நேற்றென்பது
கடந்துபோன கனவின் நிழல்தான்
அதன் விளிம்புகளில் தேங்கிய பனித்துளிகள் போல
இன்று நம் விரல்களில் வழிகிறது காலம்
நாளையென்பது
இன்றின் கண்ணாடியில்
மங்கலாய் தெரியும் முகம்தான்
-
நினைவுகளின் மழைக்குள் நனைந்தபடி
நிற்கிறோம் நாம்,
ஒவ்வொரு துளியிலும் ஒரு கதை,
ஒவ்வொரு சொட்டிலும் ஒரு காலம்,
இடைவெளிகளில் தவழும் மௌனம்
இன்னொரு மொழியில் பேசுகிறது.
-
கனவுகளும் நினைவுகளும்
ஒரே நதியின் இரு கரைகள்தான்
நடுவே ஓடும் நீரில்
நம் விம்பங்கள் கரைகின்றன
யார் சொன்னது நேற்று வேறு,
நாளை வேறு என்று?
-
இரண்டும் ஒரே பறவையின்
இறக்கைகள்தான்
ஒன்று கனவின் நிறத்தில்,
மற்றொன்று நினைவின் நிழலில்
இடையே பறக்கிறது ‘இன்று’
இமைப்பொழுதில்..
No comments:
Post a Comment