Saturday, 5 April 2025

திரும்பக் கூடும்..

வதைகளின் நினைவுகள் எனது தோலில்

அவர்களின் கோரமுகத்தை வரைந்துள்ளன

ஒவ்வொரு வடுவும் ஒரு கதை சொல்கிறது

நான் மரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக

கண்டங்களைக் கடந்தேன்

தேசங்களைத் தாண்டினேன்

-

உடைந்த என் உடல்

இந்த பனிப்பாறைகளில் தவழ்கிறது

ஆனால் என் கனவுகள்

என் மண்ணின் வெப்பத்தில் விளைகின்றன

அங்கே பனை மரங்கள்

என் வருகைக்காக காத்திருக்கின்றன

அங்கே என் காதலியின் கண்கள்

வீதிகளை நோக்குகின்றன

-

என் கைகளில் என்ன எஞ்சியுள்ளது

ஒன்றாய் நடந்த தோழர்கள் படங்கள்

மற்றும் நாங்கள் சேர்ந்து பாடிய

விடுதலையின் பாடல்கள் அவ்வளவுதான்

-

நினைவுகளின் சிறகுகளில் கனவுகளின் பாதைவழி

இரவில் நான் என் தாயகத்திற்கு திரும்புகிறேன்

அங்கே பூக்கும் பூவரசு மரங்களின் மணம்

இங்கே பனிக்காற்றின் குளிரை துடைக்கிறது

-

இந்த பனிபொழியும் தேசத்தில்

என் உடல் உறையலாம்

ஆனால் என் வார்த்தைகள்

என்றென்றும் என் மண்ணின் வெப்பத்தில்

உயிர்பெறும்

நான் இறந்தாலும்

அடுத்த தலைமுறைக்கு விடுதலையின் விதைகளாக

என் கவிதைகள் வாழும்

-

நாளை என் நாடு விடுதலை பெறுமா

கிழக்கிலிருந்து கதிரவன் உதிக்குமா

நான் அதைப் பார்க்காமல் போனாலும்

என் வார்த்தைகள் அந்த காலையை வரவேற்கும்

-

என் காதலியின் கைகள் என்னை தேடுகின்றன

எங்கள் இடையிலுள்ள பெருங்கடலிலும்

எல்லைகளிலும், தடுப்புச் சுவர்களிலும்

காதல் என்ற அந்த அற்புதமான பறவை பறக்கிறது

-

உயிரோடோ அல்லது வார்த்தைகளிலோ

என்றோ ஒருநாள்

நான் திரும்பி வருவேன்

அதுவரை

இந்த பனிப்பெருக்கிற்கிடையில்

என் தாயகத்தின் வெப்பத்தை

நான் மனதில் சுமக்கிறேன்..

No comments:

Post a Comment