Wednesday, 15 January 2025

மழையில் கரையும் நாட்கள்..

நேற்றென்பது

கடந்துபோன கனவின் நிழல்தான்

அதன் விளிம்புகளில் தேங்கிய பனித்துளிகள் போல

இன்று நம் விரல்களில் வழிகிறது காலம்

நாளையென்பது

இன்றின் கண்ணாடியில்

மங்கலாய் தெரியும் முகம்தான்

-

நினைவுகளின் மழைக்குள் நனைந்தபடி

நிற்கிறோம் நாம்,

ஒவ்வொரு துளியிலும் ஒரு கதை,

ஒவ்வொரு சொட்டிலும் ஒரு காலம்,

இடைவெளிகளில் தவழும் மௌனம்

இன்னொரு மொழியில் பேசுகிறது.

-

கனவுகளும் நினைவுகளும்

ஒரே நதியின் இரு கரைகள்தான்

நடுவே ஓடும் நீரில்

நம் விம்பங்கள் கரைகின்றன

யார் சொன்னது நேற்று வேறு,

நாளை வேறு என்று?

-

இரண்டும் ஒரே பறவையின்

இறக்கைகள்தான்

ஒன்று கனவின் நிறத்தில்,

மற்றொன்று நினைவின் நிழலில்

இடையே பறக்கிறது ‘இன்று’

இமைப்பொழுதில்..​​​​​​​

No comments:

Post a Comment