிகிறது

அழகின் உண்மை

-

நாளை மலரும்

நம் கனவுகளின்

நித்திய இளமை போல

நிலைத்து நிற்கிறது

அழகின் மெய்மை

No comments:

Post a Comment