Wednesday, 26 February 2025

பிரமை வழிச்சுருள்..

வாழ்வென்பது ஒரு நூலகம்

நமக்கும் நமக்கு முன்னும் பின்னும்

வாழ்ந்தவர்களின் கனவுகளை

அதன் நூல்களில் நாம் வாசிக்கிறோம்

-

என்னோடு ஒன்றாய்ப் படித்தவர்கள்

தொடர்பற்றுப் போனார்கள்

பயணத்தில் எதேச்சையாய்

சந்தித்தவர்கள் நண்பராகிறார்கள்

காதலித்தவள்

நீர்மேல் எழுத்தாய் மறைந்தாள்

முன்னறிமுகமில்லாதவள் நெருக்கமானாள்

-

அனைத்தும் முன்குறிக்கப்பட்டதோ

அல்லது தற்செயலின் விளையாட்டோ?

மாபெரும் கண்ணாடி பிரமைவழிச் சுருளில்

நாம் அனைவரும் தொலைந்தவர்களே

-

ஒவ்வொரு சந்திப்பும் பிரிவும்

எல்லையற்ற நூல்களில்

ஏற்கனவே எழுதப்பட்ட வரிகள்

நாம் வாசிப்பவர்கள் மட்டுந்தானா?

-

நினைவென்பது மற்றொரு கனவு

நிகழ்காலமும் மற்றொரு மாயை

ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு

நாம் நடக்கும் பாதை வெறும் நிழல்

-

உண்மையெனக் கருதுபவை அனைத்தும்

மறையும்போது தான் அறிகிறோம்

வாழ்வென்பது ஒரு கனவின் கனவு

அதில் காண்பதெல்லாம்

அந்தக் கனவின் நினைவுகள்..

No comments:

Post a Comment