Monday, 20 January 2025

நாடற்ற நாவாய்கள்..

ஓ காலமே..!

உன் வெண்ணிலா விழிகளில் படிந்த

இரவின் கண்ணீர் துளிகளை

எம் வாழ்வின் கனவுகளாய் மாற்றும்

மாயக் கலைஞனே

-

கடற்பரப்பின் பேரலைகள் போல

கரைந்து கரைந்து வரும் நாட்களின்

கரையில் நாங்கள் சிறு கூழாங்கற்கள்

உன் அலைகள் எம்மை உருட்டி உருட்டி

உயிரின் வண்ணம் தீட்டுகின்றன

-

யாழின் நரம்புகள் போல் இழுக்கும்

இளவேனிற் காற்றின் கீதங்களில்

எம் இதயம் துடிக்கும் ஒவ்வொரு துடிப்பிலும்

உன் தூரிகையின் தடங்கள்

தனிமையின் பெருங்காட்டில்

தவழும் பனிப்பூக்கள் நாங்கள்

-

முற்றா முகிலின் கருவறையில்

முகிழ்க்கும் மின்னல் ஒளி போல

எம் வாழ்வின் கணநேரங்கள்

உன் கைவண்ணத்தில் பதிந்து

வலிகளின் வண்ணக் கனவுகளாய்

மலர்கின்றன, மறைகின்றன

-

நீலக் கடலின் ஆழத்தில்

நித்திரை கொள்ளும் முத்துக்கள் போல

எம் கனவுகள் உன் மார்பில் உறங்க

காலங்கள் கடந்தும் ஊறும்

கவிதையின் சுவை ஊற்றே

-

நீ வரையும் வானவில்லின் கீழ்

நிலவொளி குடித்து வளரும்

நெஞ்சின் மலர்க்கொடிகள் நாங்கள்

உன் அழியாப் பேரழகின் முன்

கரையற்ற கடலில் மிதக்கும்

நாடற்ற நாவாய்களாய்

நாமும் வாழ்வும்..

No comments:

Post a Comment