Wednesday, 16 April 2025

விழுப்புண்ணில் தேச வரைபடம்..

துப்பாக்கி முனையின் கூரிய

கத்திகளால் கிழிக்கப்பட்ட நெஞ்சில்

விழுப்புண்களை ஏந்தி நிற்கும் என்

தேசத்தின் வரைபடம் சுமக்கிறேன்

ஒவ்வொரு காயமும்

என் தேசத்தின் பெயரைச் சொல்கிறது

-

எங்கள் இரத்தம் ஒரே நிறம்

எங்கள் மரணங்கள் ஒரே மொழி

நானும் என் தோழர்களும்

உறங்கும் கனவு ஒன்றே,

நில அபகரிப்பின்

எல்லைகளைக் கடந்த நாங்கள்

மண்ணுக்குப் பதிலாக

பெயர்களை மட்டுமே சுமக்கிறோம்

-

வேர்கள் பறிக்கப்பட்ட மரங்களாய்

தூரத்து நிலத்தில் அலைகிறோம்

ஆனால் துப்பாக்கிகளுக்கிடையே

பூத்த காயங்களில் இருந்து

ஒரு புதிய பாடல் முளைக்கிறது

-

என் தோழர்கள்

சிகரங்களைக் காட்டிலும் உயரமானவர்கள்

இப்போது புல்வெளிகளின் கீழ் கிடக்கிறார்கள்

ஆழ்ந்த மௌனத்தில் உறைந்த அவர்தம் குரல்கள்

காலத்தின் செவிப்பறையில் இன்னும் அதிர்கின்றன

-

இரவில் அவர்கள் நினைவுகளாக வருகிறார்கள்

பகலில் அவர்கள்

உறுதிமொழிகளாக நடக்கிறார்கள்

விடுதலையின் அகராதியில்

அவர்களது பெயர்கள்

வினைச்சொற்களாக உள்ளன

-

இங்கு நான் புலம்பெயர்ந்த நிழல்,

ஒரு மொழியில் இருந்து

மற்றொரு மொழிக்கு அகதியாய் அலைகிறேன்

தேசம் என்பது என் தோள்களிற் சுமக்கும்

நினைவுகளின் கூட்டுத்தொகை

எம் மாவீரர்களின் கண்களில் தெரிந்த எதிர்காலம்

-

நாங்கள் நிழல்களை விட அதிகமானவர்கள்

காயங்களை விட ஆழமானவர்கள்

மரணத்தை விட நிரந்தரமானவர்கள்

ஒரு குண்டின் வழியாக நுழைந்து

வரலாற்றின் வாசல் வழியாக வெளியேறினோம்

-

பகலின் வெளிச்சம்

எங்கள் இருளை அம்பலப்படுத்தவில்லை

குண்டுகளின் சத்தம்

எங்கள் மௌனத்தை அழிக்கவில்லை

இரத்தத்தின் கணிதம்

வெறும் எண்களுக்கு அப்பாற்பட்டது

ஒவ்வொரு துளியும் ஒரு புதிய நாளின் பிறப்பு

-

மரணம் நாங்கள் கடந்த ஒரு வாசல்

விடுதலை நாங்கள் கண்ட ஒரு கனவு

இடைப்பட்ட வெளியில்

நாங்கள் தத்துவங்களாக நிற்கிறோம்

-

காலம் என்ற அமைதியான சாட்சி முன்

நின்று கேட்கிறேன்

இந்த விழுப்புண்களுக்கு என்ன அர்த்தம் ?

என் தோழர்களின் மறைவுக்கு என்ன நியாயம் ?

அவர்களின் இல்லாமை

என்னை நிரப்பும் இந்த இருட்டுக்கு

என்ன பெயர் ?

-

மண்ணின் வாசனையில்

அவர்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளனர்

காற்றின் இசையில்

அவர்கள் இன்னும் பேசுகிறார்கள்

விதைகளாய் புதைந்தவர்கள்

வரலாற்றின் விடிவெள்ளியாய் மீள்கிறார்கள்

இதுவே விடுதலைப் போரின் தத்துவம்

-

தோழா..

உயிரைத் தவிர இனத்தின் விடுதலைக்கு

அள்ளிக் கொடுப்பதற்கு

இனி எதுவுமே உன்னிடமில்லை

என்றான பின்னும்

அதே சமூகமே உன்னைக் கண்டுகொள்ளாமல்

கடந்து செல்லலையும் சேர்த்து

தாங்கிக் கொள்வதன் பெயர் தான்

தியாகம்..

No comments:

Post a Comment