ஞாயிறு, 26 ஜூலை, 2026

நீளும் தண்டவாளங்களாய்..

என்றோ ஒரு நாள் 

எமக்கு மிகவும் வயதாகிய பிறகு இந்தக் கடிதத்தை

உனக்குப் படித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.


ஆனால் சில உரைகளுக்கு மேடை கிடைப்பதில்லை,

சில காதல்களுக்கு வீடு கிடைப்பதில்லை

சில மனிதர்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையாக இருந்தும்

ஒரே வாழ்க்கைக்குள் சேர முடியாமல் போகிறார்கள்.


அதனால் இன்று இந்த நினைவுப் பதிவை உன்னிடம் அல்ல,

உன்னை ஒருகாலத்தில் விரும்பிய என் வாழ்வின் முன் வாசிக்கிறேன்.


நீ இப்போது எங்கே இருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது.

உன் தலைமுடியில் நரை வந்துவிட்டதா,

காலையில் எழுந்ததும் கண்ணாடியில் உன் முகத்தை ஒரு கணம் நீயே அடையாளம் காணாமல் நிற்கிறாயா,

உன் வீட்டில் யாருடைய காலடிச் சத்தங்கள் நிரம்பியிருக்கின்றன,

அதே லுமாலா சைக்கிள் தான் இன்னும் ஓடுகிறாயா 

எந்தச் சாளரம் வழியாக மழையைப் பார்க்கிறாய்


எதுவும் எனக்குத் தெரியாது.


ஆனால் ஒரு காலத்தில்

உன் சிரிப்பால் மாலை நேரம் தாமதமாக இருண்டது

என்பது மட்டும் எனக்குத் தெரியும்.


அது மிகச் சிறிய அதிசயம்.


உலகம் தன் வழக்கமான வேலையைச் செய்துகொண்டிருந்தது.

பேருந்துகள் சென்றன. கடைகள் மூடின. பறவைகள் தங்கள் இரவுகளைத் தேடின. கடிகாரங்கள் எந்தக் காதலுக்கும் இரக்கம் காட்டாமல் நகர்ந்தன.


ஆனால் நாம் மட்டும்,


‘போய் வருகிறேன்’


என்ற இரண்டு சொற்களுக்குள்

இன்னும் கொஞ்சம் வாழ முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

மனிதன் எவ்வளவு விசித்திரமான உயிரினம்

அவனுக்குக் கிடைத்திருக்கும் நேரம் குறைவு என்பதை அறிந்தும்

அவன் காதலிக்கிறான்.

பிரிய வேண்டியிருக்கும் என்பதை அறிந்தும்

ஒருவரின் கையைப் பிடிக்கிறான்.


எல்லா உடல்களும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்பும் என்பதை அறிந்தும்

ஒரு குறிப்பிட்ட முகத்தை மட்டும் மரணத்திலிருந்து காப்பாற்றிவிட முடியும் என்பதுபோல் நினைவில் வைத்துக்கொள்கிறான்.


நானும் அப்படித்தான் உன்னை வைத்துக்கொண்டேன்.


நினைவில் அல்ல.

இதனைச் சொல்ல நினைவு என்பது மிகச் சிறிய சொல்.


நான் வாழ்ந்த வருடங்களின் உள்ளே

யாரும் திறக்காத ஓர் அறையைப்போல்

உன்னை வைத்துக்கொண்டேன்.


அங்கே காலம் நுழையவில்லை.


அங்கே இன்னும் நீ

நான் கடைசியாகப் பார்த்த வயதில்தான் இருக்கிறாய்.


நான்தான் முதுமையடைகிறேன்.

நீ இல்லை.


இதுதான் இழப்பின் கொடூரமான கருணை.

அது ஒருவரை நம்மிடமிருந்து எடுத்துச் செல்கிறது, 

பிறகு அவர்மீது காலம் கை வைக்க முடியாதபடி செய்துவிடுகிறது.


சில இரவுகளில் நான் யோசித்திருக்கிறேன், 


நீ என்னுடன் இருந்திருந்தால்

இவ்வளவு முழுமையாக என்னுள் இருந்திருப்பாயா ? 


நாம் ஒரே வீட்டில் வாழ்ந்திருந்தால் ? 

ஒரே படுக்கையின் இரண்டு பக்கங்களில் தூங்கியிருந்தால் ? 


காலையில் யார் முதலில் எழுவது, யார் கதவைப் பூட்ட மறந்தது,

யார் வாங்க வேண்டியதை வாங்கவில்லை,

எந்தச் செலவை யார் செய்தது, 


இந்தச் சிறிய கற்களால்

நமது காதல் ஒரு சாதாரண வீடாகக் கட்டப்பட்டிருக்குமா ? 

ஒருவேளை அது இன்னும் அழகாக இருந்திருக்கலாம் ? 

ஒருவேளை நாம் குழந்தைகளின் சத்தத்திற்குள் முதுமையடைந்திருப்போம்.

ஒருவேளை உன் நரைத்த தலைமுடியை நான் சீவியிருப்பேன்.

ஒருவேளை என் கைகள் நடுங்கத் தொடங்கியபோது

நீ என் சட்டையின் பொத்தான்களைப் போட்டிருப்பாய்.


அந்த வாழ்க்கையும் காதல்தான்.


அதை நான் குறைவாக எண்ணவில்லை

ஆனால் அது நமக்குக் கிடைக்கவில்லை, 


நமக்குக் கிடைத்தது வேறு ஒன்று, 

முடிவடையாத ஒன்றின் முழுமை.


அதனால்தான் உன்னை இழந்ததற்காக மட்டும் நான் வருந்தவில்லை.

நாம் வாழாத வாழ்க்கைக்காகவும் வருந்துகிறேன்.


ஒரு சமையலறை, இரண்டு கோப்பைகள்

நாற்காலியின் முதுகில் உன் ஆடை

ஞாயிற்றுக்கிழமை மதியம் 

காரணமே இல்லாமல் ஏற்பட்ட சிறிய சண்டை.

பிறகு பேசாமல் வைக்கப்பட்ட ஒரு தேநீர்,

இரவில், தூக்கத்தின் நடுவே, 

அறியாமலேயே ஒருவரை ஒருவர் தேடும் இரண்டு கைகள்.


நடக்காதவற்றிற்கும் நினைவு இருக்கிறது என்பதை

உன்னால்தான் அறிந்தேன்.


நாம் வாழாத நாட்கள்கூட

சில நேரங்களில் என்னுள் வந்து முதுமையடைகின்றன.


நம்மை காலம் பிரித்த நாள் எனக்கு நினைவிருக்கிறது.

அன்று அதை நான் விதி என்று அழைக்கவில்லை.

அது ஒரு நாளங்கிழிந்த குருதிப் பெருக்கு. 


என் வாழ்க்கையின் ஒரு பகுதியை

யாரோ என்னிடம் கேட்காமல் வெட்டி எடுத்துச் சென்றதுபோல் இருந்தது.


ஆண்டுகள் சென்றன, கோபம் சோர்ந்தது 

கேள்விகள் சோர்ந்தன.

ஏன் என்ற சொல்லுக்கே வயதாகிவிட்டது

ஆனால் காயம் மட்டும் போகவில்லை.

அதற்குள் உன் மணத்தைத் தாங்கிய வெளிச்சம் இருந்தது

அப்போதுதான் புரிந்தது

சில காயங்கள் ஆறுவதில்லை, 

அவற்றுக்குள் நாம் வாழக் கற்றுக்கொள்கிறோம்.


ஒருகாலத்தில் நெஞ்சு கருகிய இடத்தில்

பின்னர் ஒரு சிறிய விளக்கை ஏற்றுகிறோம்.

அன்று அது கொலை, இன்று அது கோயில்.

அங்கே நான் கடவுளை வணங்கவில்லை.

ஒருகாலத்தில் இரண்டு மனிதர்கள்

ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தார்கள்

என்ற உண்மையை மட்டுமே வணங்குகிறேன்.


நான் காதலைப் பற்றி இப்போது அதிகம் அறிந்தவன் என்று சொல்ல முடியாது.

மாறாக, வயதாக வயதாக அதைப் பற்றி நான் அறிந்ததாக நினைத்த அனைத்தும்

என்னைவிட்டு விலகிக்கொண்டிருக்கின்றன.


இளமையில் காதல் என்றால் அடைதல் என்று நினைத்தேன்

பின்னர் அது ஒன்றாக வாழ்தல் என்று நினைத்தேன்

அதன்பின் ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்வது என்று நினைத்தேன்.


இப்போது


காதல் சில நேரங்களில்

இவற்றில் எதுவுமல்ல என்று தோன்றுகிறது.

ஒருவருடைய வாழ்க்கையில்

நாம் இல்லாதபோதும்,

அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று

இன்னும் விரும்ப முடிவதே காதலின் கடினமான வடிவமாக இருக்கலாம்.


அவருடைய மகிழ்ச்சியில் நமக்கு இடமில்லாவிட்டாலும்

அந்த மகிழ்ச்சி அழியக்கூடாது என்று நினைப்பது, 

அவர் நம்மை மறந்திருந்தாலும்

அவருடைய இரவுகள் அமைதியாக இருக்கட்டும் என்று விரும்புவது.


ஒருகாலத்தில் நமக்குச் சொந்தம் என்று நினைத்த கையை

வாழ்க்கை வேறு ஒரு கரையில் வைத்த பிறகும்,

அந்தக் கை குளிரக்கூடாது என்று

தொலைவிலிருந்து வேண்டிக்கொள்வது.


அப்படியானால்,


உன்னை நான் இன்னும் காதலிக்கிறேனா ? 

அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

ஏனெனில் சில உணர்வுகளுக்கு பெயர் வைத்தவுடன்

அவை தங்கள் பரப்பை இழந்துவிடுகின்றன.


இப்போது நீ என் காதலியா, நினைவா,

இழப்பா, ஒரு கடந்த காலமா ? 

எனக்குத் தெரியாது.


ஆனால் உலகில் எங்கோ

நீ இருக்கிறாய் என்ற எண்ணம் மட்டும்

சில இரவுகளில் இந்த உலகத்தை

எனக்கு இன்னும் சிறிது தாங்கக்கூடியதாக மாற்றுகிறது

அது போதும்.


ஒருநாள் ஒரு புகையிரத நிலையத்தில்

இரண்டு தண்டவாளங்களைப் பார்த்தேன்.

அவை ஒன்றையொன்று தொடவில்லை.

ஆனால் விலகவுமில்லை.


மலைகள் வந்தன, பாலங்கள் வந்தன.

மழை அவற்றை நனைத்தது, வெயில் அவற்றை எரித்தது.

ஆயிரக்கணக்கான மனிதர்கள்

அவற்றின் மேல் தங்கள் வருகைகளையும் பிரிவுகளையும் சுமந்து சென்றார்கள்.

ஆனால் அந்த இரண்டு இரும்புக் கோடுகளும்

ஒரே திசையை நோக்கி, ஒரே தொலைவைத் தாங்கி,

தொடாமல், விலகாமல் நீண்டுகொண்டிருந்தன.


அப்போதுதான்

நம்மை நினைத்தேன்.

நாம் சந்திக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நாம் சேர்ந்தோம் என்றும் சொல்ல முடியாது.

நாம் பிரிந்துவிட்டோம் என்று சொன்னால்

அதுவும் முழு உண்மை அல்ல.


நாம் ஒரே பயணத்தின் இரண்டு தண்டவாளங்கள்.

காலம் நம்மிடையே தனது புகையிரதங்களை ஓட்டிக்கொண்டே இருந்தது.


நாட்கள் கடந்தன, நகரங்கள் கடந்தன.

பிற மனிதர்கள் கடந்தார்கள், 

நமது இளமை கடந்தது.


ஆனால் எங்கோ,

எந்த வரைபடத்திலும் குறிக்கப்படாத ஒரு இடத்தில்,

நாம் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே

நீண்டுகொண்டிருந்தோம்.


ஒருநாள் நான் இருக்க மாட்டேன் 

நீயும் இருக்க மாட்டாய்

நம்மை அறிந்தவர்கள் இருக்க மாட்டார்கள்.

நாம் ஒருவருக்கொருவர் என்னவாக இருந்தோம் என்பதை

விளக்கக்கூடிய கடைசி மனிதனும்

இந்த பூமியிலிருந்து சென்றுவிடுவான்.


அப்போது நமது காதலுக்கு சாட்சி யார் ? 

புகைப்படங்களா? அவை மங்கும். 

கடிதங்களா ? அவை மக்கும்.

நினைவுகளா ? 

அவற்றைச் சுமந்த மூளைகளும்

ஒருநாள் மண்ணாகும்.


அப்படியானால்

நாம் உண்மையாக ஒருவரை ஒருவர் நேசித்தோம் என்பதற்கு

என்ன மீதமிருக்கும்?


ஒருவேளை….எதுவுமே இல்லை.

அதுவே அதன் அழகாக இருக்கலாம்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலத்திற்கு,

இரண்டு உயிர்கள் ஒருவருக்கொருவர் ஒளியாக இருந்தன.

பிரபஞ்சம் அதை பதிவு செய்யவில்லை.

விண்மீன்கள் தங்கள் வழியை மாற்றவில்லை.

கடல்கள் ஒரு அலையைக்கூட  அதிகமாக எழுப்பவில்லை.

வரலாறு நமது பெயர்களை எழுதவில்லை.


ஆனால் நாம் அறிவோம் 

ஒரு காலத்தில் இந்த அளவற்ற உலகத்தின் நடுவே

நான் உன்னை கண்டேன், நீ என்னைக் கண்டாய்.

அவ்வளவுதான்.

ஒரு மனித வாழ்விற்கு அது மிகச் சிறிய விடையமா ? 

எனக்குத் தெரியாது.


எனக்கு இப்போது தோன்றுவது 

ஒருவேளை அதுதான் எல்லாம்.


ஆகவே 

இந்தக் கடிதம் ஒருநாள் உன்னிடம் சென்றடைந்தால் 

என்னைத் தேடாதே 

நாம் வாழாமல் விட்ட வாழ்க்கையை

மீண்டும் நினைத்துப் கண்கள் பனிக்காதே 


சில அழகுகளை

அவற்றின் தொலைவிலேயே விட்டுவிட வேண்டும்.


நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்

எப்போதாவதொரு நீண்ட பயணத்தில் 

சாளரத்திற்கு வெளியே இரண்டு தண்டவாளங்கள்

மாலை வெளிச்சத்தில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்த்தால்,

ஒரு கணம் மட்டும் அவற்றைப் பார்.


என் பெயரை நினைக்க வேண்டாம் 

நம் கதையையும் நினைக்க வேண்டாம்.

அந்த இரண்டு இரும்புக் கோடுகள்

எவ்வளவு தொலைவு சென்றாலும்

ஒன்றையொன்று தொடாமலும், 

எவ்வளவு பிரிந்திருந்தாலும்

ஒன்றையொன்று விட்டுவிடாமலும் 

ஒரே இரவுக்குள்

நீண்டுகொண்டிருப்பதை மட்டும் பார்.


ஒருவேளை அந்தக் கணத்தில் 

நான் எங்கிருந்தாலும்

அதே தண்டவாளங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

ஒருவேளை இல்லை, அதுவும் பரவாயில்லை.

ஏனெனில் நம்முடைய கதை

நாம் மீண்டும் சந்திப்பதில் முடிவதில்லை.

நாம் சந்தித்தோம் என்பதிலேயே

அது முழுமையாகிவிட்டது.


ஒருநாள்

கடைசிப் புகையிரதமும் கடந்துபோகும், நிலையத்தின் விளக்குகள் அணையும்.

நமது பெயர்களைக் கடைசியாக நினைத்திருந்த மனிதனும்

தூங்கிவிடுவான், மழை பெய்து ஓயும்.

இரவு ஈரமான இரும்பின் மீது தன் கையை வைக்கும்.


அப்போது

யாருடைய வருகையையும் எதிர்பார்க்காமல், 

யாருடைய பிரிவையும் தடுக்காமல்,

ஒன்றையொன்று நோக்கியபடி,தொடாமல்,விலகாமல்,

இரண்டு தண்டவாளங்கள் மட்டும்

இருளுக்குள் தொடர்ந்து செல்லும்…



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக